இளையராஜா அலுவலகத்தில் வெடிகுண்டு இருக்கு.. டிஜிபி அலுவலகத்துக்கு போன மெயில்.. திக்திக்
சென்னை: பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் கோடம்பாக்கம் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி டிஜிபி அலுவலகத்துக்கு இன்று இ-மெயில் அனுப்பப்பட்டது. இதையடுத்து உடனடியாக மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் இளையராஜாவின் அலுவலகத்துக்கு விரைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. இவரது பாடல்களை இன்றைய 2கே கிட்ஸ் வரை ரசித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம் உள்பட பிற சமூக வலைதளங்களில் இளையராஜாவின் பாடல்கள் அடிக்கடி டிரெண்டிங் ஆகி வருகிறது.

இளையராஜாவின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று இளையராஜாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு இருப்பதாக சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த இ-மெயிலை பார்த்து டிஜிபி அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை போலீசார் இளையராஜாவின் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். அலுவலகத்தின் அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் எந்த வெடிகுண்டும் கிடைக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இதையடுத்து சிறிது நேரத்துக்கு பிறகு மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் இளையராஜாவின் அலுவலகத்தை விட்டு புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் இளையராஜாவின் அலுவலகம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியது. தற்போது பிரபலங்களின் வீடு, அலுவலகங்களை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது அடிக்கடி நடந்து வருகிறது.
அதன்படி கடந்த முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா, நடிகரும், தவெக தலைவருமான விஜய், நடிகர் எஸ்வி சேகர் மற்றும் சில பத்திரிகையாளர்களின் வீடுகளுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மிரட்டலை தொடர்ந்து அங்கும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். மோப்பநாய் அனைத்து இடங்களில் மோப்பம் பிடித்து ஓடியது. அதுவும் புரளியாக அமைந்தது.
அதேபோல் 11ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டல் விடுக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட சோதனையிலும் அதிர்ஷ்டவசமாக எதுவும் கிடைக்கவில்லை.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை சேர்ந்த ஐயப்பன் என்ற மாற்றுத்திறனாளியை கைது செய்தனர். இவர் ஏற்கனவே சென்னை ரயில் நிலையங்கள் உள்பட பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications