“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி
சென்னை: ராஜபாளையம் தொகுதியை எதிர்பார்த்திருந்து காத்திருந்த நடிகையும், அதிமுகவின் கொள்கை பரப்பு இணை செயலாளருமான கவுதமிக்கு இந்த முறையும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. அந்த தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கினார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், தான் ஏமாற்றத்தில் இருப்பதாக பரவும் தகவல்கள் வதந்தி என்று கவுதமி கூறியிருக்கிறார்.
கடந்த முறை ராஜபாளையத்தில் அதிமுகதான் போட்டியிட்டது. ராஜேந்திர பாலாஜி போட்டியிட்டிருந்தார். தோல்வியைதான் தழுவினார். இப்படி இருக்கையில், இந்த முறை எப்படியாவது ராஜபாளையத்தை கேட்டு வாங்குவது என்று கவுதமி திட்டமிட்டிருந்த நிலையில், அதிமுக தலைமை வேறு கணக்கு போட்டு தொகுதியை கை மாற்றிவிட்டது.

விளக்கம் கொடுத்த கவுதமி
இந்நிலையில், கவுதமி வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பகிர்ந்திருப்பதாவது, "நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி ஒதுக்கீட்டில் நான் வருத்தத்தில் உள்ளேன் என்பது போன்ற செய்தி என் கவனத்திற்கு வந்துள்ளது. இது ஒரு வதந்தி மட்டுமே என்று நான் திட்டவட்டமாக கூறுகிறேன். இந்த தேர்தல் நேரத்திலும் ஒருசில நபர்கள் உண்மையிலேயே வேலையில்லாமல் உள்ளனர் என்ற முடிவுக்கு மட்டுமே வர முடியும்.
நம்பிக்கை இருக்கு
மிகவும் அவசியமான ஆட்சி மாற்றத்தை கொண்டு வர, இந்த தேர்தலில் செயல்படுகளிலேயே எனது முழு கவனமும் உள்ளது மற்றும் எமது பொதுச் செயலாளர் புரட்சி தமிழர் அண்ணன் எடப்பாடியார் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தமிழகத்தை காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என்று கூறியிருக்கிறார்.
கவுதமியின் இரட்டை நிலைப்பாடு
சீட் இல்லை என்பதை கவுதமி ஏற்றுக்கொண்டதை போல தெரிந்தாலும் கடைசி வரியில் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இருக்கிறது என்று கூறியிருப்பதன் மூலம், தனக்கான வாய்ப்புக்காக காத்திருப்பதை கவுதமி மீண்டும் உறுதியாக தெரிவித்திருக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஏன் ராஜபாளையம்?
கவுதமி ஆந்திராவை பூர்வீகமாக கொ்ணடவர். ராஜபாளையம் தொகுதி என்பது, ராஜுக்கள் அதிகம் இருக்கும் தொகுதி. இவர்கள் தெலுங்கு பேசும் மக்கள். கி.பி.15-16ம் நூற்றாண்டில், விஜயநகர பேரரசு விரிவாக்கம் செய்யப்பட்டபோது இந்த மக்கள் ராஜபாளையத்தில் குடியேறினர். எனவே தெலுங்கை பூர்வீகமாக கொண்ட தனக்கு, இந்த மக்கள் ஆதரவளிப்பார்கள் என்று கவுதமி நம்பியிருந்தார். எனவேதான் இந்த தொகுதியில் போட்டியிட்ட திட்டமிட்டிருந்தார்.
கூட்டணிக்கு ஒதுக்கிய எடப்பாடி பழனிசாமி
இதற்காக விருப்பமனு கொடுத்து, நேர்காணலிலும் பங்கேற்று போட்டியிட அதிமுக தலைமையிடம் வாய்ப்பு கோரியிருந்தார். ஆனால், இந்த தொகுதியை ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு அதிமுக தலைமை ஒதுக்கிவிட்டது. எனவே, இந்த தொகுதியில் போட்டியிட முடியாத நிலை கவுதமிக்கு உருவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications