கோவை தெற்கு தொகுதியில் வானதியிடம் 1439 ஓட்டுகளில் தோற்க காரணம் என்ன தெரியுமா? கமல்ஹாசன் ஒரே போடு!
சென்னை: நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் என்றும் என்னை அவ்வளவு சீக்கிரத்தில் அரசியலை விட்டு போக வைக்க முடியாது என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். முழு நேர அரசியல்வாதி என்று யாரும் இங்கு இல்லை என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக ராமேஸ்வரத்தில் தனது பயணத்தை தொடங்கி மதுரையில் தனது கட்சி பெயரை அறிவித்தார். தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்போடு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சிக்கு பெயர் வைத்தார் கமல்ஹாசன்.

லோக்சபா தேர்தலில் தனித்து களம் கண்டு வாக்கு சதவிகிதத்தை உயர்த்தியது. கடந்த சட்டசபை தேர்தலின் போது சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பின்னடைவை சந்தித்தது மக்கள் நீதி மய்யம். நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் மக்கள் நீதி மய்யம் கட்சியை விட்டு வெளியேறினர்.
சினிமா, பிக்பாஸ் என்று பிசியாகவே இருந்தார் கமல்ஹாசன். ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரிப்பதாக அறிவித்தார் கமல்ஹாசன். வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் அங்கம் வகிக்க உள்ளது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் 7ஆம் ஆண்டு விழாவையொட்டி அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யம் இன்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது
நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம். பண பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோ சிறிதும் இன்றி மக்களைச் சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றோம். மக்களுக்கு அவர்களுடைய கடமையை நினைவுறுத்துவதும், தலைமைக்குத் தயார்படுத்துவதும் தேர்தல் வெற்றிகளை விட முக்கியமானது.

ஜனநாயகத் தேரை நாம் அனைவருமே சேர்ந்துதான் இழுக்கவேண்டும் என்கிற உணர்வை ஊட்டுவதே அவசியம் மிக்க அரசியல் செயல்பாடு. மக்கள் நீதி மய்யத்தைப் போன்ற ஜனநாயக சக்திகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.
நான் முழு நேர அரசியல்வாதி அல்ல என்ற விமர்சனத்தை முன் வைக்கின்றனர். முழு நேர அரசியல்வாதி என்று யாரும் இல்லை. முழு நேர அப்பனும் இல்லை, மகனும் இல்லை. முழு நேர குடிமகனாக இருந்து ஓட்டுப்போடாதவர்கள்தான் கேள்வி கேட்கின்றனர். கோவை தெற்கு தொகுதியில் 90 ஆயிரம் பேர் ஓட்டு போடவில்லை. அவர்கள்தான் நான் தோல்வியடைய காரணம். 1439 வாக்குகளில்தான் நான் தோற்றேன். 95 லட்சம்தான் தேர்தல் செலவு செய்யும் ஒரு நேர்மையாளன் தோற்க காரணம், ஓட்டு போடவராதவர்கள்தான். அவர்கள் ஓட்டு போட்டிருந்தால் என்னை போன்றோர் ஜெயிப்போம்.
நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன். என்னை அவ்வளவு சீக்கிரம் அரசியலை விட்டு போகவைக்க முடியாது. என் அரசியல் பயணம் தனித்துவமானது. நிறைய பாடங்கள் கற்றுக்கொண்டோம். எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்று இந்த ஏழு ஆண்டுகளில் கற்றுக்கொண்டோம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நல்ல செய்தி விரைவில் அறிவிப்போம்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தடுக்க ஆணிப்படுக்கை போட்டு இருக்கிறார்கள். எதிரிப்படையை நடத்துவது போல மத்திய அரசு நடத்துகிறது. படையெடுத்து வரும் எதிரிகளைப் போல விவசாயிகளை நடத்துகின்றனர்.
தெற்கு தேய்ந்தால் கூட பரவாயில்லை என்று நினைப்பவர்கள்தான் மத்தியில் இருக்கிறார்கள். 1 ரூபாய் வரி கொடுத்தால் 29 பைசா தான் நமக்கு கிடைக்கிறது. என் சகோதரர்கள்தான் பீகாரில் இருக்கின்றனர் நன்றாக இருக்கட்டும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
அது சரி.. 90 ஆயிரம் பேர் ஓட்டு போட்டிருந்தால் அது கமலுக்குதான் வந்திருக்குமா, அல்லது தோல்வி வித்தியாசம் அதிகரித்து மோசமாகியிருக்குமா, நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்ட் பண்ணுங்க பார்ப்போம்..












Click it and Unblock the Notifications