நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த ஆயிரம் விளக்கு திமுக வேட்பாளர் எழிலன்.. பின்னணி என்ன?
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கும் எழிலன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் இன்று எழிலன் எம்எல்ஏ, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார். சட்டசபை தேர்தல் நெருங்கிய நிலையில் நடந்துள்ள இந்த சந்திப்பின்ன பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் எழிலன். இவர் மீண்டும் அந்த சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார். அடிப்படையில் டாக்டரான இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனி டாக்டராகவும் பணியாற்றியவர்.
இவர் தற்போது எம்எல்ஏவாக இருப்பதோடு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் தான் இன்று டாக்டர் எழிலன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இந்த சந்திப்பு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் நடந்துள்ளது.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் ரஜினிகாந்தை, திமுகவின் எழிலன் சந்தித்து பேசியிருப்பது அதிக கவனம் பெற்றுள்ளது. ரஜினிகாந்த் உடனான சந்திப்பு தொடர்பான போட்டோக்களை எழிலன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சந்திப்பின் பின்னணி பற்றி விளக்கி உள்ளார். அந்த பதிவில், ''ஆயிரம் விளக்கு தொகுதியில் சூப்பர் ஸ்டார் சந்திப்பு... தொகுதியில் நடைபெற்ற பணிகள் தொகுப்பு அவரிடம் அளித்து உரையாடினோம்.. Man of Simplicity'' என கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழ்நாடு முழுவதும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் தற்போது வரை ரஜினிகாந்த் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் திமுகவிற்கு ஆதரவு கேட்கப்பட்டதாக என்ற கேள்வி எழுந்தது?. அதோடு ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ் கார்டன் சென்னை ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதிக்குள் தான் வரும். இதனால் எழிலன் தனக்கு ஆதரவு கோரினாரா? என்ற கேள்விகள் எழுந்தன.
இதுதொடர்பாக தற்போது வரை எந்த பதிலும் இல்லை. அதேவேளையில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு தேர்தலின்போதும் ரஜினிகாந்தை அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் சந்திப்பது வழக்கம். கடந்த 10 ஆண்டுகளாக இது நடந்து வருகிறது. குறிப்பாக ரஜினிகாந்த்- எழிலன் இடையே நல்ல உறவு உள்ளது. அந்த வகையில் தான் இன்றைய சந்திப்பு நடந்துள்ளதாம்.
தற்போது ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏவாக எழிலன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, நாம் தமிழர் கட்சி சார்பில் இயக்குநர் களஞ்சியம், தவெக சார்பில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் ஆகியோர் களமிறங்கி உள்ளனர்.
இதனால் தொகுதியில் போட்டி கடுமையாக உள்ளது. முன்னதாக கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் எழிலன் 71,867 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். அவர் நடிகை குஷ்புவை வீழ்த்தி வாகை சூடியிருந்தார். ஆயிரம் விளக்கில் பாஜகவில் களமிறங்கிய நடிகை குஷ்பு 39,405 ஓட்டுகள் வாங்கினார். இதனால் எழிலன் 32,462 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications