2 மேட்டர்.. தமிழகத்தில் அடுத்த 2 வாரங்கள் இப்படித்தான் இருக்கப்போகிறதாம்.. வானிலை மையம் தகவல்..!
இன்று முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியின், வானிலை மற்றும் மழை நிலவரம் குறித்து, 2 விதமான தகவல்களை சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது..
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது... ஆனாலும் வழக்கமான மழை காணப்படவில்லை.. போதிய அளவு மழை பெய்யாத நிலையில், அவ்வப்போது பனியின் தாக்கமும் பெருமளவில் காணப்படுகிறது.
வழக்கமாக பனிப்பொழிவு தொடங்கி விட்டால், மழை குறைந்து விடும் என்பது இயல்பு.. ஆனால் இப்போது தற்போது பருவம் தவறி மழை, பனிப்பொழிவு காணப்பட்டாலும் மழையும் அடிக்கடி பெய்து வருகிறது.

முடங்கியது
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பலமாக கொட்டியது.. சென்னை உட்பட பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.. அதிலும், சீர்காழியில் வரலாறுகாணாத அளவில் பெய்த கனமழை காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது... பருவமழை தொடக்கத்தில் அதிக மழைப்பொழிவை தந்த நிலையில், அந்த மழையின் அளவு தற்போது குறைந்துள்ளது... அதேசமயம், 2 நாட்களுக்கு முன்பு சென்னை வானலை ஆய்வு மையம், தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது..

காரைக்கால்
அதன்படி, நேற்று முதல் அதாவது 25ம் தேதிமுதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இதுகுறித்து வெளியிட்டிருந்த அறிக்கையில், தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த 23-ம் தேதி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தின் மேல் நகர்ந்து 24-ம் தேதி காலை வலுவிழந்தது.. 25.11.2022 முதல் 28.11.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது..

4 சதவீதம் கூடுதல்
அதன்படியே நேற்று முதல் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தும் வருகிறது... இன்றும், நாளையும், நாளை மறுநாளும் இந்த மழைப்பொழிவு தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை எப்படி இருக்க போகிறது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.. மழை குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் சொல்லும்போது, அக்டோபர் முதல் நவம்பர் வரையிலான 2 மாதங்களில், இயல்பைவிட 4 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.. அடுத்த 2 வாரங்களுக்கு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட குறைவாக இருக்கும்.

16 மாவட்டங்கள்
தமிழகத்தில் நவம்பர் 17 முதல் 23ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடக்கத்தை விட குறைந்துள்ளது.. குறிப்பாக 22 மாவட்டங்களில் இயல்பை விட வெகு குறைவாக மழை பதிவாகியுள்ளது. மேலும், 16 மாவட்டங்களில் போதிய அளவு பருவமழை பதிவாகவில்லை. இனி வரும் நாட்களை பொறுத்தவரையில், நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறைவாக பதிவாக வாய்ப்பு இருக்கும்... கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, நவம்பர் 25ம் தேதி முதல் நவம்பர் 29ம் தேதி, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications