மிஸ்ஸான திராவிட திருநாடு..ஸ்டாலினுடன் கைகோர்த்த எடப்பாடி! ஆளுநருக்கு தொடர்பில்லை.. திடீர் விளக்கம்!
சென்னை: சென்னை டிடி தொலைக்காட்சியில் ஆளுநர் ரவி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்ட போது, 'திராவிட நல் திருநாடும்’ என்ற வரி விடுபட்டதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு எந்த தொடர்புமில்லை என ஆளுநரின் ஊடக ஆலோசகர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சி சார்பில் இந்தி மாத கொண்டாட்ட நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியவர்கள் ”தெக்கணமும் அதிர்ச்சிறந்த திராவிட நல் திருநாடும்” என்ற வரிகளை விட்டுவிட்டு பாடினார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஆளுநரை திருப்தி படுத்துவதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு ’திராவிட நல் திருநாடும்’ என்ற வார்த்தையை விட்டு விட்டு பாடியதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின்”ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.
இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்! திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!" என கூறியிருந்தார்.
மேலும், இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”இன்று சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் மேதகு ஆளுனர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெருமைக்குரிய தமிழ்தாய் வாழ்த்து பாடும் பொழுது அஃதில் வரக்கூடிய "தெக்கனமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டது மாபெரும் தவறாகும். இச்செயல் மிகவும் கண்டனத்திற்கு உரியது.
திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி! #திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி! திராவிடம் என்ற சொல் உலகின் தொன்மையான நாகரீகத்தின் குறியீடு! தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும்.” என கூறினார். மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை டிடி தொலைக்காட்சி குழுவுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதை அடுத்து இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள டிடி தொலைக்காட்சி,”ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியின் போது வயதானவர்கள் மற்றும் பன்மொழி பேசுபவர்கள் முன் அனுபவம் இன்றி பாடியதால் பதற்றத்தில் திக்கியதாகவும் இதன் காரணமாகவே குழப்பம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இதுதொடர்பாக ஆளுநரின் மீடியா அட்வைஸர் திருஞானசம்பந்தம் அளித்துள்ள விளக்கத்தில்,” ஆளுநர் தூர்தர்ஷன் சென்னை அமைப்பு மூலம் நடத்தப்பட்ட, ஹிந்தி மாத நிறைவுத்திருவிழா மற்றும் தூர்தர்ஷன் சென்னை தங்க விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடிய கலைஞர்கள் தவறுதலாக 'திராவிட’ எனும் சொல்லைக் கொண்ட வரியை தவறவிட்டனர்.
இந்த விவகாரம் உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆளுநர் நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தவிர அவருக்கு, அவரது அலுவலகத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை. ஆளுநர் தமிழுக்கும், தமிழகத்தின் உணர்வுகளுக்கும் மிகுந்த மதிப்பை வழங்குகிறார், மேலும் அவற்றை எப்போதும் உயர்ந்த நிலையில் வைத்துள்ளார்” என கூறியுளார்.












Click it and Unblock the Notifications