ஆலோசிக்க வேண்டும்.. தமிழக மருத்துவ நிபுணர் குழுவுக்கு முதல்வர் அழைப்பு.. என்னவாக இருக்கும்?
சென்னை: மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள், காலை 11 மணிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். முழு ஊரடங்கு வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி மருத்துவ நிபுணர் குழு அப்போது தங்கள் கருத்தை தெரிவிக்கும் வாய்ப்பு உள்ளது.
Recommended Video
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்தபடி உள்ளது. அதிலும் தலைநகர் சென்னை நிலைமை படுமோசமாகிக் கொண்டே போகிறது.
இந்த நிலையில்தான், சென்னையில் மட்டுமாவது குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

முழு ஊரடங்கு இல்லை
நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இதுபற்றி கேட்டபோது, அதுபோன்ற எந்த ஒரு திட்டமும் தற்போது அரசிடம் இல்லை என்று தெரிவித்தார். மேலும், இரண்டு வாரங்கள் சென்னையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நான் உத்தரவிட்டதாக கூறி வாட்ஸ்அப் மூலமாக போலி தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அவ்வாறு தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

பிரதமர் ஆலோசனை
இது இப்போதைய நிலைமை. ஆனால் வருங்காலத்தில் எந்த மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றி முடிவெடுக்க வேண்டிய நிலையில் அரசு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வரும் 17ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது தமிழகத்தில், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி பிரதமரிடம் முதல்வர் விளக்கிக் கூற வேண்டிய தேவை உள்ளது.

மருத்துவ நிபுணர் குழு
இந்த நிலையில்தான், மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை மறுநாள் காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அல்லது ஊரடங்கு கெடுபிடி அதிகரிப்பு போன்ற விஷயங்களில் மருத்துவ நிபுணர் குழு உடன் கலந்து ஆலோசித்த பிறகுதான் முதல்வர் எப்போதுமே முடிவு எடுத்து வருகிறார். மாவட்டங்களை மண்டலங்களாக பிரித்து அவற்றுக்கு இடையே போக்குவரத்தை அனுமதிப்பது உள்ளிட்ட பல யோசனைகள் மருத்துவ குழுவினர் ஆலோசனை நடத்திய பிறகுதான் முதல்வரால் அறிவிக்கப்பட்டது.

முக்கியமான ஆலோசனை
இந்த நிலையில்தான் சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா, தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு குறைக்கப்பட்டு மேலும் விதிமுறைகள் அதிகரிக்கப்படுமா என்பது பற்றி எல்லாம் மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசிக்க உள்ளதாக தெரிகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மீன்வளத்துறை அமைச்சர் விஜயகுமார், சமீபத்தில் அளித்த பேட்டியின்போது சென்னையில் முழு ஊரடங்கு அமல் படுத்துவது பற்றி தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்திய பின்தான் முடிவெடுப்பார் என்று திட்டவட்டமாக தெரிவித்து இருந்தனர்.

மருத்துவ நிபுணர் குழு ஆலோசனை பின்னணி
இந்த நிலையில், மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை நடத்த இருப்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடியுடனான ஆலோசனை கூட்டத்திற்கு எந்த மாதிரியான செயல் திட்டங்களை முன்வைக்க வேண்டும் என்பது பற்றி தமிழகம் தயாராக இந்த கூட்டத்தை முதல்வர் கூட்டியுள்ளாரா, அல்லது ஊரடங்கு தளர்வுகளை இன்னும் நெறிப்படுத்துவது பற்றி முடிவெடுக்க மருத்துவர்கள் ஆலோசனையை அவர் பெறுகிறாரா என்பது திங்கள்கிழமை தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications