மெட்ரோ பயணிகளின் கவனத்திற்கு.. பழைய கார்டு இனி செல்லாதா? மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இனி பயணிகளுக்குப் பழைய கியூஆர் (QR) பயண அட்டைகள் வழங்கப்பட மாட்டாது என்றும், அதற்குப் பதிலாக "சிங்கார சென்னை கார்டு" மட்டுமே விநியோகிக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் புதிய மாற்றம் கொண்டு வந்துள்ளது.. மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே அட்டை' திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்தை ஒரே அட்டையில் இணைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..
மெட்ரோ நிர்வாகம் எடுத்துள்ள இந்த புதிய அதிரடியின்படி, புதிய அட்டை வாங்க வரும் பயணிகளுக்கு இனி தேசிய பொது மொபிலிட்டி கார்டு (NCMC) எனப்படும் சிங்கார சென்னை அட்டைகள் மட்டுமே வழங்க மெட்ரோ நிர்வாகம் நேரடியாக உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே பழைய வகை பயண அட்டைகளை வைத்திருக்கும் பயணிகள் அது குறித்து கவலைப்படத் தேவையில்லை.. உங்களிடம் இருக்கும் பழைய அட்டைகளில் இருப்புத் தொகை ) இருக்கும் வரை அவற்றை வழக்கம் போலப் பயணத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த அட்டைகள் செல்லாது என்று எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை..
இருந்தாலும், அந்த அட்டைகளில் ரீசார்ஜ் செய்வதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது இருப்புத் தொகை தீர்ந்துவிட்டாலோ, பயணிகள் அந்த அட்டையை நிலையங்களில் ஒப்படைத்துவிட்டு புதிய சிங்கார சென்னை அட்டையைப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.. பழைய அட்டைகளை மாற்றி புதிய அட்டைகளைப் பெறுவதற்கான வசதிகள் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் செய்யப்பட்டுள்ளன..
இந்தச் சிங்கார சென்னை அட்டை மூலம் சென்னை மெட்ரோவில் மட்டுமன்றி, மாநகரப் பேருந்துகள், புறநகர் ரயில்கள் மற்றும் இந்தியாவின் பிற நகரங்களில் உள்ள மெட்ரோ சேவைகளையும் பயன்படுத்த முடியும்.
இதனைத்தவிர, குறிப்பிட்ட சில வணிக நிறுவனங்களில் பொருட்கள் வாங்குவதற்கும், வாகன நிறுத்துமிடக் கட்டணத்தை செலுத்துவதற்கும் இந்த அட்டையைப் பயன்படுத்தும் வசதி உள்ளது.. இதனால் பயணிகள் ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி அட்டைகளை வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்பதால், இந்த பிரச்சினை இனிமேல் வராது என்கிறார்கள் அதிகாரிகள்.
மெட்ரோ நிர்வாகம் எடுத்துள்ள இந்த முடிவின் மூலம், பழைய வகை அட்டைகள் படிப்படியாகப் புழக்கத்திலிருந்து குறைக்கப்பட்டு, அனைத்துப் பயணிகளும் நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட அட்டைகளுக்கு மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
இப்போது மொபைல் செயலி மற்றும் வாட்ஸ்அப் மூலம் கியூஆர் டிக்கெட் எடுத்துப் பயணிக்கும் நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.. அட்டை மூலம் பயணிப்பவர்கள் மட்டுமே இந்த புதிய நடைமுறைக்கு மாற வேண்டியிருக்கும்.
பழைய அட்டைகளை வைத்திருப்பவர்கள் அதன் செயல்பாடு நிறுத்தப்படும் வரை பயன்படுத்தலாம் என்றாலும், கூடுதல் வசதிகள் கொண்ட சிங்கார சென்னை அட்டைக்கு முன்கூட்டியே மாறுவது பயணத்தை மேலும் எளிதாக்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.. சென்னை மெட்ரோவின் இந்த அறிவிப்பு பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது..!!












Click it and Unblock the Notifications