Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலையின் முதுகு அழுக்கை பாருங்க.. போதையில் தள்ளாடும் பாஜக மாநிலங்கள்! விளாசிய இனிகோ இருதயராஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகரித்துவிட்டதாக பாஜக, அதிமுகவினர் குற்றம்சாட்டி வரும் நிலையில் "போதையில் தள்ளாடும் பாஜக மாநிலங்கள்" என்று குறிப்பிட்டு விரிவான பதிவை வெளியிட்டு உள்ளார் திமுக எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கும் அவர், "காந்தி பிறந்த குஜராத்தை போதை கிடங்கிற்குள் தள்ளிவிட்டு அது ஏதோ வேற்று கிரகம் என்பது போல், தமிழகம் போதை வஸ்துகளின் தலைநகரம் என வாய் கூசாமல் பேசி வருகிறார் பாஜகவின் அண்ணாமலை. இவருக்கு எப்போதும் தன் முதுகு அழுக்கின் நாற்றம் தெரியாது. அதனால் தான் எல்லா நேரத்திலும் மற்றவர்களைப் பின் தொடர்ந்தே மோப்பம் பிடித்துக் கொண்டிருப்பார்.

Inigo Irudayaraj said that BJP states are teetering on drugs

அதிகம் பேசுபவன் அதிக பிரசங்கி மட்டுமல்ல; தன் இயலாமையை- தனது அறியாமையை மறைக்கவும் ஒருவன் பேசிக்கொண்டே இருப்பான். அதற்குப் பெயர்தான் அண்ணாமலை ஃபார்முலா. அதை நன்றாகவே செய்து கொண்டிருக்கிறார் அவர். இல்லையென்றால் டெல்லியில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதில் திமுக நிர்வாகிக்குத் தொடர்பு என்ற ஒற்றைக் காரணத்தைச் சுமந்து கொண்டு தமிழகம் போதை வஸ்துகளின் கூடாரம், தலைநகரம் என்றெல்லாம் அண்ணாமலையால் உளறிக் கொட்ட முடியுமா?

நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் போதை வஸ்துகள் கடத்தப்படுவதாகவும், பயன்படுத்தப்படுவதாகவும், சகட்டுமேனிக்கு பேசியிருக்கிறார் இந்தக் காவி சிந்தனாவாதி. ஆளுங்கட்சியை தனது பதவிக்கு ஏற்ப விமர்சித்தே ஆக வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசி விடுவதா? எதார்த்த நிலையென ஒன்று இருப்பதை மறந்து விடுவதா? பாரதிய ஜனதா கட்சியின் மூத்த முன்னோடி மாநிலம் ஆன குஜராத்தில் ஹெராயின், ஒப்பியம், கொகைன், கான்ட்ரா பேண்ட் என ஏதோ உணவு பட்டியல்போல் விதவிதமான போதை வஸ்துகள் பல ஆயிரம் கிலோ என்ற அளவில் பறிமுதல் செய்யப்பட்ட படியே உள்ளன.

அப்படி என்றால் இந்தப் பறிமுதல் நடவடிக்கையிலிருந்து தப்பி சமூகத்தில் அது எந்த அளவிற்கு புழக்கத்தில் இருக்கும் என்பதை ஒருவர் எளிதில் புரிந்து கொள்ள முடியும் அண்ணாமலையைத் தவிர. குஜராத் என்று மட்டுமல்லாமல், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மணிப்பூர், கோவா எனப் பாஜக ஆளும் மாநிலங்களில்தான் போதைப் புழக்கம் தள்ளாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. இது ஏதோ போகிற போக்கில் சொல்கிற கதை அல்ல. புள்ளி விவரங்கள் இந்த அவலத்தை எல்லாம் புட்டு வைக்கின்றன.

குறிப்பாகக் குஜராத்தில் இருக்கும் போர் பந்தர், முந்திரா, காந்திதம், வெரவல் போன்ற துறைமுகங்களில் எல்லாம் போதைப் பொருட்களின் புழக்கம் அதிக அளவில் இருக்கிறது எவராலும் மறுக்க முடியாத உண்மை இந்தத் துறைமுகங்கள் வழியாகப் போதைப் பொருட்கள் வருவதும், போவதும் கப்பல்களின் வருகைபோல் ஆகிவிட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டில் போர் பந்தர் துறைமுகத்தில் மட்டும் 1500 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. 2022 ஆம் ஆண்டில் முந்திரா துறைமுகத்தில் 3000 கிலோ ஹெராயினும், போர் பந்தர், ஜாம்நகர் ஆகிய இடங்களில் 750 கிலோ கான்ட்ரா பேண்டும் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த ஆண்டில் காந்திதம் துறைமுகத்தில் 80 கிலோ கொகைனும், இந்த ஆண்டு தொடக்கத்தில் வெரவல் துறைமுகத்தில் 50 கிலோ ஹெராயினும், போர்பந்தரில் 3300 கிலோ ஹெராயினும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் போர் பந்தர் துறைமுகத்தில் 3300 கிலோ ஹெராயன் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது நாட்டின் மிகப்பெரிய போதை பொருள் பறிமுதல் என்றே கூறப்படுகிறது.

2018 ஆம் ஆண்டில் குஜராத் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மொத்த அளவு 4057 கிலோ ஆகும். இதேபோல் குஜராத் மட்டுமின்றி பாஜக ஆட்சி செய்யக்கூடிய பிற மாநிலங்களான அரியானாவில் அதே ஆண்டில் 10,258 கிலோவும், ஜார்க்கண்டில் 3 ஆயிரத்து 102 கிலோவும், மத்திய பிரதேசத்தில் 489 கிலோவும், மணிப்பூரில் 2,847 கிலோவும், உத்தரப்பிரதேசத்தில் 3 ஆயிரத்து 994 கிலோவும் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

பாஜக ஆட்சி செய்யும் மற்றொரு மாநிலமான ராஜஸ்தானில் ஒரு லட்சத்து 4,169 கிலோ என்ற அளவிற்கு போதை பொருள் பிடிபட்டிருக்கிறது. ஆனால் அதே ஆண்டில் தமிழகத்தில் பிடிபட்ட போதைப் பொருள் அளவு மிகவும் சொற்பமாகும். அதாவது முழுமையாக ஒரு கிலோ கூடக் கிடையாது. 2018 ஆம் ஆண்டில் தான் நிலைமை இப்படி என்றால், அடுத்த நான்கு ஆண்டுகளில் அதாவது 2022 ஆம் ஆண்டில் குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் அளவு 12,838 கிலோ ஆகும்.

இதன் மூலம் நான்கே ஆண்டுகளில் அங்குச் சுமார் 8000 கிலோ போதை பொருட்கள் கூடுதலாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பாஜகவின் சாமியார் முதலமைச்சர் ஆன யோகி ஆதித்யநாத்தின் உத்தர பிரதேசத்தில் 4 ஆயிரத்து 529 கிலோ போதைப் பொருள் பறிமுதலாகி இருக்கிறது. மற்றொரு பாஜக மாநிலமான மத்திய பிரதேசத்தில் 32,589 கிலோ போதை பொருள் பறிமுதலாகி இருக்கிறது.

அதே நேரம் தமிழகத்தில் 21 கிலோ என்ற அளவில் தான் போதை வஸ்து பறிமுதல் ஆகி இருக்கிறது... இதையெல்லாம் அறிந்தும் அறியாமலோ அல்லது தெரிந்தும் தெரியாமலோதான் நமது அண்ணாமலை தமிழகத்தின் மீது சேற்றை வாரி இறைத்து கொண்டிருக்கிறார். முதலில் பாஜக ஆளும் மாநிலங்களின் முதுகில் அப்பிக் கிடக்கும் அழுக்கை அழுத்தித் துடைத்து விட்டுப் பிறகு ஊருக்கு உபதேசம் செய்யப் புறப்பட்டு வரட்டும் அண்ணாமலை. அப்போதுதான் நோட்டாவிற்கு பக்கத்திலாவது அவர் சார்ந்திருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்குத் தமிழகத்தில் ஓட்டுக்கள் கிடைக்கலாம்.

இதேபோல்தான் கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு கஞ்சா ராஜ்யத்தையே நடத்திவிட்டு, இன்று தமிழகம் போதை பொருள் கிடங்காகிவிட்டது என ஏதோ ஒன்றைப் பேச வேண்டுமேயெனப் பேசி இருக்கிறார் எடப்பாடி ஐயா. 2016 முதல் 2020 ஆம் ஆண்டு முடியும் வரையிலான காலகட்டத்தில் குட்கா விற்கு ஒரு புறம் தடை வைத்துவிட்டு மற்றொருபுறம் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் கரம் கோர்த்துக்கொண்டு சில அமைச்சர்களின் ஆதரவாளர்களும் இந்தப் போதை வஸ்துகளை பதுக்கிப் பல கோடி ரூபாய் அளவிற்கு பணம் தமிழகம் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடாது.

இது தொடர்பாகச் சென்னை மாநகர ஆணையராக இருந்த ஜார்ஜ் மற்றும் முன்னாள் காவல் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட நபர்கள்மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருப்பதையும், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா ஆகியோரது ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டதையும் தமிழகம் மறந்து விடாது." என்று குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+