ஐயோ.. சிறுமியை ஆக்ரோஷமாக தாக்கிய மாடுகள்.. காப்பாற்றிய இளைஞர்கள்.. வேடிக்கை பார்த்த எதிர் வீட்டினர்
சென்னை: அரும்பாக்கம் எம்எம்டிஏ நகரில் பள்ளி முடிந்து தாயுடன் வீடு திரும்பிய சிறுமியை இரண்டு மாடுகள் ஆக்ரோஷமாக தாக்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. மாடுகளிடம் சிக்கிக்கொண்டு சிறுமி அலறும் போது எதிர் வீட்டில் இருந்தவர்கள் சிலர் வேடிக்கை பார்த்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாகியுள்ளது.
பள்ளி முடிந்து வீட்டிற்கு அம்மா உடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த சிறுமிக்கு தெரியாது தனக்கு அப்படி சம்பவம் நடக்கும் என்று. எதிர்பாராத சில சம்பவங்கள் உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது. சென்னை அரும்பாக்கம் எம் எம் டி ஏ காலனியில் உள்ள இளங்கோ நகர் தெருவில் சாலையில் தனது தாயுடன் சிறுமி, அவரது சகோதரருடன் நடந்து சென்றபோது பின்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒரு சிறுவன் பசு மாட்டினை பயம் காட்டுவது போல் குரல் கொடுத்துள்ளான். இதனால் மிரண்டுபோன பசு தனது அருகில் இருந்த சிறுமியை தனது கொம்பால் முட்டி தூக்கி கீழே தள்ளியது. காலால் வைத்து நசுக்கி தாக்கியது.

அதைப் பார்த்த சிறுமியின் தாயார் சத்தம் போட்டார். மாடுகளிடம் சிக்கிக்கொண்ட அந்த சிறுமியும் கூக்குரல் எழுப்பினார். கற்களை எடுத்து வீசி தனது மகளை காப்பாற்ற முயற்சி செய்தார் அந்த பெண். ஆனால் அந்த பசு விடாமல் அந்தச் சிறுமியை முட்டி தாக்கியது. அந்த மாட்டுடன் இருக்கும் சற்றே வளர்ந்த கன்று ஒன்றும் சேர்ந்து தாக்கியது. அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டை விட்டு வெளியே வந்தனர். எதிர்வீட்டைச் சேர்ந்தவர்கள் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தனர். பயத்தில் என்ன செய்வது என்றே தெரியாமல் நின்று கொண்டிருந்தனர். யாராலும் பக்கத்தில் கூட போக முடியவில்லை. தனது மகனை பாதுகாப்பாக ஒரு இடத்தில் நிறுத்தி வைத்து விட்டு மீண்டும் தனது மகளை காப்பாற்ற சத்தம் போட்டார் அந்த பெண்.
ஒரு சிலர் தைரியத்துடன் கற்களை எடுத்து வீசினர். கட்டைகளை எடுத்தும் அடித்தனர். ஆளுக்கொரு கல்லாக எடுத்து வீசியும் அந்த மாடு அசராமல் சிறுமியை தள்ளியது. திடீரென மாடு திரும்பிய நேரம் பார்த்து இளைஞர் ஒருவர் சிறுமியை சற்று தூரம் தர தரவென இழுத்து வந்தார். பசுமாடு மீண்டு ஆக்ரோசமாக சிறுமியை முட்டி தாக்கியது. ஒரு நிமிடம் வரை இந்த போராட்டம் நீடித்தது. அப்போது ஒரு கட்டையுடன் பின்னால் இருந்து ஓடிவந்து மாட்டை துரத்தி விட்டார் ஒருவர். அதன்பின்னர் அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் காண்போரை பதற வைக்கிறது. பசுமாடு இப்படி வெறியோடு தாக்குமா? என்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியின் உயிருக்கு எதுவும் ஆபத்து ஏற்படவில்லை என்றாலும் மாடு முட்டியதில் சிறுமி பலத்த காயமடைந்துள்ளார். இதனை அடுத்து சிறுமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இந்த சம்பவத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் வேடிக்கை பார்த்தவர்களை கேள்வி எழுப்பியுள்ளனர். எதிர்வீட்டில் இருக்கும் நபர்கள் வேடிக்கை பார்க்கின்றனர் கொஞ்சம் கூட இரக்கமில்லையா என்று கேட்டிருக்கிறார் ஒருவர். அதற்கு மற்றொருவரோ, இது போன்ற சம்பவத்தில் பயத்தில் யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார். மாட்டு உரிமையாளர்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார் மற்றொருவர்.
“WARNING: DISTURBING VISUALS”
— மகாலிங்கம் பொன்னுசாமி / Mahalingam Ponnusamy (@mahajournalist) August 10, 2023
சென்னை அரும்பாக்கம் MMDA காலனி, இளங்கோ தெருவில் நடந்த கோர சம்பவம். மாடு முட்டியதில் சிறுமி படுகாயம் : பள்ளி முடிந்து சென்ற போது நேர்ந்த சோகம். சாலையில் செல்லும் மாடுகளை கடக்கும்போது எச்சரிக்கை அவசியம். pic.twitter.com/ejcXhREZEu
அந்த சிறுமியின் தாயார் கூட மாட்டின் அருகே போக முடியாமல் தள்ளி நின்றுதான் கத்துகிறார். தனது மகனை பாதுகாப்பாக ஒரு இடத்தில் நிறுத்தி வைத்து விட்டுதான் வந்து சத்தம் போடுகிறார். தங்களின் உயிர்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தோடுதான் பலரும் வேடிக்கை பார்க்கின்றனர். தெருநாய்கள் குழந்தைகளை கடிக்கும் போது கூட பல நேரங்களில் இப்படி வேடிக்கை பார்க்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இருந்தாலும் பலர் தைரியத்தோடு குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்ததையும் நாம் பாராட்டத்தான் வேண்டும். அதுவும் கையில் கட்டையோடு அந்த மாடுகளை அடித்து விரட்டி குழந்தை காப்பாற்றிய நபரை நாம் பாராட்ட வேண்டும். தனது குழந்தைக்கு நேர்ந்த சம்பவம் போல வேறு குழந்தைகளுக்கு இது நடக்கக்கூடாது என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை வேண்டுகோள் வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications