ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநர்.. விஜய்க்கு உதவப்போகும் "பொம்மை".. முதல்வராக ஒரே வழி இதுதான்?
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 நாட்கள் கடந்தும், புதிய அரசு அமைவதில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய், காங்கிரஸின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவைப் பெற்றிருந்த போதிலும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான மெஜாரிட்டி எண்ணான 118-ஐ இன்னும் நெருங்கவில்லை.
ஆளுநரின் நிபந்தனையும் சட்டச் சிக்கலும்
இன்று கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்லேகரைச் சந்தித்த விஜய், தனது தரப்பில் 112 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதங்களைச் சமர்ப்பித்தார். இருப்பினும், 234 இடங்களைக் கொண்ட தமிழகச் சட்டமன்றத்தில் ஆட்சியமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயம். தற்போதைய நிலையில் விஜய் தரப்பிடம் 6 இடங்கள் குறைவாக இருப்பதால், ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பலம் 107 ஆக உள்ளது. இதற்குக் காரணம், அக்கட்சியின் தலைவர் விஜய் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதே ஆகும். சட்டப்படி அவர் ஒரு தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு மற்றொன்றைத் துறக்க வேண்டிய சூழலில், தற்போதைய பலம் 107 ஆகக் கணக்கிடப்படுகிறது. இதற்கிடையில், போதிய பலம் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது என ஆளுநர் தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதோடு ஆளுநர் 118 எம்எல்ஏக்கள் ஆதரவை கேட்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனையும் செய்தும் வருகிறார்.
எஸ்.ஆர். பொம்மை தீர்ப்பு: ஆளுநரின் அதிகாரம் என்ன?
ஆளுநரின் இந்த நடவடிக்கை தற்போது அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 1994-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க 'எஸ்.ஆர். பொம்மை VS இந்திய ஒன்றியம்' வழக்கைச் சுட்டிக்காட்டி அரசியல் விமர்சகர்கள் ஆளுநரின் முடிவை விமர்சிக்கின்றனர்.
அந்தத் தீர்ப்பின்படி, ஒரு கட்சிக்குத் தெளிவான பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதை ஆளுநர் மாளிகையில் வைத்து முடிவு செய்யக் கூடாது. மாறாக, சட்டமன்றத்தின் தளத்தில் (Floor Test) மட்டுமே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும். எஸ்.ஆர். பொம்மை வழக்கின் முக்கிய சாராம்சங்கள் பின்வருமாறு:
சட்டமன்றமே இறுதித் தீர்ப்பு: ஒரு முதலமைச்சர் அல்லது அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்கும் ஒரே இடம் சட்டமன்றமே தவிர, ஆளுநரின் தனிப்பட்ட கருத்து அல்ல.
தனிப்பெரும் கட்சிக்கு முன்னுரிமை: தொங்கு சட்டமன்றம் அமையும் போது, அதிக இடங்களைப் பெற்ற கட்சி அல்லது தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை ஆட்சி அமைக்க அழைத்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வாய்ப்பளிக்க வேண்டும்.
நீதிமன்ற ஆய்வு: ஆளுநரின் முடிவுகள் தவறாக இருக்கும் பட்சத்தில், நீதிமன்றம் தலையிட்டு கலைக்கப்பட்ட ஆட்சியை மீண்டும் அமர்த்தவோ அல்லது ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யவோ அதிகாரம் உண்டு.
தற்போதைய சூழலில், விஜய் 112 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை வைத்துள்ள நிலையில், அவரை ஆட்சி அமைக்க அழைத்துவிட்டு, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் அளிப்பதே அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பைக் காக்கும் என சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.
பதவியேற்பு விழா நடக்குமா?
நாளை நடைபெறவிருந்த பதவியேற்பு விழா குறித்த அறிவிப்புகள் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆளுநர் தற்போது சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதால், அடுத்த சில மணிநேரங்களில் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.
விஜய்யின் சட்ட ஆலோசனைக் குழுவினர் மீண்டும் ஆளுநரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். "நாங்கள் தனிப்பெரும் கட்சியாக இருக்கிறோம், காங்கிரஸ் ஆதரவும் உள்ளது. மீதமுள்ள ஆதரவைச் சட்டமன்றத்தில் நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம்" என்பதே தவெக-வின் வாதமாக உள்ளது. தமிழகத்தில் ஆட்சி அரியணையில் அமரப்போவது யார் என்ற கேள்விக்கு விடை தெரியாமல் மக்கள் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications