அடம்பிடிக்கும் ஆளுநர்! விஜய்க்கு சிபிஐ, விசிக என வரிசை கட்டும் சப்போர்ட்! மாறும் களம்!
சென்னை: ஆளுநரை சந்தித்த விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார். ஆனால், இதுவரை ஆளுநர் விஜய்க்கு அழைப்பு விடுக்காத நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் விஜய்க்கு ஆதரவாக களத்தில் இறங்கி உள்ளன. மட்டுமல்லாது ஆளுநர் மாளிகைக்கு முன்பு விஜய்க்கு ஆதரவாக இளைஞர்கள் திரண்டதால் தமிழ்நாட்டின் களம் மாறியிருக்கிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் மேஜிக்கை நடத்தி காட்டியிருக்கிறார். ஏறத்தாழ கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகளை ஓரம் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது தவெக. ஆனாலும் ஆட்சி அமைக்க போதுமான பெரும்பான்மை இல்லை.

இருப்பினும், பெரும்பான்மை இல்லாமல் இதற்கு முன்னர் பல மாநிலங்களில் ஆட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. பெரும்பான்மையை நிரூபிக்க டைம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு ஆதரவு என்பதை காட்ட வேண்டிய இடம் சட்டமன்றம்தான், ஆளுநர் மாளிகை இல்லை என்று நீதிமன்ற தீர்ப்புகள் கூறியிருக்கின்றன.
இதெல்லாம் தெரிந்தும் ஆளுநர் விஜய்யை அழைத்து ஆட்சி அமைக்க சொல்லாமல் இருக்கிறார். இது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்திருக்கின்றன.
சிபிஐ மாநில செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், விஜய்யை ஆட்சி அமைக்க விடாமல் இருக்கும் ஆளுநரின் செயல் கண்டனத்திற்கு உரியது என்று தெரிவித்திருக்கிறார்.
"தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 உறுப்பினர்களை வழங்கி, அதனை தனிப் பெரும் முதன்மை எண்ணிக்கை கொண்ட கட்சியாக மக்கள் தேர்வு செய்துள்ளனர். இதன் அடிப்படையில் தவெக தலைவர் திரு சி.ஜோசப் விஜய், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரியுள்ளார். பதவி ஏற்புக்கு முன்பு தவெக, தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
தனிப் பெரும் எண்ணிக்கை கொண்ட தவெக, தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க ஆளுநர், அரசியலமைப்பு சட்டப்படி அவகாசம் தர வேண்டும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த எஸ்.ஆர். பொம்மை வழக்கு உட்பட பல வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஆளுநர், தவெக தனது பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க வாய்ப்பளித்து அரசியலமைப்பு சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் உணர்வை மதித்து நடக்க வேண்டும்" என்று விஜய்க்கு சப்போர்ட் செய்திருக்கிறார்.
திருமாவளவன்
சிபிஐ தவிர, திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனும் விஜய்க்கு ஆதரவாக பேசியிருக்கிறார். "விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், பெரிய கட்சி என்பதன் அடிப்படையில் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். எனவே ஆளுநர் அனுமதிக்க வேண்டும். ஆளுநரிடம் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆளுநர் அப்படி கேட்கவும் முடியாது. எனவே விஜய்க்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
அதேநேரம் ஆதரவு கேட்ட விஜயின் கோரிக்கையை புறந்தள்ளவில்லை. எங்களுக்கு என நடைமுறை இருக்கிறது. அவசரப்பட முடியாது" என்றும் கூறியிருக்கிறார்.
கமல்ஹாசன் ஆதரவு
சிபிஐ, விசிக போலவே மக்கள் நீதி மய்யமும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றுள்ளது. அவரை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது தமிழ்நாட்டு மக்களின் ஆணையை அவமதிப்பதாகும். 233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருக்கிறார்கள். இது மாநிலத்திற்கு நேரும் அவமானம்; மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம்.
தீர்ப்புக்கு மரியாதை வேண்டும்
'பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல' என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. நான் பேசிக்கொண்டிருப்பது கட்சி அரசியல் அல்ல. ஓர் இந்தியக் குடிமகனின் கொள்கைக் குரல் இது. தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு மரியாதை கிடைத்தே ஆகவேண்டும்" என்று கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
போராட்டத்திற்கு தயாராகும் தமிழ்நாடு
மறுபுறம், ஆட்சி அமைக்க விஜய்க்கு அனுமதி வழங்க தாமதப்படுத்துவதை கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்த தவெகவினர் திட்டமிட்டு வருகின்றனர். எனவே சென்னை மெரினா உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆளுநர் மாளிகைக்கு வெளியில் தாவெகவினர் ஆளுநருக்கு எதிராக வாசகங்களை எழுதி பதாகைகளை பிடித்து எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். எனவே ஆளுநரை கண்டித்து மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.












Click it and Unblock the Notifications