தங்க நகை வியாபாரிகளுக்கு இடி போல் இறங்கிய மோடியின் அட்வைஸ்.. ஏற்கனவே 40% சரிவு.. இப்போ இது வேறயா?
சென்னை: தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி விடுத்துள்ள கோரிக்கை நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.. இதனால் 5 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று நகை வியாபாரிகள் சம்மேளனம் மிகுந்த கவலை தெரிவித்துள்ளது.. தங்கம் இறக்குமதி மற்றும் பெட்ரோல் பயன்பாட்டைக் குறைக்க பிரதமர் அறிவுறுத்தியுள்ள சூழலில், அதன் பின்னணியில் உள்ள அரசியல் மோதல் மற்றும் தொழில்முனைவோரின் வேதனையான குரல் குறித்த சுருக்கமான தகவல்களை இங்கே காண்போம்.
நாட்டின் தற்போதைய பொருளாதார சூழலை முன்னிட்டு, பொதுமக்கள் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்.

தங்கம் வாங்காதீங்க
குறிப்பாக, சர்வதேச அளவில் நிலவும் பதற்றமான சூழலால், திருமண விசேஷங்களுக்கு அடுத்த ஒரு வருஷத்துக்கு தங்கம் வாங்குவதைத் தற்காலிகமாக மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
இதுமட்டுமல்லாமல், பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைச் சிக்கனப்படுத்த வேண்டும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் மற்றும் உரங்களின் தேவையைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியதுடன், பொதுமக்கள் சொந்த வாகனங்களை விட பொதுப் போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல விஷயங்களை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
12 வருட சாதனை இதுதானா
பிரதமரின் இந்த ஆலோசனைகளை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.. ஒரு பிரதமர் சொல்ல வேண்டிய பேச்சாக இது தெரியவில்லை என்றும், கடந்த 12 ஆண்டுகால ஆட்சியின் தோல்வியைத்தான் இது காட்டுகிறது என்றும் அவர் தனது எக்ஸ் தளத்தில் நேற்றைய தினம் பதிவிட்டார்.
தங்கம் வாங்காதீர்கள், பெட்ரோல் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள் எனப் பிரதமர் சொல்வது அட்வைஸ் கிடையாது; அது அவரது நிர்வாகத் திறமையின்மையால் ஏற்பட்ட நெருக்கடி என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்..
நகை வியாபாரிகள் வேதனை
பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல், அதன் சுமையைப் பொதுமக்கள் மீது சுமத்துவது முறையல்ல என்றும், மக்கள் எதை வாங்க வேண்டும் எங்கே செல்ல வேண்டும் என்று தீர்மானிக்கும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது வேதனைக்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.. அரசின் தவறான முடிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை ஈடுகட்ட, பொதுமக்களை தியாகம் செய்ய சொல்வது நியாயமற்றது என்று ராகுல் காந்தி காட்டமாக தெரிவித்துள்ளார்..
பிரதமரின் இந்த அறிவிப்பு நகை விற்பனைத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இதனால் நாடு முழுவதும் சுமார் 5 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு நகை வியாபாரிகள் கூட்டமைப்பினர் கவலை தெரிவித்துள்ளனர். தங்கம் விலையேற்றம் மற்றும் போர் பதற்றச் சூழலால் ஏற்கனவே விற்பனை சுமார் 40 சதவீதம் சரிந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு இந்தத் தொழிலை முழுமையாக முடக்கும் என்று வேதனை தெரிவிக்கிறார்கள்..
5 கோடி மக்களின் வாழ்க்கை பாதிப்பு
இது குறித்து தங்க வியாபாரிகள் சம்மேளனத்தை சேர்ந்த சபரிநாத் சொல்லும்போது, "தங்க நகை உற்பத்தித் துறையில் மட்டும் சுமார் இரண்டரை கோடி பேர் உள்ளனர்.. அன்றாடம் வேலை செய்தால் தான் அவர்களுக்கு ஊதியம் கிடைக்கும்.. இத்தகைய நிலையில் தங்கம் வாங்க வேண்டாம் என்று பிரதமர் சொல்வது 5 கோடி மக்களின் வாழ்க்கையையே பாதிக்கும் விஷயமாகும்" என்று வேதனை தெரிவித்தார்..
அதனால் தங்கம் குறித்தான தனது சமீபத்திய அறிவுறுத்தலை பிரதமர் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்பதே நகை வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது..!!












Click it and Unblock the Notifications