தங்கம் வாங்க சரியான நேரமா இது? முதலீடு செய்யலாமா? தீபாவளிக்கு விலை ஏறுமா?
சென்னை: தங்கத்தின் விலையில் தேக்கநிலை நிலவிவரும் இந்த நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்வதுதான் புத்திசாலித்தனம் என்று பங்குச்சந்தை ஆலோசகர் தாமோதரன் கூறியுள்ளார்.
தங்கத்தின் விலை சில மாதங்களாக மிகக் கடுமையாக ஏறிக்கொண்டே இருந்த நிலையில், இப்போது லேசான தேக்கநிலையில் வந்து நிற்கிறது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் கிட்டத்தட்ட 6,850 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் 55 ஆயிரம் வரை உள்ளது. இந்தத் தேக்க நிலைக்குக் காரணம், மத்திய அரசு போட உள்ள புதிய பட்ஜெட்டில் ஏதேனும் வரி குறைப்பு செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதுதான்.

ஆடி மாதம் என்பதால் தங்கநகைகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் வழக்கத்தைவிடக் குறைந்துள்ளதும் காரணமாகச் சொல்லப்படுகிறது. இது கூட ஆன்லைன் வர்த்தகம் வந்த பிறகு சந்தையைப் பாதிக்கும் காரணியாக இல்லை என்றே சொல்கிறார்கள் சில நிதிநிலை ஆலோசகர்கள்.
தங்கம் விலை ஏறும்போது வாங்க முடியவில்லையே என ஆதங்கப்படும் மக்கள் அதன் விலை குறைவாக இருக்கும்போது அச்சத்தின் காரணமாக முதலீடு செய்ய அஞ்சுகிறார்கள். தங்கத்தை வாங்க அல்லது முதலீடு செய்ய தக்க சமயம் எது என்பது குழப்பமாகவே உள்ளது. இந்தத் தேக்க நிலை நிலவும் நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்யலாமா? அது பற்றி பங்குச் சந்தை ஆலோசகர் தாமோதரன் என்ன சொல்கிறார்? "தங்க முதலீடு என்பது பொதுமக்களுக்கு எப்போதும் அதிக பாதிப்பு தராத ஒன்றாகவே இருக்கிறது. குறைந்த பட்சம் போட்ட முதலீட்டுக்குக் கீழே இரங்காது என்பது உறுதி. அதனை நம்பித்தான் மக்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய முன் வருகிறார்கள். இப்போது தங்கத்தின் விலை அதிகமாக உள்ளது.

ஆகவே, முதலீடு செய்வது தேவையா? இல்லையா? என ஒரு குழப்பம் வரலாம். என்னைப் பொறுத்தவரைத் தங்கத்தின் மீது தாராளமாக முதலீடு செய்யலாம். இப்போது உள்ள விலை குறைவதற்கு வாய்ப்பே இல்லை. தங்கத்தின் விலை கூடிக்கொண்டே தான் போகும். இறங்காது. இப்போது கிராம் 7 ஆயிரம் உள்ளது. விரைவில் அது 8 ஆயிரம் வரை போகலாம். இங்கே 22 கேரட் தங்கம் பற்றித்தான் பற்றி நான் சொல்கிறேன். 24 கேரட் நிலைமையே வேறு. இன்னும் சொல்லப் போனால் ஒரு சவரன் என்பது ஒரு லட்சத்தைத் தொடங்கக்கூடிய காலம் விரைவில் வர உள்ளது என்பதுதான் உண்மை.
இப்போதைக்குச் சந்தை கொஞ்சம் தேக்க நிலையில்தான் உள்ளது. இந்தத் தேக்கம் ஏன் என்றால், கையில் பணம் வைத்துக் கொண்டுள்ளவர்கள் உள்ளே வருவதற்குத்தான். அவர்கள் வாங்கத் தொடங்கும்போது மீண்டும் விலை உயரும். அன்றாடம் 200 முதல் 500 வரையான விலை ஏற்றம் இறக்கம் இருக்கவே செய்யும். அது எப்போது சந்தையைப் பாதிக்காது.
ஆகவே, தைரியமாக தங்கம் வாங்கலாம். ஆனால், தங்கத்தை நேரடி பொருளாக வாங்கலாமா? அல்லது தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்யலாமா? என்பது பற்றி முக்கியமாக யோசிக்க வேண்டும். தங்கநகைகளை வாங்கும் போது நமக்கு அதன் அசல் விலையைவிட 25% அதிகம் கொடுத்துத்தான் வாங்குகிறோம். அதை வாங்கி வங்கி பெட்டகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். அதுவும் ஒரு செலவு.
கூடவே திரும்ப விற்க நினைக்கும் போது 30% கழிவு போடுவார்கள். இவை அனைத்தும் நஷ்டம்தான். எனவே இன்றைக்கு ஆன்லைன் முதலீடு வந்துவிட்டது. நாம் பழைய காலத்தில் இல்லை. ஆகவே பத்திரங்கள் மூலம் வாங்கும் தங்கத்திற்கு நல்ல இலாபம் கிடைக்கும். அதைத் தேர்வு செய்வதே புத்திசாலித்தனம். தங்கத்தை வாங்கி கையில் வைத்துக்கொள்ள வேண்டும் என ஆசைப்படுபவர் நகையாக அதை வாங்கிக் கொள்ளலாம்.
முதலீடு என நினைப்பவர்கள் பத்திரங்கள் மூலம் தங்க முதலீடு செய்வதே சிறப்பான செயல். ஏனென்றால், சிறுகச் சிறுக வாங்கலாம். மொத்தமாகப் பணத்தைச் சேர்த்து வாங்க வேண்டிய தேவை இல்லை. அப்படி வாங்கும் பத்திரங்களை நீண்ட முதலீடாக வைக்க வேண்டும். வாங்கி அடுத்த மாதமே விற்கக் கூடாது.
தங்களின் வாரிசுகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து வாங்க வேண்டும். அது நல்ல வளர்ச்சியை தரும். தேவையான காலத்தில் விற்று பணமாக்கிக் கொள்ளலாம். தங்க முதலீடு போலவே வெள்ளி முதலீடும் லாபம் தரக் கூடியதுதான். வரும் நாட்களில் அதுவும் ஒன்றரை லட்சத்தைத் தொடுவதற்கு வாய்ப்பு உள்ளது. சந்தை நிலவரம் அதையே சொல்கிறது. தங்கத்தை வாங்கும் போது தரமான கடையாகப் பார்த்து வாங்க வேண்டும். பல இடங்களில் 18 கேரட் தங்கத்தை 22 கேரட் எனச் சொல்லி விற்கிறார்கள். பெரிய கடைகளில் கூட இந்த தில்லுமுல்லு நடக்கின்றன. ஆகவே, எச்சரிக்கையாகப் பார்த்து வாங்க வேண்டும். கல் வைத்த நகைகளில் முதலீடு செய்யக் கூடாது. தங்கக் காசுகளாக வாங்கி சேர்ப்பது நல்லது. அதில் சேதாரம் வராது" என்கிறார்.












Click it and Unblock the Notifications