4 வது நாளாக நாளையும் இலவச பயணம்... மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
Recommended Video
சென்னை: நான்காவது நாளாக பொதுமக்கள் மெட்ரோ ரயிலில் நாளையும் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இன்று 3 - வது நாளாக இலவச சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ரயிலில் பயணிகள் கூட்டம் இன்றும் நிறைந்து வழிந்தது .
மெட்ரோ ரயில் முதல் தடத்தில் ஒரு பகுதியான வண்ணாரப்பேட்டை முதல் - டிஎம்எஸ் வரை 10 கிமீ வரையிலான சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் ஞாயிற்று கிழமை தொடங்கி வைத்தார்.
வெகுவாக ஈர்த்தது
இதையடுத்து, பயணிகளை கவரும் விதமாகவும், பொதுமக்களிடையே மெட்ரோ ரயில் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று இரவு மெட்ரோ ரயிலில் பயணிகள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு சென்னைவாசிகளை வெகுவாக ஈர்த்தது.
கோளாறு
இதையடுத்து, நேற்று முன்தினம் காலை முதலே மக்கள் ரயில்நிலையத்தில் குவிய ஆரம்பித்தனர். ஆனால், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் 8.30 மணி முதல் 10.30 மணி வரை ரயில் நிறுத்தப்பட்டுவிட்டது. எனினும் கோளாறு சரிசெய்யப்பட்டு உடனே சேவை தொடங்கியது.
நின்றுகொண்டே பயணம்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். வண்ணாரப்பேட்டை முதல் டிஎம்எஸ் வரை, ரயிலுக்குள் உட்கார இடமில்லாவிட்டாலும் ஏராளமானோர் நின்று கொண்டே ரயில் பயணத்தை குதூகலத்துடன் ரசித்தவாறே இருந்தனர்.
இன்றும் இலவசம்
நேற்று மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. பொதுமக்கள் தந்த வரவேற்பை கண்ட, சென்னை மெட்ரோ நிர்வாகம், ரயிலில் பொதுமக்கள் 4 வது நாளாக இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவித்துள்ளது.
குவிந்து வருகின்றனர்
இதனால் சென்னைவாசிகள் உற்சாகமடைந்துள்ளனர். நாளையும் குடும்பத்தோடு மெட்ரோ ரயிலில் பயணிக்க ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.