ரேஷன்தாரர்களுக்கு வருது ஹேப்பி நியூஸ்? ரேஷனில் இனி இதையும் சேர்த்து தரப்போகிறதா தமிழக அரசு? கோரிக்கை
சென்னை: விவசாயிகள் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதுடன், முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ரேஷனில் தேங்காய் எண்ணெய்யை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்தபடியே உள்ளது.. காரணம், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும், பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்துவிட்டு, தேங்காய் எண்ணெய் கொள்முதலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று விவசாயிகள் கேட்டு வருகிறார்கள்.

ரேஷன் கடைகள்: மேலும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும், பாமாயிலுக்கு பதிலாக உடலுக்கு நலன் தரும் தேங்காய் எண்ணெய்யை வழங்க வேண்டும், கேரளா, கர்நாடகா, தமிழக தென்னை விவசாயிகள் மத்திய அரசிடம் கொள்முதல் செய்த கொப்பரையை வெளி மார்க்கெட்டில் விற்க கூடாது போன்ற எண்ணற்ற காரணங்களை முன்வைத்து, தேங்காய் விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஆனால், திமுக அரசு இதுவரை இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.. அதுமட்டுமல்ல, ஆட்சிக்கு வந்தால், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் மானிய விலையில் விற்பனை செய்யப்படும் என்று திமுக கூறியிருந்தது. அதையும் நிறைவேற்றவில்லை. எனவேதான், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் 2 நாட்களுக்கு முன்புகூட சென்னையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்..
தொடர் போராட்டம்: இன்றைய தினமும் தென்னை மற்றும் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள், மாநிலம் முழுதும் ஆங்காங்கே தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 7ம் தேதி, சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே கோரிக்கையை வலியுறுத்தி, பல்வேறு விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தின. தொடர்ந்து நேற்றைய தினம், மறுபடியும் அதே இடத்தில் 9 சங்கங்களைச் சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட விவசாயிகள், தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.
மலேஷியா, இந்தோனேஷியா பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் வழங்க வேண்டும் என்று கைகளில் தேங்காய், நிலக்கடலை செடிகளை விவசாயிகள் ஏந்தியபடி முழக்கமிட்டார்கள்.
கைது: அங்கு வந்த போலீசார், விவசாயிகளை குண்டுக்கட்டாக தூக்கி வாகனங்களில் ஏற்றி, அருகில் உள்ள சமுதாயக் கூடத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர். எனினும், தேங்காய் விவசாயிகளின் போராட்டம் அடுத்தடுத்து தொடரும் என்ற சூழல் உருவாகி உள்ளது.
அதாவது, உள்நாட்டு எண்ணெய் வித்துக்களான தேங்காய், நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வகைகளுக்கு ஊக்குவிப்பு செய்யாமல், மானியமும் வழங்காமல், இந்தோனேசிய- மலேசியா பாமாயிலை லிட்டர் ரூ. ரூ.100க்கு மத்திய, மாநில அரசுகள் வாங்கி ரூ.30க்கு நியாய விலை கடைகளில் விற்பனை செய்கின்றன.. இதனால், ஒரு லிட்டருக்கு 70 ரூபாய் மானியம் கொடுத்து விற்பனை செய்து கொண்டிருக்கின்றன.
வரிப்பணம்: இதனால், ஒவ்வொரு மாதமும் 2 கோடி லிட்டர் பாமாயிலை தமிழக அரசு கொள்முதல் செய்வாகவும், ஆண்டுதோறும் தமிழக மக்களின் வரிப்பணத்தில் ரூ.1500 கோடிகளை மானியமாக பாமாயில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கி வருவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
கடந்த 2019ல் ரூ.20 க்கு விற்ற தேங்காய், இப்போது ரூ.10க்கு மட்டுமே விற்பனையாவதால் 22 மாவட்டங்களில் உள்ள தமிழ்நாட்டின் 20 லட்சம் தென்னை விவசாயிகள் கடுமையான நஷ்டத்தில் உள்ளாகவும் புலம்புகிறார்கள்..
கண்ணீர் கோரிக்கை: கூலி கூட கிடைக்காமல், மிகப்பெரிய கஷ்டத்தில் உள்ளதாகவும், பாமாயில் இறக்குமதியை ரத்து செய்துவிட்டு, பாமாயிலுக்கு பதிலாக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்தால், தங்களது வாழ்வாதாரம் காக்கப்படும் என்றும் கண்ணீர் மல்க கோருகிறார்கள்.. தமிழக அரசு இதை பரிசீலிக்குமா??












Click it and Unblock the Notifications