எடப்பாடிக்கு ஷாக்.. தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ்.. லிஸ்ட்டில் உதயகுமார் பெயர் இல்லை
தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார் என்று இன்று தெரிந்துவிடும்
சென்னை: தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ்தான் என்பதை சபாநாயகர் அப்பாவு உறுதி செய்துள்ளார்.. சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் பட்டியலில் ஆர்.பி. உதயகுமார் பெயர் இடம்பெறாதது, எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.. கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவுக்கும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் மறைவுக்கும் அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.
கோவைத்தங்கம் உள்ளிட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவு குறித்தும் இரங்கல் தெரிவிக்கப்படும். அதன்பிறகு சட்டசபையின் அன்றைய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படும்.

ஸ்பீக்கர்
இதன் பிறகு 11 மணி அளவில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும்.இந்த கூட்டத்தில் சட்டசபை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்படும். அனேகமாக 3 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது... அதேசமயம், அதிமுகவில் ஒற்றை தலைமை தலைதூக்கி உள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்க போகிறதோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

லெட்டர்
அதிமுகவில் இருவரும் ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கிக் கொண்டதோடு இதுகுறித்து சபாநாயகருக்கும் கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.. எடப்பாடி பழனிசாமி கொடுத்த கடிதத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்கிவிட்டதாகவும் அதற்கு பதிலாக, ஆர்பி உதயகுமாரை எதிர்கட்சி துணைத்தலைவராக தேர்ந்தெடுத்து உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.. எனவே, சட்டசபையில் ஓபிஎஸ் உட்கார்ந்த இருக்கையை உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என்றும், அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற முறையில் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்க தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கடிதம் கொடுத்து உள்ளனர்.

எடப்பாடி செக்
ஆனால், இதற்கு ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.. அதுமட்டுமின்றி சட்டசபை நிகழ்வுகளில் கட்சி சார்பில் முடிவெடுக்கும்போது, தன்னை கலந்து பேசிதான் முடிவெடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் சபாநாயகருக்கு ஏற்கனவே கடிதம் ஒன்றையும் தந்துள்ளார்.. மேலும், தான் இன்னமும் அதிமுக ஒருங்கிணைப்பாளராக நீடிப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்... எனவே, எடப்பாடி பழனிசாமி-ஓபிஎஸ் விவகாரத்தில் சபாநாயகர் என்ன முடிவெடுப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கிளைமேக்ஸ்
ஓபிஎஸ் இருக்கை மாற்றி அமைக்கப்படுமா? உதயகுமாரை சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவராக சபாநாயகர் அங்கீகரிப்பாரா? அப்படி அங்கீகரிக்காவிட்டால், அதிமுக எம்எல்ஏக்கள் என்ன செய்ய போகிறார்கள்? என்ற சந்தேகமெல்லாம் எழுந்துள்ளது.. ஒருவேளை ஓபிஎஸ் இருக்கையை மாற்றி அமைக்காவிட்டால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், சட்டசபையை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.

பயங்கர டென்ஷன்
ஒருவேளை இருக்கை மாற்றப்பட்டால், பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. எனினும், சபாநாயகர் அப்பாவு முடிவு செய்த பிறகுதான், சட்டசபையில் அவர்களுக்கான பதவி மற்றும் இருக்கை உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதால், இதுதொடர்பாக 2 தரப்பிலுமே கருத்துகள் வைக்கப்படலாம் என்றே எதிர்பார்ப்பும் ஏற்பட்டு வந்த நிலையில், சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றுள்ளது. சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் பட்டியலில் ஆர்.பி. உதயகுமார் பெயர் இடம்பெறாதது, எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications