17 லட்சம் சம்பளத்தில் வங்கி வேலை.. 15 நிமிடம் தான் லஞ்ச்.. வேலையை உதறிய ஐஐஐடி மாணவர்
சென்னை: இன்றைக்கு கார்ப்ரேட் வாழ்க்கையில் அதிக சம்பளம் வாங்கிவிட்டு, அதை அனுபவிக்கக் கூட நேரமில்லாமல் ஓடுவது, ஒரு விலையுயர்ந்த காரை வாங்கிவிட்டு அதை ஓட்டத் தெரியாமல் கேரேஜில் பூட்டி வைப்பதற்குச் சமம் ஆகும். அப்படித்தான் பலர் இருக்கிறார்கள். இந்நிலையில் டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன் என்பவர், தனக்குக் கிடைத்த ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் சம்பளத்துடனான வங்கி வேலையை ஏன் ராஜினாமா செய்தார் என்பது குறித்துப் பகிர்ந்துள்ள கருத்துக்கள் இப்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
பணம் என்பது நாம் உழைப்பால் ஈட்டுவது, ஆனால் நேரம் என்பது நம் வாழ்நாள். ஒரு நாளில் நாம் செலவிடும் ஒவ்வொரு மணிநேரமும் நம் ஆயுளில் இருந்து குறையும் ஒரு பகுதி தான். பணத்தை ஈட்ட நாம் பயன்படுத்தும் காலம் என்பது ஒரு முறை போனது திரும்ப வரவே வராது என்பதே நிதர்சமான உண்மை.. பணக்காரர்கள் காலத்தையும், ஏழைகள் பணத்தையும் முக்கியமாக பார்ப்பார்கள். பணக்காரன் பணக்காரனாகவே இருக்க நேரத்தை சரியாக பயன்படுத்துவதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

சிக்கன் சாப்பிட முடியவில்லை
ஒருவர் இளம் வயதில் எதுவும் சாப்பிடாமல் எல்லாவற்றையும் மிச்சம் வைத்தார். அவரது கடைசி காலத்தில் ஒரு சிக்கன் வாங்கி ஆசையாக குழம்பு வைத்து சாப்பிடக்கூட முடியாத நிலையில் உள்ளார். அவருக்கு பல் பிரச்சனை... இன்று விரும்பி பொருட்களை சாப்பிட நினைக்கிறாய்.. ஆனால் சர்க்கரை வியாதி காரணமாக எதையும் சாப்பிட முடியவில்லை.. இதுஒருவரின் பிரச்சனை இல்லை.. பலருக்கும் இதுதான் பிரச்சனை. விலையுயர்ந்த காரை வாங்கிவிட்டு அதை ஓட்டத் தெரியாமல் கேரேஜில் பூட்டி வைப்பதற்குச் சமம் போல் தான் இன்றைக்கு பல செல்வந்தர்களின் நிலை இருக்கிறது. குழந்தையின் மழலை, பெற்றோரின் முதுமை, துணையின் அன்பு என எதையுமே பணம் கொடுத்து மீண்டும் வாங்க முடியாது.
உடல் இயந்திரம் அல்ல
நமது உடல் ஒரு இயந்திரம் அல்ல. தொடர்ச்சியான மன அழுத்தம் மற்றும் ஓய்வில்லாத உழைப்பு மெல்ல மெல்ல நம்மை உள்ளிருந்து சிதைக்கும்.
"இன்று நான் சம்பாதிக்கும் பணம், நாளை என் மருத்துவச் செலவிற்கே பத்தாது" என்பதுதான் பல கார்ப்பரேட் ஊழியர்களின் நிதர்சனமான உண்மை. மன நிம்மதி இல்லாத ஒருவனுக்கு விலை உயர்ந்த மெத்தை கிடைக்குமே தவிர, ஆழ்ந்த உறக்கம் கிடைக்காது. வேலையே உலகம் என்று வாழும்போது, "நான் யார்?" என்கிற கேள்விக்கு அந்த வேலையைத் தவிர நம்மிடம் பதில் இருக்காது.
என் வேலையை விட்டேன்
நமது விருப்பங்கள், கலை ஆர்வங்கள், கனவுகள் என அனைத்தும் அந்த 'டார்கெட்' மற்றும் 'டெட்லைன்' களுக்கு இடையில் நசுக்கப்படுகின்றன. வேலைக்காக நம் தனித்துவத்தை அடகு வைப்பது, நம் ஆத்மாவை நாமே காயப்படுத்துவது போன்றது. வீட்டிற்கு வந்தும் போனைப் பார்த்துக்கொண்டிருப்பது அல்லது வேலையைப் பற்றியே சிந்திப்பது உறவுகளுக்கு இடையே ஒரு பெரிய சுவரை எழுப்பும். சரி விஷயத்திற்கு வருவோம். டெல்லி ஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன் என்பவர், தனக்குக் கிடைத்த ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் சம்பளத்துடனான வங்கி வேலையை ராஜினாமா செய்துள்ளார். அதற்காக அவர் கூறிய காரணங்களை அப்படியே பார்ப்போம்.
பணி நேரம்
காலை 9 முதல் மாலை 5 மணி வரை என்று தொடங்கப்பட்ட வேலை, மெல்ல மெல்ல 9 மணி முதல் இரவு 7 மணி வரை என்று நீட்டிக்கப்பட்டது. வாரத்திற்கு 5 நாட்கள் வேலை என்பது 6 நாட்களாக மாறியது. அதிக வேலைப்பளு காரணமாக மதிய உணவை வெறும் 10 முதல் 15 நிமிடங்களுக்குள் முடித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் நிலவியது. உடல்நிலை சரியில்லாத போது எடுக்கும் 'சிக் லீவ்'க்குக் கூட அடுக்கடுக்கான விளக்கங்களைக் கொடுக்க வேண்டியிருந்தது.
ஊழியர்கள் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை முடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். இந்த இலக்குகளை அடையத் தவறினால், கடுமையான மன அழுத்தம் கொடுக்கப்பட்டது என்று விலகியதற்காக காரணத்தை சிராஜ் கூறியிருந்தார்.
சமூக வலைதள எதிர்வினை
சிராஜ் மதனின் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பல இளைஞர்கள் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர். பணத்தை விட மன அமைதியும், ஆரோக்கியமுமே முக்கியம் என சிராஜ் எடுத்த முடிவைப் பலர் பாராட்டி வருகின்றனர். இது போன்ற "நச்சுத்தன்மையான பணி கலாச்சாரம்" பல நிறுவனங்களில் சாதாரணமாகிவிட்டது என்றும், இது மாற்றப்பட வேண்டும் என்றும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிக சம்பளம் கிடைத்தாலும், ஒரு மனிதனின் தனிப்பட்ட நேரம் மற்றும் நிம்மதியைப் பறிக்கும் வேலை தேவையில்லை என்பதே சுராஜ் முடிவின் சாராம்சம்.














Click it and Unblock the Notifications