இந்தியாவுக்கே தலைகுனிவு.. பிரதமர் கண்டிக்கணும்.. ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்ட விவகாரத்தில் பாலபாரதி சுளீர்
சென்னை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை பார்த்து ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டது மோசமான நடவடிக்கை என்றும் இந்திய பிரதமர் இதுபோன்ற சம்பவங்களைக் கண்டிக்க வேண்டும் என்றும் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் அண்மையில் குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் அமைந்திருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 191 ரன்கள் எடுத்தது. அதையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, அந்த அணியின் வீரர் முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து, பெவிலியன் நோக்கி திரும்பினார். அப்போது ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களில் சிலர் அவரை நோக்கி, ஜெய் ஸ்ரீ ராம்' என கோஷமிட்டனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. இந்த விவகாரம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மைதானத்தில் இந்திய ரசிகர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து பலரும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். உத்வேகம் மிக்க விளையாட்டான கிரிக்கெட்டில், அரசியல் ரீதியிலான வெறுப்புகளை வெளிப்படுத்துவதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உலக அளவில் இந்த விவகாரத்தால் இந்தியாவிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி இந்த நிகழ்வைக் கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாலபாரதி, "அண்டைநாடான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை பார்த்து ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டது இந்திய நாட்டின் அரசியல் பண்பாட்டிற்கு ஏற்ற நடவடிக்கை இல்லை. ஆகவே இந்திய நாட்டின் பிரதமர் இதுபோன்ற சம்பவங்களை ஊக்குவிக்கக்கூடாது, கண்டிக்க வேண்டும். இந்தியாவின் கிரிக்கெட் போர்டு தலைமையும் இதைக் கண்டிப்பதோடு, இனி இதுபோன்ற சம்பங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications