டெல்லி மேலிடத்தில் எல்லாத்தையும் சொல்வேன்.. சூர்யா சிவாவை கைது செய்யணும்.. கொதிக்கும் காயத்ரி
சென்னை: டெல்லி பாஜக மேலிடத்தில் என்னை அழைத்தால் தமிழக பாஜகவில் நடப்பதை ஒன்றுவிடாமல் சொல்லிவிடுவேன் என பாஜகவின் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு மற்றும் வெளிமாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக காயத்ரி ரகுராம் உள்ளார். இவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் அவர் கட்சியில் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கப்படுவதாகவும், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எந்த வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.
இந்த நிலையில் தன்னை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தது தொடர்பாக காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தரப்பு வாதத்தை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பையும் நடத்தியிருந்தார்.

களங்கம்
அதில் கட்சிக்கு நான் களங்கம் விளைவித்ததாக கூறி சஸ்பெண்ட் செய்தது மன அழுத்தத்தை கொடுக்கிறது. புகார் தொடர்பாக விளக்கமளிக்க நேரம் கொடுக்காமல் என்னை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள், என்னிடம் விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை. கட்சிக்காக நான் 8 ஆண்டுகள் கடுமையாக உழைத்துள்ளேன். மேலிடத்திற்கும் என்னை பற்றி தப்பு தப்பாக சொல்கிறார்கள்.

செல்வக்குமார்
அண்மையில் கட்சிக்கு வந்தவர்தான் செல்வக்குமார். அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பது வருத்தமாக இருக்கிறது. ஒரு பெண்ணை தவறாக பேசுவதை எப்போதும் ஏற்க முடியாது. என்னை பற்றி அவதூறாக பேசினால் நான் திருப்பி பதிலடி கொடுப்பேன். பாஜக மேலிடம் அழைத்தால் நிச்சயம் விளக்கம் அளிப்பேன்.

தமிழக பாஜக
தமிழக பாஜகவில் நடப்பதை தெளிவாக தெரிவிப்பேன். செல்வக்குமார் அறிவுசார் பிரிவின் துணைத் தலைவராக இருக்கிறார். இவர்கள் எல்லாம் சேர்ந்து கோவை க்ரூப் என்று ஒரு குழு வைத்திருக்கிறார்கள். அவர்கள் நண்பர்களா, ஊழியர்களா என சொல்ல முடியாது. அவர்கள் வார் ரூம் போல ஒன்றை நடத்துகிறார்கள். அங்கிருந்துதான் நான் குறிவைக்கப்பட்டேன்.

அண்ணாமலை
அவர் ஏன் என்னைக் குறி வைக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் செயலாளர் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்ட பிறகு அப்படியெல்லாம் எனக்கு பொறுப்பே கொடுக்கப்படவில்லையென செல்வக்குமார் குழப்பத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார். செல்வக்குமார் அண்ணாமலைக்காக வேலை பார்ப்பதாகத்தான் கேள்விப்பட்டேன். செல்வக்குமார் போன்றவர்கள் சக்தி வாய்ந்த நபர்களாக செயல்படுகிறார்கள். அந்த நபர் என்ன சொன்னாலும் செய்வார்கள். கட்சியில் இந்த விவகாரத்தை நேரடியாகச் சொல்ல எனக்கு நேரம் கொடுக்கப்படவில்லை.

காசி தமிழ் சங்கமம்
காசியில் நடக்கும் தமிழ்ச் சங்கமத்திற்கு எங்களை அழைக்கவே இல்லை. நான் அந்த துறையின் தலைவர் நான் சம்பந்தப்பட்ட துறையின் நிகழ்ச்சிக்கே என்னை அழைக்காததால் அது குறித்து நான் ஒரு ட்வீட் போட்டேன். மற்றபடி கட்சிக்கு எதிராக நான் எதையும் சொல்லவில்லை. சூர்யா சிவாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். என்னை விசாரிக்க நேரம் கொடுக்கவில்லை. ஆனால் அவரை விசாரிக்க நேரம் கொடுக்கிறார்கள்.

சூர்யா சிவா
சூர்யா சிவாவை கைது செய்ய வேண்டும். டெய்சிக்கு வந்த நிலை யாருக்கும் வரக் கூடாது. அண்ணாமலை என்னை குறி வைப்பது குறித்து தனக்குத் தெரியாது என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். மேலும் நான் பாஜகவில் தொடர்ந்து நீடிப்பேன். பாஜக மேலிடம் அழைத்தால் நாள் 1 முதல் நடந்தது என்ன என்பது குறித்து கூறுவேன் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications