நிலம், கோயில் சொத்துகள்.. உதயநிதி அதை சொன்னதுமே சேகர் பாபு கை தட்டுறாரு: திமுகவை சாடிய இந்து முன்னணி
சென்னை: கோயில்களில் சொத்துக்களை மேம்படுத்த சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.. ஒரு சமய நிறுவனத்தின் அறங்காவலர்கள், தங்கள் பொறுப்பிலுள்ள நிதியை பயன்படுத்தி, சொத்துக்களை மேம்படுத்த, அதிகாரம் அளிக்கும் வகை முறைகள் இல்லை என்பதால், அதற்கேற்ற சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது என்று அமைச்சர் சேகர் பாபு விளக்கமும் தந்துள்ளார். இந்நிலையில், கோயில் சொத்துகளை கபளீகரம் செய்ய திமுக ஏன் அவ்வளவு வேகம் காட்டுகிறது என்று இந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.
இந்துக்களுக்கு விரோதமாக திமுக அரசு செயல்பட்டு வருவதாக, இந்து முன்னணி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது... இந்துக்கள் மனதை திமுக அரசு புண்படுத்தும் விதங்களையும், தன்னுடைய ஒவ்வொரு கண்டன அறிக்கையின் மூலமும் வெளிப்படுத்தி வருகிறார் இந்து முன்னணியின் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்.

குறிப்பாக, பின்தங்கியவர்கள், மிகவும் பின் தங்கியவர்கள், பட்டியல் சமூகத்தினர் என்று ஜாதி அடிப்படையிலேயே தனித்தனியாக நடத்தி சாதி அடையாளத்தை திணிப்பதே இந்த அரசுதான் என்றும் சாடி வருகிறார்.
இந்துக்களுக்கு தனி சட்டமா
தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு ஒரு சட்டம்? கிறிஸ்தவர்களுக்கு வேறு சட்டமா? திமுக அரசு பதவியேற்றதில் இருந்து சாலை விரிவாக்கம், ஆக்கிரமிப்பு, நீதிமன்ற தீர்ப்பு என காரணங்களை காட்டி நூற்றுக்கணக்கான கோயில்களுக்கு மாற்று இடம் கூட தராமல் பக்தர்கள் மனம் பதற அநாகரிகமாக இடித்து தள்ளியது, வேறு மதத்தினர் வழிபாட்டு இடங்களுக்கு இந்நிலை ஏற்படுத்தியதா?
நாத்திக திமுக அரசுக்கு இந்துக்கள் மீதான வெறுப்பு என்பதுதான் காரணமா? என்றெல்லாம்கூட அறிக்கைகள் மூலம் காட்டமான கேள்வி எழுப்பியவாறே உள்ளார்.
இந்நிலையில், கோயில் சொத்துகளை கபளீகரம் செய்ய திமுக ஏன் அவ்வளவு வேகம் காட்டுகிறது என்று மீண்டும் இந்து முன்னணி காடேஸ்வரா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கோயில் சொத்துக்கள்
காரணம், தமிழ்நாடு சமய மற்றும் அறக்கொடைகள் சட்டத்திருத்த மசோதாவை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 3 நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்தார்.
அதில், "பல்வேறு சமய நிறுவனங்களுக்கு, சமய நோக்கங்களுக்காக வழங்கப்பட்ட அசையா சொத்துக்கள் பயன்பாடின்றி உள்ளன. அவற்றில் கல்வி நிறுவனங்களை நிறுவி பராமரிக்கவும், அர்ச்சகர்கள், இசை கலைஞர்கள், வேத பாராயணர்கள் ஆகியோருக்கான பயிற்சி பள்ளிகள் அமைக்கவும் வகை செய்யப்பட்டு உள்ளது" என்று தெரிவித்தார்.
கோவில் நிலங்கள்
இந்த மசோதாவுக்கு அதிமுக அக்ரி கிருஷ்ணமூர்த்தி உடனடியாக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்.. "கல்வி நிறுவனங்களை அமைப்பது அரசின் கடமை, கோவில் நிலங்களையும், நிதியையும் கோவில் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்" என்றார்..
ஆனாலும், இந்த மசோதா, குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்குதான் இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.. இதுகுறித்து மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.. அதில், "அரசுக்கு சொந்தமான இடங்களில் கல்லூரி தொடங்க அனுமதிக்கும் மசோதாவை தாக்கல் செய்து தமிழக அரசு அவசர அவசரமாக நிறைவேற்றி உள்ளது.
தங்க நகைகள், கோயில் சொத்து
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கோயில் நிதி, கோயில்களுக்குச் சொந்தமான தங்க நகைகள், இடங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. கோயில் சொத்துகளை கபளீகரம் செய்வதில் திமுக ஏன் அவ்வளவு வேகம் காட்டுகிறது? 'சனாதன இந்து தர்மத்தை அழிப்பதே எங்கள் கொள்கை'என்று துணை முதல்வர் உதயநிதி கூறினார்.
அருகில் இருந்து அதை கைதட்டி வரவேற்றவர் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு. அந்த கொள்கையை மறைமுகமாக நிறைவேற்றவே கோயில் சொத்துகளை அழிக்க இத்தகைய திட்டங்களை வகுக்கிறார். இந்த மசோதா சட்டவிரோதமானது. இதை ஏற்கக் கூடாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிப்போம். இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications