டாடா கைவசம் போனதும்! அப்படியே கலர் மாறுதே ஏர் இந்தியா.. விமானம் உள்ளே பார்த்தால் ஆச்சர்யம்! சூப்பர்
சென்னை: டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியா விமானத்தின் புதிய படங்கள் வெளியாகி உள்ளன. ஏர் இந்தியா விமானங்களை தற்போது டாடா நிறுவனம் புனரமைக்க தொடங்கி உள்ளது.
இந்த புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. முக்கியமாக உள்ளே இருக்கைகள் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது மாற்றப்பட்ட Air India A350 விமானத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. பிஸ்னஸ் கிளாஸ் போன்ற அகலமான சீட்டுகள், பெரிய கால் இடைவெளி, குஷன், தலை வைக்க வசதியான அமைப்பு என்று சிறப்பான தோற்றத்தில் உருவாக்கி உள்ளன.

டாடா ஏர் இந்தியா: பல கட்ட போராட்டத்திற்கு பின் மீண்டும் ஏர் இந்தியா டாடா வசம் சென்றுள்ளது. மீண்டும் பிறந்த வீட்டிற்கே இந்த நிறுவனம் சென்றுள்ளது. கடந்த வருடங்களில் ஏர் இந்தியாவை வாங்க பெரிய போட்டி இல்லை என்றாலும், ஏலப்போட்டிக்கு இடையில் டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை கைப்பற்றி உள்ளது.
எப்படி உருவாக்கப்பட்டது ஏர் இந்தியா: இந்த ஏர் இந்தியா எப்படி டாடா குழுமம் மூலம் உருவாக்கப்பட்டது என்பதே ஒரு சூரரை போற்று பட கதை பாணிதான். இந்தியாவில் விமான பயணம் பெரிதாக இல்லாத, மக்கள் பெரிதாக வெளிநாடுகளுக்கு பறக்காத 1930 காலகட்டத்தில்தான் ஜெஆர்டி டாடாவின் தொலைநோக்கு பார்வை மூலம் டாடா ஏர் சர்வீஸ் நிறுவனம் உருவாக்கப்பட்டது. 1932ல் உருவாக்கப்பட்ட இந்த விமான ஏர்லைன்ஸ் நிறுவனம் பின்னர் டாடா ஏர்லைன்ஸ் என்று மாற்றப்பட்டது. இரண்டு எஞ்சின் கொண்ட சிறிய ரக de Havilland Puss Moths விமானம் மூலம் முதலில் கடிதங்களை கொண்டு செல்லும் சேவையை செய்து வந்தது. அதன்பின் பயணிகளை ஏற்றிச்செல்ல தொடங்கியது
சூரரை போற்று படத்தில் எப்படி சூர்யாவும் விமானம் ஓட்ட கூடியவரோ அதேபோல் ஜேஆர்டி டாடாவும் விமானம் ஓட்ட கூடியவர். இதன் முதல் போக்குவரத்து விமானத்தை ஓட்டியதே ஜேஆர்டி டாடாதான். அதன்பின் விமான போக்குவரத்து சென்னை - மும்பை - கராச்சி வரை டாடா நிறுவனம் மூலம் இயக்கப்பட்டது. முன்னாள் விமானப்படை விமானிகளை வைத்து இந்த பணிகளை டாடா நிறுவனம் மேற்கொண்டு வந்தது. இந்த விமானம் முதல் ஒரு வருடத்திலேயே 1.6 லட்சம் மைல்களை கடந்தது. மொத்தம் 155 பயணிகள் முதல் வருடத்தில் இந்த விமானத்தில் பயணம் செய்து இருந்தனர். அப்போதே 60 ஆயிரம் ரூபாய் லாபம் பார்த்த இந்த நிறுவனம், 9.27 டன் கடிதங்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சென்றது.
விமானத்தின் வரலாறு: அதன்பின் 1938ல் தீவிரமாக டாடா பயணிகள் போக்குவரத்தில் குதித்தது. பாம்பே - திருவனந்தபுரம் வரை 6 பேர் பயணிக்க கூடிய வகையில் விமான சேவையை தொடங்கியது. அதன்பின் கொழும்பு வரை விமான பயணத்தை நீட்டித்தது. இன்னும் சொல்லப்போனால் இரண்டாம் போரில் இந்தியாவில் இருந்து வீரர்களை அனுப்ப, கடிதங்களை கொண்டு செல்ல, உணவுகளை, குண்டுகளை கொண்டு செல்ல, அடிபட்டவர்களை மீட்க இந்த டாடா விமானங்கள் அப்போதைய பிரிட்டிஷ் ராயல் விமானப்படை மூலம் பயன்படுத்தப்பட்டது. இதில் டாடா விமான சேவை அதிக கவனம் ஈர்த்தது. இந்தியாவில் முதல் தனியார் பயணிகள் சேவை நிறுவனமாக இதனால் டாடா உருவெடுத்தது.
அதன்பின் உலகப் போர் முடிந்து 1946லேயே ஏர் இந்தியா நிறுவனம் பொது பங்கு நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. 1948ல் சுதந்திரத்திற்கு பின் இதன் 49 சதவிகித பங்குகளை மத்திய அரசு வாங்கியது. 1953ல் கொண்டு வரப்பட்ட விமான போக்குவரத்து நிறுவன சட்டம் காரணமாக டாடா ஏர்லைன்சின் பெருவாரியான பங்குகள் அரசால் வாங்கப்பட்டது. இதனால் நிறுவனம் அரசின் வசம் சென்றது. ஆனாலும் இதன் சேர்மேனாக ஜெஆர்டி 1977 வரை இருந்தார். அதன்பின் இந்த நிறுவனம் ஏர் இந்தியா என்று பெயர் மாற்றப்பட்டு முழுவதுமாக அரசு கட்டுப்பாட்டில் வந்தது. கிட்டத்தட்ட டாடாவிடம் இருந்து சட்டத்தை பயன்படுத்தி இந்த நிறுவனம் வாங்கப்பட்டது (கொஞ்சம் கட்டாயப்படுத்தி) என்றுதான் இதை கூற வேண்டும்.
இப்போது இதே நிறுவனம் தற்போது மீண்டும் டாடா வசம் சென்றுள்ளது.












Click it and Unblock the Notifications