11 முறை தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்.. 12வது முறை தடுப்பூசி இல்லாததால் சோகம்! பீகாரில் சம்பவம்
சென்னை: கொரோனா மற்றும் ஒமிக்ரான் பீதியால்,பீகாரில் முதியவர் ஒருவர் கொரோனா தடுப்பூசியை 11 டோஸ் செலுத்தியிருப்பதால் விசாரணை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.
பீகாரைச் சேர்ந்த 84 வயது முதியவர் ஒருவர் கொரோனா, ஓமைக்ரான் பீதியில் 11 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டிருப்பது, மருத்துவர்களையும் அதிகாரிகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது எப்படி சாத்தியம் என்று விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பீகாரின் மதேபுரா மாவட்டம், சாவுசா நகரைச் சேர்ந்த 84 வயதான பிரம்மதேவ் மண்டல், 11 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் நன்றாக இருப்பதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார்.
''எனக்கு இடுப்பு வலி, முதுகுவலி இருந்தது அது தடுப்பூசி எடுத்தபிறகு நின்றுவிட்டது. சளித்தொந்தரவு, இருமல், மூச்சிரைப்பு போன்றவையும் இப்போது இல்லை. இதுபோன்ற தடுப்பூசிகளை அரசு சிறப்பாக தயாரித்துள்ளது. அனைத்து மக்களுக்கும் ஏன் அதிகமான டோஸ் தடுப்பூசி செலுத்தக்கூடாது. தடுப்பூசி மூலம் எனக்கு ஏராளமான பலன் கிடைத்திருக்கிறது.
ஆதார் உள்ளிட்ட எந்த நம்பரையும் நான் மாற்றவில்லை.ஒவ்வொரு முறையும் ஆதார் எண் கொடுத்துதான் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன். யாரும் என்னை கேள்வி கேட்கவில்லை. கண்காணிப்பும் இல்லை. இதுவரை 11 டோஸ் தடுப்பூசி செலுத்திவிட்டேன். 12-வது டோஸ் செலுத்த நான் ஆரம்ப சுகாதார மையத்துக்குச் சென்றேன். ஆனால், தடுப்பூசி இருப்பு இல்லை என்பதால் திரும்பவந்துவிட்டேன்.
அரசிடம் சரியான கண்காணிப்பு சிஸ்டம் இல்லை, ஆகவே இன்னும் கூட டோஸ்களை எடுத்துக் கொள்வேன்'' என்கிறார் பிரம்மதேவ். செப்டம்பர் மாதத்தில் மட்டும் 3 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கிறார். இவர் ஒரு அரசு ஊழியர், தபால் துறையில் வேலை பார்த்தவர்.
இந்திய அரசாங்கத்தால் சான்றளிக்கப்பட்டு, கொரோனா தடுப்பூசி இரு டோஸாக எல்லோருக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒருவருக்கு இரு டோஸ் செலுத்திவிட்டால், கோவின் இணைதளத்தில் தானாகவே பதிவாகிவிடும். இப்படி இருக்கும்பட்சத்தில் பிரம்மதேவ் மண்டல் மட்டும் எப்படி இத்தனை முறை தடுப்பூசி எடுத்துக்கொண்டிருப்பார் என்ற குழப்பத்தில் அதிகாரிகள். இது தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications