'பள்ளிகளுக்கு சீல்..' மாணவர்களுக்கு கொரோனா ஏற்பட்டால் உரிய நடவடிக்கை.. அமைச்சர் மா.சு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் வரும் 12ஆம் தேதி முதல் 20 லட்சம் பேருக்கு வேக்சின் போட திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிகளில் மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் பள்ளிக்குச் சீல் வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை சைதாப்பேட்டை அரங்கநாதன் மேம்பாலத்திற்கு அருகே சாலையோர பூங்கா அமைப்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்.
அப்போது பேசிய அமைச்சர் வரும் செப். 12ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசி
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் மொத்தமாக 3,59,31,677 பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மக்கள்தொகையில் மொத்தம் 44 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 15 சதவீதம் பேருக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. முன்பு தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் தடுப்பூசிகளில் குறைந்த அளவே மக்களுக்குப் போடப்பட்டு வந்தது. ஆனால், இப்போது தமிழ்நாடு அரசு அளித்த அழுத்தம் காரணமாகத் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்ட 22,16,160 தடுப்பூசிகள் அனைத்தும் போடப்பட்டுள்ளது.

மெகா தடுப்பூசி முகாம்
தமிழ்நாடு முழுவதும் வரும் 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் மூலம் 20 லட்சம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டு உள்ளது. இதற்காகத் தமிழகத்திற்குக் கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

சீல் வைக்கப்படும்
தமிழகத்தில் பள்ளிகளில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகும் நபர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் கொரோனா தொற்று உறுதியாகும் பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள பள்ளிகளுக்குச் சீல் வைக்கப்படும். ஆனால் இப்போது வரை குறைவான மாணவர்களுக்கே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தொடர்ச்சியாகப் பள்ளிகளில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்" என்று தெரிவித்தார்.

பள்ளிகள் திறப்பு
தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் +2 மாணவர்களுக்குப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. அப்போது முதல் மாநிலத்தில் ரேண்டம் முறையில் சில பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் முதலில் நாமக்கல் மாவட்டத்தில் மூன்று மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சில பள்ளிகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

அமைச்சர் அன்பில் மகேஷ்
இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளிகளில் படிக்கும் 5 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறப்பு குறித்து நாளை, செப். 8ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications