விவேக் மறைவு துக்கத்தில் அழ்த்திவிட்டது.. அவரை போல இன்னொருவரை பார்க்க முடியாது.. இளையராஜா உருக்கம்
சென்னை: நடிகர் விவேக்கின் மரணம் தன்னை மிகுந்த துக்கத்தில் அழ்த்திவிட்டதாக தெரிவித்துள்ள இளையராஜா, அவர் வைத்திருந்த அன்பையும் அபிமானத்தையும் மற்றொருவரிடம் பார்க்க முடியாது என மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார்.
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் சிகிச்சை பலனிற்றி இன்று அதிகாலை காலமானார். மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
நடிகர் விவேக்கின் திடீர் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா நடிகர் விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றைத் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இளையராஜா வீடியோ
அதில் நடிகர் விவேக் குறித்து பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். இளையராஜா அந்த வீடியோவில் கூறுகையில், "நடிகர் விவேக்கின் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தி விட்டது. அதிலிருந்து மீண்டு வர முடியாமல் காலையிலிருந்து இப்போது வரை அந்த துக்கத்திலேயே என் மனம் அழிந்துவிட்டது. காரணம் நடிகர் விவேக் என் மீது மிகுந்த மரியாதையும், மிகுந்த அன்பையும் அளவற்ற அபிமானமும் வைத்திருந்த ஒரு நபர்.

ரசிகர், அபிமானி, பக்தர்
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்த காலத்தில் இருந்தே அவர் எனது ரசிகராக இருந்துள்ளார். பின்னால் அபிமானியாக மாறி, பின்னாளில் பக்தராக மாறக்கூடிய அளவுக்கு அவர் என்னை நேசித்துள்ளார். அவர் என்னென்ன செய்lது கொண்டிருக்கிறார் என்பதை என்னிடம் சொல்வார். நானும் அதைக் கேட்டுவிட்டு, அவரை ஊக்கப்படுத்தி, மற்ற காரியங்களில் அவருக்கு உறுதுணையாக இருந்தேன்.

வேறு யாரிடமும் பார்க்க முடியாது
சம்பத்தில் கூட என்னை ஸ்டுடியோவில் வந்து பார்த்துவிட்டுச் சென்றார். சில வேலைகளுக்காக என்னிடம் அனுமதிகூட வாங்கி சென்றிருந்தார்.அவர் என் மீது வைத்திருந்த அன்பையும் அபிமானத்தையும் இன்னொரு ரசிகனிடம் பார்க்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. எல்லோரும் அவரின் மறைவில் வேதனை அடைந்து இருப்பீர்கள். உங்கள் துக்கத்தில் நான் பங்கெடுக்க முடியாது. அதேபோல எனது துக்கத்தில் நீங்கள் பங்கெடுக்க முடியாது. அவரவர் துக்கம் எல்லாம் அவரவருக்குத் தான்.

பிராத்திக்கிறேன்
இருந்தாலும், நடிகர் விவேக்கின் குடும்பமே என் மீது பாசம் வைத்திருந்தது ஒரு குடும்பம். அவருடைய மறைவு எல்லோருக்கும் துக்கத்தை ஏற்படுத்தியது போல அவரது குடும்பத்தினருக்கும் அளவற்ற துக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். இந்த துக்கத்திலிருந்து அந்த குடும்பத்தார் மீண்டு வர வேண்டும் என நான் இறைவனைப் பிராத்திக்கிறேன். நடிகர் விவேக்கின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றும் இறைவனை நான் பிரார்த்தனை செய்கிறேன். விவேக்கின் குடும்பத்திற்கு இறைவனின் அருள் கிடைக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications