வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 20 மாவட்டத்தில் இன்று கனமழை வெளுக்கும் - சென்னையில் கனமழை அலர்ட்!
சென்னை: வேலூர், திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை 23 மாவட்டங்களிலும், தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வானிலை மையம் வெளியிடும் அறிவிப்பில், மழை தொடர்ந்து நீடிக்கும் என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், தேன்கனிக்கோட்டையில் 8 செ.மீ. மழையும், வேப்பூரில் 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சூளகிரி, திருவாலங்காடு, பையூர், வால்பாறை, கருங்குளம் ஆகிய பகுதிகளில் தலா 6 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சின்னக்கல்லார், வால்பாறை தாலுகா அலுவலகம், நாட்றம்பள்ளி, ஸ்ரீபெரும்புதூர், சோழவந்தான், அவலாஞ்சி, மணலூர்பேட்டை ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ. மழையும், சோலையாறு, போளூர், கொரட்டூர், ஆலந்தூர், சென்னை விமான நிலையம், செம்பரபாக்கம், செங்கம், வாலாஜாபாத், வால்பாறை, தாம்பரம், மாயனூர், தல்லாகுளம், சோளிங்கர் காவேரிப்பாக்கம், திருவள்ளூர், விளாத்திகுளம், ஆரணி, பெரியார், பாப்பாரப்பட்டி, விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

20 மாவட்டங்களில் இன்று கனமழை
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை 23 மாவட்டங்களில் கனமழை
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில், நாளை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

30 - 31-ம் தேதிகளில் கன மழை
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் வரும் 30 மற்றும் 31-ம் தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த மாதமும் தொடரும் மழை
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில், வரும் ஒன்றாம் தேதி இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் மழை
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
லட்சத்தீவு பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வரும் 31-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications