ஆதவ் முன் இருக்கும் ஒரே சாய்ஸ்? வேறு வழியே இல்லை! என்ன செய்ய போகிறார்?
சென்னை: விசிக துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா வருங்காலத்தில் எந்தக் கட்சியுடன் இணைந்து பயணிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன? அந்தக் கட்சி எது?
விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனாவின் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும்? அவர் அடுத்து என்ன செய்வார்? எந்தக் கட்சியில் சேரப்போகிறார்? எனப் பல கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. திருமாவளவன் கட்சியை விட்டு அவரை இடைநீக்கம் செய்த பிறகும்கூட ஆதவ் வருத்தம் தெரிவிக்கும் விதமாக அறிக்கைவிட்டு கட்சியில் மீண்டும் இணைவதற்காக முயற்சி செய்யும் விதமாக அறிக்கை விடவில்லை. அதற்கு மாறாக அவர் 'ஆயிரம் கைகள் மறைந்தாலும் ஆதவன் மறைவதில்லை' என்று ட்வீட் போட்டு பதில் கொடுத்திருந்தார்.

ஆதவ் அர்ஜுனாவின் விவகாரத்தில் ஒரு கட்சியின் தலைவராக திருமாவளவன் அளித்த பேட்டிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால், கடந்த 2 மாதங்கள் முன்பாக ஒரு வாரப் பத்திரிகையில் உதயநிதியை விமர்சித்தது தொடங்கி அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசியது வரை ஆதவ் அர்ஜுனா ஊடகங்களைச் சந்தித்தது மிகமிகக் குறைவுதான்.
ஒரு சர்ச்சையை தொடங்கி வைத்துவிட்ட பிறகு அதைப் பலரும் மறுத்து கருத்துச் சொன்னாலும் ஆதவ் அதை அமைதியாகக் கடந்து போய்விடுகிறார். அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அவர் அங்கம் வகிக்கும் தலைவரே அவரை மறுத்து அறிக்கைவிட்டாலும் அதைப் பற்றி பெரிய அளவில் கண்டுகொள்ளாமலும் பதற்றம் அடையாமலும் ஆதவ் அர்ஜுனா இருப்பதை அவரது நடவடிக்கைகள் மூலம் உணர முடிகிறது. இப்படித்தான் சில ஆண்டுகள் முன்னால் டிடிவி தினகரன் எது சொன்னாலும் அது தலைப்புச் செய்தியாக இருந்தது. அவரை ஒன்றுமே இல்லாமல் அதிமுக ஆட்சியில் அமைதியாக்கிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
அதேமாதிரி தர்மயுத்தம் எனக் களத்தில் குதித்த காலத்தில் ஓபிஎஸ் பக்கம் ஊடகங்கள் கவனம் செலுத்தின. அவர் இப்போது அந்தப் பரபரப்பு செய்திகளை வழங்கும் தலைவர்கள் பட்டியலில் இல்லாமல் போய்விட்டார். அதற்கு முன்பாக 1996இல் ஒரு காலத்தில் ரஜினி அரசியல் பற்றிப் பேசினால் மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் இருந்தது. அதேபோல் 1994 இல் திமுகவை உடைத்து மதிமுக உருவான போது வைகோ பற்றிய செய்திகள் என்றால் பரபரப்பாக விற்பனையாகின. சில வருடங்கள் கழித்து அவர் அரசியலில் அந்த செல்வாக்கை இழந்தார். மாஞ்சோலை விவகாரத்தின் மூலம் அரசியல் தலைவராகவே உருவெடுத்தார் டாக்டர் கிருஷ்ணசாமி.
பாகமவும் விசிகவும் நடத்திய போராட்டத்தால் குஷ்பு பெரிய அளவில் பேசு பொருளாக இருந்தார். நடிகையாக இருந்த அவரை அரசியல் கட்சி பக்கம் கொண்டுவரக் காரணமே இந்த இரு கட்சிகள்தான். அவர் பெண்களின் கன்னித் தன்மை பற்றி ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டி அவரை சர்ச்சை நாயகியாக வளர்த்தது. அவர் நீதிமன்றம் வரை போய் சட்டரீதியாக வெற்றியும் பெற்றார். ஆனால், இன்று குஷ்புவின் இடம்? அரசியலில் நிலையான புகழ் என்பது கிடைத்தவர்கள் குறைவு. அது அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என சிலருக்குத்தான் கிடைத்தது. விஜயகாந்த் கூட அதில் கீழே விழுந்தார்.
