ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்.. வசந்தகுமார் மறைவிற்கு தமிழிசை இரங்கல்!
சென்னை: ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன், வசந்த் & கோ என்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பலபேருக்கு பணிகொடுத்த தருமம்கூட உங்களை காப்பாற்றவில்லையே என மனம் பதைபதைக்கிறது என்று எம்பி வசந்தகுமார் மறைவிற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மூத்த எம்பிக்களில் ஒருவரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கன்னியாகுமரி எம்பி வசந்த குமார் இன்று காலமானார். கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி இவர் உடல்நிலை நலிவடைந்தது. இதையடுத்து இன்று மாலை இவர் மரணம் அடைந்தார். இவரின் மறைவிற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழிசை சௌந்தராஜன் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தனின் மகள் ஆவார்.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 28, 2020
குமரி ஆனந்தனின் சகோதரர்தான் வசந்த குமார். இந்த நிலையில் தனது சித்தப்பாவின் மறைவிற்கு தமிழிசை சௌந்தராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்,
சித்தப்பா !
நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது...
என் சிறு வயது முதல் அவருக்கு திருமணம் வரை ஒன்றாகவே வளர்ந்தோம்...
அப்பா குமரி அனந்தனின் அரசியல் தாக்கம் இரண்டு பேரிடமும் இருந்தது ஆனால் வேறு வேறு பாதையில் பயணித்தோம்...
குமரியில் பிறந்து இமயம் வரை பரவிய கறுப்புத் தமிழர்.. எம்பி வசந்தகுமார் மறைவிற்கு வைரமுத்து இரங்கல்!
இயக்கம் வேறாக இருந்ததால் இணக்கமாக இல்லையே தவிர இரத்தப்பாசம் இருவரிடமும் உண்டு,
தூரத்தில் இருந்தே அவரின் சுறுசுறுப்பையும்,துருதுருப்பையும் கண்டு வியந்திருக்கிறேன்...
சிறுவயதில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது ,சண்டையிட்டது எல்லாம் நினைவிற்கு வருகிறது...
வசந்த் & கோ என்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பலபேருக்கு பணிகொடுத்த தருமம்கூட காப்பாற்றவில்லையே என்று மனம் பதைபதைக்கிறது...
கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும் ...
கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது...
ஆளுநராக இருந்தாலும்
அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்...
Recommended Video
என்று தமிழிசை சௌந்தரராஜன் மிகவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.