பாருங்கய்யா.. பெல்ஜியம் பீட்டர் கூட களம் இறங்கி விட்டார்.. நம்ம தலைவர்கள் பலரை இன்னும் காணோம்!
மீட்பு பணியில் பெல்ஜியம் நபர் பீட்டர் களமிறங்கி உள்ளார்.
Recommended Video
சென்னை: "பாருப்பா... வெள்ளைக்காரர்கூட டெல்டா பக்கம் வந்துட்டாங்க... ஆனா இன்னும் நம்ம தலைவர்களை காணோமே" என்றுதான் பேச்சாய் இருக்கிறது.
அந்த ஊருக்கும் ஆளுக்கும் சம்பந்தமே இல்லாமல்தான் இருந்தார் அந்த மனுஷன். சத்தியமா நம்ம நாடு கிடையாது. பெல்ஜியம் நாட்டுக்காரராம். இவரு ரொம்ப வருஷமா சென்னையிலதான் தங்கி இருக்கார். பேரு பீட்டர் வான் கீட். இவர் ஒரு டிரெக்கிங் ஆர்வலர்.
அதாவது மலை ஏற்றப் பயிற்சியில் ரொம்ப ஈடுபாடு உடையவர். அதனால சென்னை டிரெக்கிங் கிளப் என்ற ஒரு அமைப்பை இதற்கெனவே தனியாக ஆரம்பித்து நடத்தி வருகிறார். இப்படி ஒரு அமைப்புக்கு நம் ஆட்களிடம் நல்ல வரவேற்பு. அதனால்தான் ஆயிரத்துக்கும் மேல இவருகிட்ட உறுப்பினராக இருக்கிறார்கள்.
இன்று மாலை ஆய்வை தொடங்கவுள்ள மத்திய குழு.. விரிவான பயணம் திட்டம் இதோ பாருங்க
சாக்கடை அள்ளுகிறார்
ஆனா இது இவருக்கு பிழைப்பு என்றாலும் மனசு வேறு. எங்கே, என்ன இயற்கை சீற்றம் வந்தாலும் நம்ம பீட்டரை அங்கே பார்க்கலாம். முகத்துக்கு எந்த முகமூடியும் போட்டுக்காம, கொஞ்சமும் முகம் சுளிக்காம, சாக்கடை அள்ளிக்கிட்டு இருப்பாரு. இப்படி உதவுவதற்கு இவர் தனியா வர்றது கிடையாது. கூடவே அவரது குழுவையும் கூட்டிட்டு வந்துடுவாரு. சென்னை வெள்ளத்தின்போது இவர் செய்த வேலையை பாராட்டாதவர்களே கிடையாது.
நடுரோட்டில் மரம்
இப்போ பீட்டர் டெல்டா பகுதிக்கு காரை எடுத்து கொண்டு வந்துட்டாரு. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செஞ்சிட்டு வர்றார். என்ன உதவி தெரியுமா? ரோடில் விழுந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் வேலைதான். நடுரோட்டில மரம் விழுந்து கிடக்கு, இன்னும் யாரும் சரிபண்ணலைன்னு- பீட்டர் கிட்ட அவர் நண்பர் சொன்னாராம்.
பள்ளத்தூரில் மும்முரம்
அவ்வளவுதான்... பீட்டர், மரம் அறுக்கும் இயந்திரத்தை கையோடு எடுத்து காரில் போட்டுக் கொண்டார். கூடவே மரத்தை அறுப்பதற்கு தேவையான ரம்பம், உள்ளிட்டவற்றையும் அள்ளி போட்டு கிளம்பி விட்டார். நேராக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சேதுபாவாசத்திரத்துக்கு வந்தார். பள்ளத்தூரில் விழுந்து கிடக்கும் மரங்களை வெட்டி ஒதுக்கும் பணியில் இறங்கிவிட்டார்.
பசி, பட்டினி
இப்படித்தான் 5 நாளா செஞ்சுக்கிட்டு இருக்கார். இருக்கிற ஜனங்களுக்கே அங்க சாப்பாடு இல்லை, தங்க இடம் இல்லை. இதில் பீட்டர் அங்க போய் என்ன பண்றார், என்ன சாப்பிடறார், எங்க தங்கறார் என்றே தெரியவில்லை. ஆனாலும் ஊருக்கும், நாட்டுக்கும் சம்பந்தமே இல்லாத ஒருத்தர் பசியும் பட்டினியுமாக கிடந்து உதவி செய்வதை நினைத்து மக்கள் கண்கலங்கி போய்விட்டனர்.
முக்கியமானவங்க?
பீட்டரிடம் பேச மொழி தெரியவில்லை என்றாலும் டெல்டா மக்களின் கண்ணீரின் அர்த்தம் பீட்டருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்! பெல்ஜியமே தஞ்சாவூரு பக்கம் வந்தாச்சு... ஆனா இன்னும் "முக்கியமானவங்களை" தான் காணோம்???