1962 ஆம் ஆண்டு தேர்தலில் 50 இடங்களில் திமுக வென்றது. அதற்கு முந்தைய 1957 தேர்தலில் 15 சீட்டுகளை திமுக வென்றது. அப்போது காமராஜர் முதல்வராக இருந்தார். திமுக வென்ற இந்த 15 தொகுதிகளையும் குறிவைத்து வேலை பார்த்தது காங்கிரஸ். அடுத்த தேர்தல் வந்தபோது 1962 தேர்தலில் 50 இடங்களில் திமுக வென்றாலும் அண்ணாதுரை உட்பட குறிவைத்த அந்த 15 தொகுதிகளில் தோல்வியை தழுவினர். மு.கருணாநிதி மட்டுமே தஞ்சாவூரில் போட்டியிட்டு வென்றார்.
அதாவது 1962 திமுக பெரிய வெற்றியைச் சந்தித்த பின்னர் கட்சியில் ஒரு பிளவு ஏற்பட்டது. பெரியாரின் வலது கரமாகவும் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இருந்த ஈ.வி.கே.எஸ். சம்பத் கட்சியை விட்டு வெளியேறினார். உடன் கண்ணதாசனும் போனார். ஆக, அரசியல் பக்கங்களைப் புரட்டினால் பல தலைவர்கள் கீழே விழுந்துள்ளார்கள். ஒரு காலத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத அளவுக்கு ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் இருட்டாக மாறியது. பின் அவரே 40க்கு 40 தொகுதிகளை வென்றார். 2001இல் கருணாநிதியை தவிர அனைத்து திமுக வேட்பாளர்களையும் ஜெயலலிதா தோற்கடித்தார்.
இன்றைக்குப் பேசு பொருளாக மாறி இருக்கும் ஆதவ் அர்ஜுனா பற்றி கருத்து கூறிய தராசு ஷ்யாம், "ஆதவ் அர்ஜுனா என்ற பெயரை 6 மாதங்கள் முன்புதான் நான் கேள்விப்பட்டேன். அவர் ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியா? அவரிடம் ஆயிரம் கோடிக்குச் சொத்து இருக்கிறது. கட்சிக்குப் பணம் செலவு செய்ய ஒருவர் தேவை. எல்லா கட்சிக்கும் தேவை உள்ளது. அதனால்தான் ஆதவ் அர்ஜுனாவை விசிகவில் சேர்த்து உடனே பதவி அளித்தார்கள். அவரிடம் பணம் இல்லை என்றால் ஆதவ்க்கு பதவி கொடுத்த போதே விசிக மூத்த தலைவர்கள் எதிர்ப்பைக் காட்டி இருப்பார்கள்.
ஒருவரை 6 மாதங்கள் கட்சியிலிருந்து நீக்கும் நடைமுறையை நான் 45 ஆண்டுக்கால அனுபவத்தில் பார்த்ததே இல்லை. ஒருவர் மன்னிப்பு கேட்டால் உடனே கட்சியில் சேர்த்துக்கொள்வதுதான் நடைமுறை. ஆனால், ஆதவ் வருத்தம் தெரிவிக்கவே இல்லையே?
ஆதவ் அர்ஜுனா இனி என்ன செய்ய முடியும்? அதிமுகவுடன் போகலாம். அங்கே வெற்றிக்கு வாய்ப்பு இல்லை. இவர் தனியாகக் கட்சி தொடங்கினால் இவரது 1000 கோடி சாம்ராஜ்ஜியம் சரிந்துவிடும். ஆதவ் முன்பு உள்ள ஒரே வாய்ப்பு விஜய்தான். ஏனென்றால் அவர் பாஜக பக்கமோ அல்லது சீமான் பக்கமோ போக முடியாது. அவர் பெரியார், அம்பேத்கர் எனக் கொள்கையைப் பேசிவிட்டார். ஒருவேளை காங்கிரஸ் பக்கம் போனாலும் அவர் திமுக கூட்டணியில் சீட்டு வாங்க முடியாது. இதில் பிரச்சினை என்னவென்றால் விஜய் அந்தளவுக்கு வளரவில்லை. ஆதவ் கூட இன்னும் மக்கள் செல்வாக்கைப் பெற்று வளர்ந்துவிடவில்லை" என்கிறார்.












Click it and Unblock the Notifications