பஸ்ஸில் இப்படியெல்லாம் மாற்று திறனாளிகளை ட்ரீட் பண்ணாதீங்க! டிரைவர், கண்டக்டருக்கு தமிழக அரசு உத்தரவு
சென்னை: தமிழக போக்குவரத்து துறை, நடத்துனர், ஓட்டுனர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கியிருப்பதுடன், இதுகுறித்த சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அது என்ன?
பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதில், தமிழக போக்குவரத்து துறை அதிக கவனம் செலுத்தி வருகிறது.. இதையொட்டியே, பேருந்து ஓட்டுநர்களுக்கும், நடத்துநர்களுக்கும், போக்குவரத்து துறை அவ்வப்போது அறிவுரைகளை வழங்கி வருகிறது..

போக்குவரத்து துறை: சமீபத்தில்கூட, சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அறிவுரை ஒன்றினை வழங்கியிருந்தார்.. பள்ளி மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும், மாநகர பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும், அரசு பேருந்துகளில் பயணிகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுரைகளை ஒரு சுற்றறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.
அந்த சுற்றறிக்கையில், "மாணவர்கள் படிகளின் அருகே உள்ள ஜன்னல் கம்பியை பிடித்து தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும், முன் மற்றும் பின் பக்கங்களில் உள்ள படிக்கட்டுகளின் அருகே உள்ள ஜன்னல்களுக்கு கண்ணாடி நிரந்தரமாக பொருத்த வேண்டும். ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும், அறிவுரைக்கு பின்னும் ஆபத்தான பயணம் மேற்கொண்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் தரவேண்டும்" என்பது உட்பட இன்னும் ஏராளமான விஷயங்களை வலியுறுத்தியிருந்தார். அறிவுரைகளை கூறியிருந்தார்.
மாற்றுத் திறனாளிகள்: இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளிடம் மனிதாபிமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழக போக்குவரத்து துறை அறிவுறுத்தியிருக்கிறது.
இதுகுறித்து, அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. போக்குவரத்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் உள்ளதாவது:
அறிவுறுத்தல்கள்:
- மாற்றத்திறனாளிகள் பேருந்துகளில் ஏறும் பொழுதும் இறங்கும் பொழுதும் தேவைப்பட்டால் மனிதாபிமான முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகளை பேருந்தில் கண்ணியத்துடன் நடத்த வேண்டும், மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கக் கூடாது.
- மாற்றுத்திறனாளிகள் அமரும் இருக்கைகளுக்கு மேல் உள்ள ஸ்டிக்கர்கள் சரியான முறையில் ஒட்டப்பட்டு, அவர்கள் அமர்ந்து பயணம் செய்ய எளிதாக்க வேண்டும்.
- ஸ்டிக்கர் கிழிந்த நிலையிலோ, மங்கிய நிலையிலோ இருந்தால் புதிய ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கையில் தேவை நேரும் போது அமர்ந்து பயணிக்க ஏற்பாடு செய்து தர வேண்டும்.
- எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காமல், தக்க மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கும் போக்குவரத்து துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
சலுகைகள்: ஏற்கனவே, தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பார்வை மாற்றுத்திறனாளிகள் தாங்கள் ஏறும் இடத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டணமில்லாமல் பயணிக்கலாம். அதற்கு மேல் உள்ள தூரங்களுக்கு 75% கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது. மீதி 25% கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.
அதேபோல, பழைய பயண அட்டையை காண்பித்து பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்க மாற்றுத் திறனாளிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், மாற்றுத்திறனாளிகளை கண்ணியத்துடனும், மனிதாபிமானத்துடனும் நடத்த வேண்டும் என்று போக்குவரத்து துறை பிறப்பித்துள்ள இந்த உத்தரவானது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications