விஜய் வென்றால் மகிழ்ச்சி? எடப்பாடிக்கு செல்வாக்கு இல்லை: கட்சி மாறும் புகழேந்தி?
சென்னை: வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்தான் 2வது இடத்தில் இருப்பார் என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்திருந்த போது அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் புகழேந்தி. அப்போது அன்புமணி ராமதாஸ் தாங்கள் கூட்டணியில் இல்லை என்றால் அதிமுக வெற்றி பெற்றிருக்காது என்று பேசியிருந்தார். அதற்கு மறுப்புத் தெரிவிக்கப் போய் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியைக்கூட இழக்கவேண்டிய நிலை புகழேந்திக்கு ஏற்பட்டது.

அதன்பின்னர் ஒபிஎஸ் அணியிலிருந்தார். பின்னர் அங்கிருந்தும் வெளியேறினார். பல மாதங்களாக அதிமுகவை ஒருங்கிணைக்கப் பல முயற்சிகளைச் செய்தார். ஆனால், இவரது செயலுக்கு எந்தப் பலனும் இதுவரை கிடைக்கவில்லை. உண்மையில் அதிமுக ஒன்றிணையுமா? அதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்பது பற்றி மனம் திறந்து பேசிய உள்ள புகழேந்தி, 'அதிமுக உண்மையில் ஒருங்கிணையுமா என்பதற்கு விடை தெரியவில்லை. ஏனென்றால் யாரும் ஒத்துழைக்கவில்லை. எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்' என்று பேசியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், "எடப்பாடி பழனிசாமி இறங்கி வர மறுக்கிறார். அவர் கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் மற்றவர்களை எளிதாக ஒருங்கிணைத்துவிடலாம். அதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. திடீரென்று சசிகலா வருகிறார். 'இனிமேல்தான் என் ஆட்டத்தைப் பார்க்கப் போகிறீர்கள்' என்கிறார். பிறகு காணாமல் போய்விடுகிறார். அவருக்குக் கடிதம் கூட எழுதினேன். எந்தப் பலனும் இல்லை. நானே இப்போது நம்பிக்கை இழந்துவிட்டேன்.
எடப்பாடி திருந்துவதாகத் தெரியவில்லை. ஜெயலலிதா சிறைக்குச் சென்றபோது ஜாமீன் கொடுத்தவன் நான். என் சொத்துகளை எல்லாம் ஜாமீன் போட்டு அவரை வெளியே கொண்டுவந்தேன். சசிகலாவுக்கும் ஜாமீன் கொடுத்தவன் நான். என்னைத் தெருவில் போகிறவர் என்று எடப்பாடி சொல்கிறார். ஒபிஎஸை நம்பி சென்றேன். அவருடன் 2 ஆண்டுகள் வீணாகப் போய்விட்டது. சசிகலாவை நேரில் சந்தித்து 3 முறை பேசினேன். அவர் ஒருங்கிணைய ஆர்வம் காட்டவே இல்லை. என்னை அதைப் பற்றி அழைக்கவே இல்லை. ஆகவே வெறுத்துப் போய்விட்டேன்.

இன்னும் தேர்தலுக்கு 1 வருடம்தான் உள்ளது. விஜய் அரசியல் வருகை நிச்சயம் தமிழக சட்டசபைத் தேர்தலில் ஒரு மாற்றத்தை உருவாக்கும். இளம் தலைமுறை கூட்டம் அவர் பின்னால் இருப்பதைப் பார்த்தேன். விஜய்க்கு வீட்டுக்கு ஒரு ஓட்டு நிச்சயம் கிடைக்கும். கள ஆய்வில் அதை உணர்ந்தேன். விஜய் வரும் காலத்தில் அதிமுக தேய்ந்து வருகிறது. 2 கோடி உறுப்பினர் என எடப்பாடி சொல்கிறார். 82 லட்சம் ஓட்டுதான் கிடைத்துள்ளது. 7 இடத்தில் டெபாசிட் போய்விட்டது. 2 கோடி உறுப்பினர் பட்டியலை வெப்சைடில் ஏற்றவேண்டியதுதானே?
பலரும் அதிமுக வாக்குகளை விஜய் அறுவடை செய்வார்கள் என்கிறார்கள். முன்பே கட்சி தேய்ந்துவருகிறது. விஜய் மீது எந்தக் குற்றமும் சொல்ல முடியாது. அவர் புதியதாக அரசியலுக்கு வருகிறார். அவர் பெரியாரை முன்னிறுத்துகிறார். அதில் எனக்கு மகிழ்ச்சி. அதிமுக பலவீனமாக உள்ளது. அதை வைத்து பாஜக உள்ளே வர முயல்கிறது. நான் திராவிட இயக்க உணர்வு கொண்டவன். பாஜகவை வீழ்த்தி விஜய் வந்தால் சந்தோசப்படுவேன். அவர்தான் 2வது இடத்திற்கு வருவார். எடப்பாடி 3-வது இடத்திற்கு 2026இல் தள்ளப்படுவார். ஆகவே, இனி அதிமுகவைக் காப்பாற்ற முடியாது. ஒரு மாதத்தில் நான் எடுக்கப் போகும் முடிவு வேறாக இருக்கும்" என்று பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications