பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு இருக்கா? வந்து விழுந்த கேள்வி.. வானதி சீனிவாசன் பதிலை பாருங்க
சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.200 குறைத்துள்ளதாகவும் தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் சொன்னபடி எப்போது விலையை குறைக்கும் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பினார். மேலும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தொடர்பாக எழுப்ப்பபட்ட கேள்விக்கும் அவர் பதிலளித்தார்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணைய் நிறுவனங்களே இந்தியாவில் நிர்ணயம் செய்து கொள்கின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை தினசரி அடிப்படையிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதத்திற்கு ஒரு முறை விலை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியாகிறது.

ஒவ்வொரு மாதமும் மாதத்தின் முதல் நாள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை சந்தை நிலவரத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த 29 ஆம் தேதி திடீரென அறிவித்தது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அதில்தான் விலை குறைப்பு முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி, வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டது. உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு மேலும் ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. அதாவது உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.400 மானியமாக கிடைக்கும். மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசு எப்போது தேர்தல் அறிக்கையில் சொன்னபடி விலையை ரூ.100 குறைக்கும் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 10 கோடி பெண்களுக்கு புதிதாக கேஸ் சிலிண்டர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக கொடுக்கப்பட்ட இணைப்புகளுக்கு கூடுதலாக ரூ.200 மனியம் கொடுக்கிறோம். இதெல்லாம் தேர்தல் காலத்தில் அறிவித்தது இல்லை. வாக்குறுதி இல்லை. ஆனாலும் பிரதமர் மோடி அறிவித்து இருக்கிறார். இதனால் ஏழை பெண்களுக்கு ஒரு சிலிண்டருக்கு ரூ.400 குறைகிறது. ஆனால், தேர்தல் வாக்குறுதியில் சிலிண்டருக்கு ரூ.100 குறைக்கப்படும் என அறிவித்து விட்டு இரண்டு வருஷமாக ஆட்சி நடத்தும் மாநில அரசுக்கு இதைப்பற்றி பேசும் எந்த அருகதையும் இல்லை" என்றார்.
அப்போது, பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பு உள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். மாநில அரசுகள் ஒத்துழைப்பு கொடுத்தால் அதிலும் கணிசமாக குறைக்க முடியும்" என்றார்.












Click it and Unblock the Notifications