5 தொகுதியில் மட்டும் உதவுங்க.. அதிமுகவிடம் டீல் போட்ட பாஜக? வலு குறைந்த நபரை இறக்கும் எடப்பாடி? அடடா
சென்னை: அதிமுகவை தங்கள் வழிக்கு கொண்டு வர மிரட்டல் பாணியை விடுத்து சாத்வீக முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளதாம் பாஜக. அதாவது, தமிழகத்தில் பாஜகவுக்கு 5 எம்.பி.க்கள் கிடைக்க வேண்டும் என அமித் ஷா விரும்புகிறார். அதற்காக அதிமுகவுடன் ரகசிய டீல் ஒன்றை மேற்கொள்ள பாஜக முடிவு செய்துள்ளதாம்.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக தீவிரமாக முயன்று வந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சுமுகமாக போக டெல்லி பாஜக ஆலோசனை செய்து வந்தது.

2024ல் தமிழ்நாட்டில் கூடுதல் எம்பி இடங்களை வெல்லும் விதமாகவும்.. 2026ல் கூடுதல் சட்டசபை இடங்களை வெல்லும் விதமாகவும் பாஜக எடப்பாடி உடன் சமாதானமாகி செல்ல பாஜக முயன்று வந்தது. அதிமுகவிற்கான கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா பேட்டி அளித்தார்.
தேசிய அளவில் பாஜக லோக்சபா தேர்தலில் வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்றே பாஜக கருதுகிறது, இருந்தாலும் தென்னிந்தியாவில் வலுவாக கால் பதிக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள் வேண்டும் என்பதில் பாஜக தீர்க்கமாக இருக்கிறது. அதற்கு அதிமுக தயவு தேவை.
2024ல் கூட்டணி இருந்தால்தான், 2026 சட்டசபை தேர்தலில் கூட்டணியை தொடர முடியும். தென்னிந்தியாவில் பாஜக வலுவாக இல்லை என்ற விமர்சனத்தை சரி செய்ய அதிமுகவின் தேவை இருக்கும் என்பதால் பாஜக இறங்கி வந்ததாக கூறப்படுகிறது.
சாமியார் பேச்சு: அதிமுகவை சமாதானம் செய்து பாஜக சார்பாக கோவையை சேர்ந்த ஆன்மீக குரு ஒருவர் களமிறக்கப்பட்டு பேச்சுவார்த்தைகளை செய்தார்.
இரண்டு கட்சிக்கும் நெருக்கமாக இருக்கும் அந்த சாமியார் மூலம் மீண்டும் அதிமுகவை பாஜகவிற்குள் இழுக்கும் பணிகள் நடந்து வந்தது. திரைமறைவில் இந்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் எதுவும் பலன் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
பல கோணங்களில் முயற்சி: பல்வேறு கோணங்களிலும், பல்வேறு ஆட்கள் மூலமாகவும் பாஜக கூட்டணிக்கு அதிமுகவை இழுக்க நிறைய முயற்சிகளை எடுத்தது பாஜக தலைமை. ஆனாலும், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்கிற தனது முடிவில் மிக உறுதியாக இருந்தார்; இருந்தும் வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த நிலையில், கடைசி முயற்சியாக இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் மூலம் முடக்குவோம் என்கிற அஸ்திரத்தை வீசிப் பார்த்தது பாஜக. ஆனாலும் எடப்பாடி அசைந்துக் கொடுக்கவில்லை. இந்த நிலையில், தற்போது மிரட்டல் பாணியை விடுத்த சாத்வீக முயற்சி ஒன்றை எடுத்துள்ளதாம் பாஜக. அதாவது, தமிழகத்தில் பாஜகவுக்கு 5 எம்.பி.க்கள் கிடைக்க வேண்டும் என அமித் ஷா விரும்புகிறார்.
ரகசிய டீல்: அந்த 5 தொகுதிகள் எது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்தப்படும். அந்த தொகுதிகளில் பாஜக வெற்றி பெறுவதற்கு அதிமுக உதவ வேண்டும்; குறிப்பாக, பாஜகவை எதிர்க்கும் அதிமுக வேட்பாளர்கள் வலிமையான நபர்களாக இருக்கக்கூடாது; வெற்றி பெறுவதற்குரிய சில வழிகளில் அதிமுக உதவ வேண்டும் என்கிற யோசனையை எடப்பாடிக்கு பாஸ் செய்திருக்கிறதாம் பாஜக. இதற்கு, எடப்பாடி தரப்பிலிருந்து, இரட்டை இலை எந்த சூழலிலும் முடக்கப்படக்கூடாது என்கிற நிபந்தனையை கோரிக்கையாக பாஜகவுக்கு பாஸ் செய்திருக்கிறதாம்.
அதே சமயம், பாஜக வேட்பாளருக்கு எதிராக பலகீனமான வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம் என வைத்துக்கொண்டால், அந்த தொகுதியில் திமுக வலிமையான வேட்பாளரை நிறுத்தினால் என்ன செய்வீர்கள்? என்ற கேள்வியையும் பாஜகவிற்காக தம்மிடம் பேசுபவர்களிடம் கேட்டுள்ளாராம் எடப்பாடி.












Click it and Unblock the Notifications