இப்போ இதுவா முக்கியம்! பிஸியான "மேலிடம்".. தமிழக பாஜக தலைகளுக்கு பறந்த வார்னிங்.. நடந்தது என்ன?
சென்னை: தமிழ்நாடு பாஜகவில் சுனாமி போல புயலை கிளப்பி இருக்கிறது காயத்ரி ரகுராம் நீக்கப்பட்ட விவகாரமும், திருச்சி சூர்யா ஆடியோ விவகாரமும். இந்த விவகாரம் விந்திய மலையை தாண்டி.. பாஜக மேலிடத்திற்கும் சென்றுள்ளது. பாஜக தலைமை நிர்வாகிகள் இதற்கு கொடுத்த ரியாக்சன் அதிக கவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி தீவிரமாக களப்பணிகளை செய்ய தொடங்கி உள்ளது. முக்கியமாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் பாரத் ஜோடோ யாத்திரை மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
தென்னிந்தியாவில் இந்த யாத்திரை ஹிட் அடித்த காரணத்தால் பாஜகவும் கொஞ்சம் உஷாராகி உள்ளது. இதன் பொருட்டே மோடி, அமித் ஷா ஆகியோர் திடீரென தென்னிந்தியா மாநிலங்களுக்கு வருகை புரிந்தனர். மத்திய அமைச்சர்கள் மொத்தமாக தமிழ்நாட்டை விசிட் அடிக்கவும் இதுவே காரணம்.
பாஜக காயத்ரிக்கு ஒரு நீதி! திருச்சி சூர்யா சிவாவுக்கு ஒரு நீதியா? மக்கள் நீதி மய்யம் கடும் விமர்சனம்
அமித் ஷா
தமிழ்நாடு வந்த அமித் ஷாவும் பூத் கமிட்டியை வலிமையாக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். கமலாலயத்தில் நடந்த மீட்டிங்கில், திமுகவில் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள், கவுன்சிலர்களை நம் பக்கம் இழுக்க பாருங்கள். அவர்களை பாஜக பக்கம் கொண்டு வர வேண்டும். அதேபோல் உள்ளூர் அளவில் திமுகவிற்கு பூத் வேலைகளை பார்த்தவர்களை பாஜகவில் சேர வையுங்கள். ஒரு வாக்காளர் லிஸ்ட் இருந்தால் ஒவ்வொரு பக்கத்திலும் குறைந்தது 5-6 பேராவது நம்மளுடைய ஆட்களாக இருக்க வேண்டும் என்றும் அமித் ஷா உத்தரவிட்டு இருக்கிறாராம்.
இரண்டு விவகாரம்
இந்த நிலையில்தான் பாஜக பூத் கமிட்டி அமைப்பதில் கவனம் செலுத்தும் என்று பார்த்தால் உட்கட்சி மோதலில் சிக்கி தவித்து வருகிறது. ஒரு பக்கம் காயத்ரி ரகுராம் விவகாரம் உச்சம் பெற்றுள்ளது. காயத்ரி ரகுராம் பின்வரும் புகார்களை வைத்துள்ளார்.
1. கட்சியில் மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதையை இல்லை.
2. சிலருக்கு காசு கொடுத்து லைக்ஸ் வாங்குகிறார்கள். இதற்காக வேலை செய்யும் வார் ரூம், பாஜகவின் மூத்த நிர்வாகிகளை அசிங்கப்படுத்துகிறது.
3. கட்சியில் பாகுபாடு காட்டப்படுகிறது.
4. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் நான் புறக்கணிக்கபட்டேன்., என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இதையடுத்தே கட்சியில் இருந்துய காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டு உள்ளார்.
நீக்கம்
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் திருச்சி சூர்யா விவகாரம் கவனம் பெற்றுள்ளது. பாஜகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் டெய்சி சரண் தனது துறைக்கு கீழே கமிட்டி உருவாக்குவதற்கு திருச்சி சூர்யா எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவதற்கு எதிராக டெய்சியிடம் சூர்யா கோபமாக பேசியதாக கூறப்படுகிறது. அந்த ஆடியோவில் மிக மோசமான வார்த்தைகளை அவர் பயன்படுத்தி இருக்கிறார். முழுக்க முழுக்க கெட்ட வார்த்தைகள் ஆடியோவில் நிரம்பி வழிகின்றன. அதோடு.. உன்னை தீர்த்துடுவேன் என்று சொல்வதோடு, கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் சூர்யா பேசியதாக கூறப்படுகிறது.
டெல்லி
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லிக்கு புகார் சென்ற நிலையில், மாநில நிர்வாகம் இப்போது இதில் முடிவு எடுக்கட்டும். இப்போது மேல் மட்ட தலைவர்கள் பிசியாக இருக்கிறார்கள். குஜராத் தேர்தல் நடக்கிறது. இப்போது குஜராத்தான் முக்கியம். தமிழ்நாடு விவகாரம் முக்கியமல்ல. அதை தமிழ்நாட்டிற்கு உள்ள பொறுப்பாளர்கள் பார்த்துக்கொள்ளட்டும். தேர்தலுக்கு பின் இதில் விரிவான விசாரணை செய்வோம் என்று கூறி இருக்கிறார்களாம். ஆனால் அதே சமயம் ஊடகங்களில் யாரும் தேவையின்றி பேச கூடாது.
ஊடகம்
ஊடகம, சமூக வலைத்தளங்களில் கட்சி விவகாரத்தை விவாதிக்க கூடாது. தேவையின்றி குற்றச்சாட்டுகளை வைக்க கூடாது. பிரச்சனை என்றால் தலைவரிடம் பேச வேண்டும். இல்லை என்றால் தலைவர் மீது புகார் எனில் மேலிடத்தில் புகார் வைக்க வேண்டும். ஆனால் பொதுவில் பேச கூடாது என்று வார்னிங் கொடுத்து இருக்கிறார்களாம். கட்சி விவகாரங்களை வெளியே பேசுவது தொண்டர்களுக்கு தேவைற்ற வருத்தத்தை கொடுக்கும். அதனால் நிர்வாகிகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது.
சூர்யா
திருச்சி சூர்யாவின் நண்பர்கள் என்று சொல்லும் பாஜக நிர்வாகிகள் சிலர் பாஜக சார்பாக சமீபத்தில் ஊடகங்களில் பேசினார்கள். அவர்கள், திருச்சி சூர்யா பேசிய ஆடியோ உண்மைதான். அந்த ஆடியோவில் இருப்பது நான்தான் என்று சூர்யா எங்களிடம் சொன்னார். 15 நாட்களுக்கு முன் அண்ணாமலைக்கு இது தெரிய வந்தது. இருவரையும் அழைத்து அண்ணாமலை பேசினார். அண்ணாமலை அவர்களை கண்டித்ததாக குறிப்பிட்டு இருந்தனர் என்று பாஜக சார்பாக பேசிய சில நிர்வாகிகள் விவாத நிகழ்ச்சிகளில் உளறினார்கள். டெய்சி சரணும் இதே விஷயத்தை பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். இதனால் 15 நாட்களாக அண்ணாமலை நடவடிக்கை எடுக்கவில்லையா என்று கேள்வி சமூக வலைத்தளங்களில் எழுந்தது. இந்த விஷயமும் டெல்லிக்கு தெரிந்து கண்டித்து இருக்கிறதாம். இதையடுத்தே பாஜக தலைவர் அண்ணாமலையும், ஊடகங்களில் பாஜக பெயரில் நிர்வாகிகள் பேச கூடாது. செய்தி தொடர்பாளர்கள் மட்டுமே ஊடகங்களில் பேச வேண்டும். அதை மீறி பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும்.யூ டியூப் சேனல்களில் பேச கூடாது. மீறி பேச விரும்பினால் தலைமையின் அனுமதியை பெற வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார்.