வட தமிழகம் நோக்கி நகர்கிறது ஃபனி புயல்.. கன மழைக்கு அதிக வாய்ப்பு.. பாலச்சந்திரன் அறிவிப்பு
வரும் 30ம் தேதி கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு என சொல்லப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: சென்னையில் இருந்து 1500 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த மண்டலம் ஏப்ரல் 30ம் தேதி வட தமிழகம் நோக்கி புயல் வரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை என்ற ஆறுதல் தகவலையும் கூறியுள்ளது.
தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி புயல் ஒன்று வர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதற்கு ஃபனி என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதாகவும் அது படிப்படியாக தமிழகத்தை நோக்கி நகரும் அதாவது ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழகத்தில் புயல் கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தயார் நிலை
இதனால் கனமழை இருக்கக்கூடும் என்பதால், மேலும், தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1-ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. மேலும் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் 150 கிமீ இருக்கும் என்று சொல்லப்பட்டதால், மீட்பு பணி உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகின்றன.

பாம்பன், கடலூர்
அதற்கேற்றபடி இன்றே நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல பாம்பன், கடலூர், புதுச்சேரி துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

பாலச்சந்திரன்
இந்த நிலையில், ஏப்ரல் 30ம் தேதி வட தமிழகம் நோக்கி புயல் வரக் கூடும் என்று தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது சம்பந்தமாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் சொன்னதாவது:

காற்று, மழை
தென் கிழக்கு கடற்பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. வட தமிழகத்தின் கடற்கரையிலிருந்து தென் கிழக்கே சுமார் 1500 கீமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையமாகவும், புயலாகவும் வலுப்பெற கூடும்.

கடல் சீற்றம்
தற்போதைய நிலவரப்படி வட மேற்கு திசையில் நகர்ந்து ஏப்ரல் 30ஆம் தேதி வட தமிழகத்தின் கடற்கரை அருகில் வரக்கூடும். இதன் காரணமாக தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஏப்ரல் 28,29 ஆகிய தேதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். மீனவர்கள் ஏப்ரல் 26, 27 ஆம் தேதி தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், ஏப்ரல் 28 முதல் 30 ஆம் தேதி வரை தென் மேற்கு கடற்கரை பகுதிக்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கனமழை
தற்போதைய நிலவரப்படி ஏப்ரல் 30ஆம் தேதி வட தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் அன்றைய தினம் வடதமிழகம் அருகே புயல் வரும், புயலின் நகர்வைப் பொறுத்தே காற்றோ, மழையோ இருக்கும். இது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தெரிவிக்கப்படும். ரெட் அலர்ட் என்பது வானிலை ஆய்வு மையத்தால் தரப்படுவதில்லை. கனமழைக்கான வாய்ப்புள்ள ஏதேனும் ஒரு பகுதி சிவப்பு நிறத்தில் காண்பிக்கப்படும். அவ்வளவுதான்" என்றார்.

எச்சரிக்கை
இதற்கிடையே இந்த புயலால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்ற கருத்தும் சில தனியார் வானிலை ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது. எது எப்படியோ, மக்கள் உஷாராக இருந்து கொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications