மின் வாரியம் கட்டணத்தை உயர்த்தியும்.. 18000 கோடி நஷ்டம் 28000 கோடியாக அதிகரித்தது எப்படி என கேள்வி?
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் 59 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தியதால் 4000 கோடி நஷ்டம் கடந்த ஆண்டு குறைந்திருக்க வேண்டும், ஆனால் 18000 கோடியாக இருந்த நஷ்டம், இப்போது 28 ஆயிரம் கோடியாக அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தமிழ்நாடு மின் துறை இன்ஜினியர்கள் அமைப்பின் தலைவர் சா.காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் நேற்று விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு, கட்டண உயர்வு முன் தேதியிடப்பட்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த கட்டண உயர்வு குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2011-12 ஆண்டில் ரூ.18,957 கோடியாக இருந்த தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டு மொத்த நிதி இழப்பானது, கடந்த 10 ஆண்டுகளில், ரூ.96,712 கோடி மேலும் அதிகரித்து, 31.03.2021 வரை ரூ.1,13,266 கோடியாக உயர்ந்திருக்கிறது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இழப்பினை 2021-22 ஆம் ஆண்டிலிருந்து 100% முழுமையாக அரசே ஏற்றுக் கொள்ளும் என்ற தற்போதைய தமிழக அரசின் உறுதிப்பாட்டை போல, முந்தைய காலத்தில் எவ்வித உறுதிப்பாடும் வழங்காத காரணத்தினால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமானது நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
இதன் விளைவாக, 2011-12ம் ஆண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மின் தொடரமைப்பு கழகத்திற்கு ரூ.43,493 கோடியாக இருந்த கடன் தொகையானது கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து (2021-22) வரை ரூ.1,59,823 கோடியாக மாறியது. இதன் விளைவாக, கடந்த 2011-12-ஆம் ஆண்டில் ரூ.4,588 கோடியாக இருந்த கடன்களின் மீதான வட்டியானது 259% அதிகரித்து 2020-21-ஆம் ஆண்டில் ரூ.16,511 கோடியாக அதிகரித்தது.
இவ்வாறு அதிகரித்துவரும் நிதி இழப்பை ஈடு செய்ய அப்போதைய மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதன் பின்னார், அதிகமான மின்கட்டண உயர்வினால் மின் நுகர்வோருக்கு ஏற்படக் கூடிய சுமையினை கருத்தில் கொண்டு, இந்த அரசானது நுகர்வோருக்கு பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆண்டு தோறும் சிறிய அளவில் மின் கட்டண உயர்வை அமுல்படுத்தி வருகிறது.
மத்திய அரசின் மின் அமைச்சகத்தின் வழி காட்டுதல்களின் படி, விநியோக முறையை வலுப்படுத்தும் (RDSS) திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசின் நிதியை பெறுவதற்காக, ஆண்டுதோறும் மின் கட்டணம் திருத்தம் செய்வது முன் நிபந்தனையாகும். இந்த வகையில், 2022-23 நிதி ஆண்டிற்கான மின் கட்டண உயர்வானது. 01.04.2022 க்கு மாறாக 10.09.2022 முதல் சுமார் 7 மாதத்திற்கு மட்டுமே உயர்த்தப்பட்டது.
மேலும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பல்லாண்டு மின் கட்டண வீத ஆணையின் படி கடந்த 01.07.2023 முதல் நுகர்வோர் விலை குறியீடு எண் அடிப்படையில், அனைத்து மின்னிணைப்புகளுக்கும் உயர்த்தப்பட்ட வேண்டிய 4.7 சதவீத மின் கட்டண உயர்வுக்கு எதிராக, மின் நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு 2.18 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கான இந்த 2.18 சதவீத உயர்வும் முழுவதுமாக இந்த அரசே மின் மானியம் மூலம் ஏற்றுள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி, 6 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்த வழி இருந்தும், சென்ற ஆண்டு 2.18 சதவீதம் மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும், இந்த ஆண்டு 2024 ஜூலை மாதத்தைப் பொறுத்த வரையில், 2023 ஏப்ரல் மாதத்தின் விலை குறியீட்டு எண் 178.1 மற்றும் 2024 ஏப்ரல் மாதத்தின் விலை குறியீட்டு எண் 186.7 ஆகியவற்றின் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களின் படி கணக்கிட்டால், 4.83 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.இதன்படி, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணத்தை மறுசீரமைப்பதினால் பொதுமக்களுக்கும். தொழில் முனைவோருக்கும் சிறிய அளவே மின் கட்டணத்தை உயர்த்தி 15.07.2024 தேதியிட்ட மின் கட்டண ஆணை எண்.6/2024 -ஐ வெளியிட்டுள்ளது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மின் கட்டணத்தை உயர்த்தியதால் 4000 கோடி நஷ்டம் கடந்த ஆண்டு குறைந்திருக்க வேண்டும், ஆனால் 18000 கோடியாக இருந்த நஷ்டம் 28 ஆயிரம் கோடியாக நஷ்டம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி தமிழ்நாடு மின் துறை இன்ஜினியர்கள் அமைப்பின் தலைவர் சா.காந்தி, சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு மின்சார வாரியம் 2021-22 மற்றும், 2022-23 என 2 நிதியாண்டுக் கணக்குகளைச் சமர்ப்பித்தது. இதில் 2021-22-ம் ஆண்டில் மின்வாரியத்துக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ.18 ஆயிரம் கோடி. கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 10-ந்தேதி 56.9 சதவீத கட்டண உயர்வை ஆணையம் விதித்தது. 2022-23-ம் ஆண்டில் 7 மாத காலத்தில், கட்டண உயர்வால் வந்த கூடுதல் வருவாய் ரூ.14,550 கோடி.
மக்கள் அளித்த கூடுதல் கட்டணத்தால் நஷ்டமானது, 2022-23-ம் ஆண்டில் ரூ.4,000 கோடி அளவுக்கு குறைந்திருக்க வேண்டும். ஆனால், 2022-23-ம் ஆண்டில் இந்த நஷ்டம் ரூ.28 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. ஆக மின் கட்டண உயர்வுக்கும், நஷ்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
மின் கட்டணத்தை உயர்த்தியதே நஷ்டத்துக்கு காரணம் என்பதில் எந்த உண்மையும் இல்லை" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications