நிலம், சொத்துக்களை வாங்கியோருக்கு மகிழ்ச்சி.. நாளை பத்திரப்பதிவு செய்ய கூடுதல் டோக்கன்: பதிவுத்துறை
சென்னை: அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு, கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் வழங்கிட பத்திரப்பதிவு துறை உத்தரவிட்டுள்ளது. நாளைய தினம் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இது நிலம் உள்ளிட்ட சொத்துக்களை வாங்கியுள்ளோருக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
வருவாய் ஈட்டித்தரும் துறையாக பத்திரப்பதிவுத்துறை விளங்கி கொண்டிருக்கும் நிலையில், தமிழக சட்டசபையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு, வணிக வரி மற்றும் பதிவுத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.. அப்போது, அமைச்சர் மூர்த்தி அளித்த பதிலுரையில் சில முக்கிய தகவல்களை வெளியிட்டார்..

குறிப்பாக, "மாநில அரசின் வரி வருவாயில் வணிக வரித்துறை வாயிலாக, 71.6 சதவீதமும், பதிவுத்துறை வாயிலாக, 15.4 சதவீதம் பெறப்படுகிறது. அரசின் மொத்த வருவாயில், 87 சதவீதம் ஈட்டித்தரும் துறைகளாக வணிக வரி மற்றும் பதிவுத்துறைகள் உள்ளன.
4 ஆண்டுகளில் வருவாய்
முந்தைய, 10 ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில், வணிக வரித்துறை மொத்தமாக ஈட்டிய வரி வருவாய், 6.87 லட்சம் கோடி ரூபாய். ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்ற, கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், இதுவரை, 5.08 லட்சம் கோடி ரூபாய் வருவாயை, வணிக வரித்துறை ஈட்டியுள்ளது. பதிவுத்துறையில், 10 ஆண்டு கால அதிமுக ஆட்சிக்காலத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருவாய், 88000,844 கோடி ரூபாய். ஆனால், திமுக ஆட்சியில், இதுவரை 72 ஆயிரத்து, 4 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
வரலாற்று சாதனை
கடந்த 4 வருடங்களில் வணிக வரித்துறையும், பதிவுத்துறையும் சேர்ந்து மொத்தமாக, 5.80 லட்சம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டி, வரலாற்று சாதனை படைத்துள்ளன.
இந்த 2 துறைகளால் வசூலிக்கப்படும் இந்த வருவாயின் பங்களிப்பானது, அரசு புதுமையான பல திட்டங்களை செயல்படுத்தி, மாநிலத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் ஆதாரமாக உள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
கூடுதல் வருமானம்
அமைச்சரின் இந்த அறிவிப்பு ஒருபுறமிருந்தாலும், இனிவரும் மாதங்களில் பத்திரப்பதிவு எண்ணிக்கையும், வருமானமும் அதிகரிக்கும் சூழலில், மேலும் வருமானம் கூடுதலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.. கடந்த டிசம்பர் மாதம் வரை மட்டுமே ரூ.14,525 கோடியை எட்டியிருந்த நிலையில் இந்த வருடமும் கடந்த வருவாயை முறியடித்து பதிவுத்துறை சாதனை படைக்கும் என நம்பப்பட்டு வருகிறது.. மேலும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் முகூர்த்த நாட்கள், வார விடுமுறைகளில் பத்திரங்களை பதிவு செய்வோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது.
நாளை கூடுதல் டோக்கன்கள்
அந்தவகையில், நாளை சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"சித்திரை மாதத்தின் விஷேச தினமான நாளை (புதன்கிழமை) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் (டோக்கன்) ஒதுக்கீடு செய்ய வேண்டுமென பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தது. இதையேற்று, நாளை ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், 2 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் வழங்கப்படும்.
அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு, கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications