செந்தில் பாலாஜி பதவிக்கு ஆபத்தா? வழக்கின் பலம் & பலவீனம் என்ன? : வழக்கறிஞர் Decodes
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவர் வெளியே வந்த உடனேயே அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டதைக் கண்டித்திருந்த நிலையில், இனி வரும் காலங்களில் வழக்கு விசாரணை எப்படி நகரும் என்பது பற்றி பாஜக வழக்கறிஞர் விளக்கம் அளித்திருக்கிறார்.
மத்திய அரசின் அமலாக்கத் துறையாக் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதன் பின்னல் சில காலம் அவர் சிறையிலேயே இலாக்கா இல்லாத அமைச்சராகத் தொடர்ந்தார். அது மிகப்பெரிய சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து அவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கு பல மாதங்களாக நடைபெற்றுவந்தது.

பல முறை செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 472 நாட்கள் வரை அவர் சிறையிலிருந்துள்ளார். அவர் மீதான வழக்கு விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை. சாட்சியங்களை விசாரிக்கும் வரை அவரை சிறையில் வைத்திருப்பது சட்டப்படி முறையல்ல என்று நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஆகவே அவர் கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி விடுதலையானார். வெளியே வந்த உடனேயே செந்தில் பாலாஜிக்கு முன்பு வகித்த அதே துறைகள் மீண்டும் வழங்கப்பட்டு அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி பண மோசடி விவகாரத்தில் பாதிக்கப்பட வித்யா குமார் என்பவர் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதை நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி அடங்கிய அமர்வு அதை ஏற்றுக் கொண்டு மனுவை நேற்று விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் தனது வாதங்களை எடுத்து வைத்தார். அப்போது அவர், அமைச்சர் பதவியில் இல்லை என்று கூறி ஜாமின் பெற்ற செந்தில் பாலாஜி, வெளியே வந்த ஒரே நாள் இடைவெளியில் மறுபடியும் அமைச்சராக்கியுள்ளார். எனவே அமைச்சரை எதிர்த்து சாட்சியம் தரச் சாட்சிகள் தயங்கும் நிலை உருவாகியுள்ளது என வாதிட்டார்.
அதை ஏற்றுக் கொள்ள நீதிபதிகள் மனுதாரரின் குற்றச்சாட்டில் நியாயம் உள்ளது. அமைச்சர் பதவியில் இல்லை என்பதால்தான் ஜாமின் வழங்கினோம். பிணை கிடைத்த உடனேயே அமைச்சராகப் பதவியேற்றது ஏன்? பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சரவை எதிர்த்து எப்படி அச்சமில்லாமல் சாட்சியம் அளிப்பார்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்தக் கருத்து எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலருக்கும் ஏற்புடையதாக அமைந்துவிட்டதால், அது பற்றி விவாதித்து வருகின்றனர். திமுக அரசு மீது குற்றஞ்சாட்டிப் பேசியும் வருகின்றனர். இந்த வழக்கில் நிலை எப்படிப் போகும்? அதைப் பற்றி பேசியுள்ள பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் குமரகுரு, "செந்தில் பாலாஜி வழக்கைப் பொறுத்தவரை, 'நாங்கள் கொடுத்த உத்தரவை மாற்றமாட்டோம்' என்று நீதிபதிகள் மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டனர். ஜாமின் உத்தரவைத் திரும்பப் பெறமுடியாது என்பது அவர்களின் நிலைப்பாடு.
பொதுவாக ஒரு வழக்கில் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்ட பிறகு சிறைக்குச் செல்ல நேர்ந்தால், குற்றஞ்சாட்டப்பட்டவர் வெளியே வந்தால் சாட்சியைக் கலைத்துவிடுவார் என்ற ஒரு சந்தேகம் எழுந்தால், ஜாமின் கொடுக்கமாட்டார்கள். செந்தில் பாலாஜி வழக்கில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் 2 ஆயிரம் பேர். அத்தனை சாட்சிகளையும் விசாரிக்கும் வரை பல மாதங்கள் ஆகும். எனவே அதுவரை இவரைச் சிறையில் வைக்க முடியாது எனக் காரணம் காட்டித்தான் அவருக்கு ஜாமின் அளித்தார்கள். ஆனால், அவர் வெளியே வந்த உடனேயே அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அதிகாரம் கொண்ட பதவியில் உள்ளதால் அவர் சாட்சிகளைக் கலைக்கக் கூடும். அந்தச் சந்தேகம் இப்போது எழுந்துள்ளது என வழக்கை விசாரித்த நீதிபதி கூறியிருக்கிறார்.
பொன்முடி வழக்கைப் பொறுத்தவரை அவருக்கு எதிராக தீர்ப்பே வந்துவிட்டது. அவர் மேல்முறையீடு செய்கிறார். உடனே தண்டனையை நிறுத்தி வைத்தார்கள். அவர் வழக்கில் சாட்சியங்கள் அனைத்து விசாரிக்கப்பட்டு, அந்த ஆவணங்கள் நீதிமன்றத்தில் பதியப்பட்டுவிட்டன. பொன்முடி வெளியே இருந்தாலும் சாட்சிகளைக் கலைக்க முடியாது. ஏனெனில் விசாரணை முடிந்துவிட்டது. எனவே அவர் தண்டனையை உறுதி செய்யும் வரை அவர் அமைச்சராக தொடலாம். அதைத்தான் உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு அறிவுறுத்தி இருந்தது.
ஆனால், செந்தில் பாலாஜி வழக்கு அப்படி அல்ல. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் இனிமேல்தான் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க உள்ளனர். அப்படியான நிலையில் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அதே அதிகாரம் மிக்க அமைச்சர் பதவியைக் கொடுத்துள்ளதை நாங்கள் எப்படி ஏற்க முடியும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஒரு அதிருப்தியை நீதிமன்றம் வெளிப்படுத்தி இருக்கிறது. அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனச் சொல்லவில்லை.
20 ஆண்டுகள் முன்பு நீதிபதி லேசாக அதிருப்தியை வெளிப்படுத்தினாலே அரசு உடனே அதன் மீது ஒரு நடவடிக்கையை எடுக்கும். இப்போது அந்த மாதிரியான அரசியல் இல்லை. நீங்கள் மறைமுகமாகச் சொல்வதை எல்லாம் கண்டுகொள்ள முடியாது என்ற அளவில்தான் திமுக அரசின் செயல்பாடு இருக்கிறது. முன்பே செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக சிறையிலிருந்தபோது நீதிபதி அதில் தான் தலையிட முடியாது என்று சொன்னார். கூடவே அரசின் சம்பளம் பெறும் மந்திரி மக்கள் பணி எதையும் செய்யாமல் சும்மா இருக்கிறார். அதையும் முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும் என நாகரிகமாகச் சுட்டிக்காட்டி இருந்தார். அதேபோல்தான் இப்போதும் முதல்வரின் அதிகாரத்தில் தலையிடாமல் நடக்கும் பிழையை நீதிபதி எடுத்துக் கூறியுள்ளார்.
அடுத்த அமர்வில் செந்தில் பாலாஜி தரப்பில் தான் குற்றவாளி என்பது உறுதியாகவில்லை. சட்டப்படி நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன். அதனால் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதில் எந்தச் சட்டச்சிக்கலும் இல்லை எனப் பதில் மனுத் தாக்கல் செய்வார்கள். வேண்டும் எனில் மீண்டும் சாட்சிகளைக் கலைக்கமாட்டேன் என உறுதிமொழி கடிதம் அளிக்கிறேன் என்பார். அப்படி ஒன்றும் பெரிதாக நீதிமன்றம் எழுதிக் கொடுக்கச் சொல்லாது" என்கிறார்.












Click it and Unblock the Notifications