மழை காலம் வந்தாச்சு.. பாம்பு வீட்டில் நுழைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்! என்ன செய்யக் கூடாது?
சென்னை: பருவமழை காலத்தில் பாம்புகள் வீடுகளுக்குள் நுழையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாம்பைக் கண்டவுடன் நாம் செய்யும் செயல்களால் உயிரே போகக் கூட வாய்ப்பு இருக்கிறது. எனவே, வீட்டுக்குள் பாம்பு நுழைந்தால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது என்பதை வல்லுநர்கள் விளக்குகிறார்கள். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை சீசன் போது மக்கள் பாம்புக் கடியால் பல ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். பொதுவாகக் காடுகள், வயல்களில் இருக்கும் விஷப்பாம்புகள், மழைக் காலங்களில் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன.

அப்படி எதிர்பாராத விதமாகப் பாம்புகள் நமது வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்.. என்ன செய்யக்கூடாது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சட்டப்படி குற்றம்: ஒரு பாம்பைக் கொல்வது மிகவும் கடினமான வேலையாகும். பாம்புகளைக் கொல்வது என்பது நமது நாட்டில் சட்டப்படி குற்றமாகும். எனவே, உங்கள் வீட்டில் திடீரென பாம்பு உள்ளே வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்.. பாம்புக் கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.
முதலில் பாம்பு வீட்டிற்குள் வந்துவிட்டால் பலரும் செய்யும் தவறு அச்சத்தில் ஓட்டமெடுப்பது தான். பாம்பைப் பார்த்தால் பயம் வரத்தான் செய்யும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், பயத்தால் நாம் பல நேரங்களில் முட்டாள்தனமாக நடந்து கொள்வோம். எனவே, பாம்பைப் பார்த்தால் பயப்படாமல் முடிந்த வரை தைரியமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
செய்யாதீர்கள்: பாம்பைப் பார்த்தவுடன் ஓடி வெளியே செல்லாதீர்கள். ஏனென்றால் நீங்கள் வெளியே சென்றுவிட்டால் பாம்பு எங்கு வேண்டுமானாலும் ஒளிந்து கொள்ளும். அதைத் தேடிக் கண்டுபிடிப்பதே பெரும்பாடாக இருக்கும். பாம்பைப் பார்த்தால் திடீரென நகராமல் அமைதியாக இருக்க முயலுங்கள். பெரும்பாலும் பாம்பு மனிதர்களை நோக்கி வராது. எனவே, அது உங்களை நோக்கி வர வாய்ப்பு குறைவு.
பாம்பைப் பயமுறுத்தக் கூடாது. அதைத் தடியைக் கொண்டு அடிக்கவோ குத்தவோ முயற்சி செய்யாதீர்கள்.. இப்படி எதாவது செய்தால் அது உடனடியாக உங்களைக் கடிக்கும். அதற்குப் பதில் அமைதியாக இருங்கள். அது வெளியே செல்வது போல இருந்தால் அதை மறிக்கும் வகையில் நிற்க வேண்டாம். பாம்பு எங்கே செல்கிறது என்பதைத் தூரத்தில் இருந்து இருந்து கண்காணியுங்கள்.
செல்ல பிராணிகள்: மேலும், பாம்பை பார்த்தால் திடீரென கத்தக் கூடாது. திடீரென வரும் அலறல் சத்தம், பட்டென எதாவது செய்வது போன்ற காரியங்கள் பாம்பை அச்சப்படுத்தும். இதனால் பாம்பு உங்களைக் கடிக்கவும் வாய்ப்புகள் அதிகம். மேலும், வீட்டில் செல்லப்பிராணிகள் இருந்தால், முதலில் அதைத் தனியாக ஒரு ரூமில் போட்டு பூட்டி வையுங்கள்.. ஏனென்றால் பாம்பை போய் முதலில் சீண்டுவது செல்லப்பிராணிகள் தான். பூனைகளால் பாம்பை விட வேகமாக அசைய முடியும் என்பதால் அதை பெரும்பாலும் பாம்பின் தாக்குதலில் இருந்து தப்பிவிடும். ஆனால், நாய்களால் அது முடியாது. எனவே கூடுதல் கவனம் தேவை.
உடனே கால் செய்யுங்கள்: கண்டிப்பாகப் பாம்பை நீங்களே பிடிக்க முயலக் கூடாது. பாம்பை பிடிக்க அல்லது அடிக்க சென்று உயிரிழந்தவர்கள் தான் அங்கு அதிகம். சில நேரங்களில் பாம்பு வெளியே சென்றுவிடும். ஆனால், பெரும்பாலான நேரங்களில் அது வெதுவெதுப்பான இடத்தை நோக்கியே செல்லும் என்பதால் வீட்டுக்குள் செல்லவே முயலும். எனவே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வனத்துறை அல்லது தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுங்கள். அவர்கள் வந்து பாம்பைப் பத்திரமாகப் பிடித்து அப்புறப்படுத்திவிடுவார்கள்.












Click it and Unblock the Notifications