9 ஆண்டுகளுக்கு பிறகு.. பொள்ளாச்சி ஜெயராமன் மகன் விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்க ஐகோர்ட்டில் மனு
சென்னை: அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் மீதான விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக சட்டசபை துணை சபாநாயகராகப் பணியாற்றியவர் பொள்ளாச்சி ஜெயராமன். இவரது மகன், பிரவீன் கோவை தனியார் கல்லுாரியில் படித்து வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் சென்ற கார் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே விபத்தில் சிக்கியதில் மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பாக அப்போது திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் அஜாக்கிரதையாகச் செயல்பட்டு மரணம் ஏற்படுத்துதல் (இந்திய தண்டனை சட்டம் 304(A) பிரிவின் கீழ் பிரவீன்மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் பிரவீனுக்கு ஓராண்டு சிறை தண்டனை அவிநாசி நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது.
தண்டனைக்கு எதிரான பிரவீனின் மேல்முறையீடு திருப்பூர் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், பிரவீனின் அரசியல் பின்புலத்தால் விசாரணை பாரபட்சமாக நடந்துள்ளது எனக் கூறி புகழேந்தி தரப்பு உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில்குமார் முன்பு அக்டோபர் 3 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications