மறுபடியும் ஆட்டத்தை தொடங்கும் வருண பகவான்.. இந்த 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை.. ஜில் அறிவிப்பு
இன்று 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மறுபடியும் தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த மாதம் ஒரே நேரத்தில் 2 அடுத்தடுத்த புயல்கள் தமிழகத்தை மையம் கொள்ளவும், மழைக்கு பஞ்சமில்லை.. கடலோர மாவட்டங்கள் உட்பட மொத்த தமிழகத்துக்கும் நல்ல மழை கிடைத்தது.

இதனால் அணைகள் நிரம்பின.. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.. விவசாயிகள் மகிழ்ந்தனர்.. ஆனால் அதற்கு பிறகு, ஒரு வாரத்துக்கு மேலாக தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்பட்டு வந்தது.. எனினும் கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.
தற்போது மறுபடியும் 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் சொல்லி உள்ளது.. வளிமண்டலத்தில் நிலவிய மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்றும் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று தெரிவிக்கும்போது," குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடற்பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில், (நேற்று முன்தினம்), தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக நாளை (இன்று) தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்... கடலோர மாவட்டங்களான விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, கடலூர் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்" என்றார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும். அந்தவகையில் தான் நடப்பாண்டுக்கான வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications