"சான்ஸே இல்லை".. இரவோடு இரவா ரவீந்திரநாத் போனாரே! ஓபிஎஸ்ஸுக்கு திமுக தந்த ரெட் சிக்னல்? என்ன நடந்தது
சென்னை: ஓ பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவில்தான் எல்லாம் எதிராக செல்கிறது என்றால்.. அதிமுகவிற்கு வெளியேவும் அவருக்கு பெரிதாக சப்போர்ட் எதுவும் கிடைக்கவில்லை. முக்கியமாக ஆளும் திமுக தரப்பில் இருந்து சப்போர்ட் கிடைக்கும் என்று தீவிரமாக எதிர்பார்த்த ஓ பன்னீர்செல்வத்திற்கு ஏமாற்றமே மிஞ்சி இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிட்டத்தட்ட 50 ஆண்டுகால அதிமுக வரலாற்றில் மிக முக்கியமான நாளை அக்கட்சி எதிர்கொண்டு உள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளர்களாக எம்ஜிஆர், ஜெயலலிதா, சசிகலா இருந்த நிலையில் அந்த பெரிய பதவியை நோக்கி எடப்பாடி பழனிசாமி வேகமாக நகர்ந்து வருகிறார்.
நாளை நடக்க உள்ள பொதுக்குழு கூட்டத்தில் இதற்காக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எடப்பாடி பழனிசாமி அதிகாரபூர்வமாக ஒற்றை தலைவராக ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்ப்பு
இந்த பொதுக்குழுவை எப்படியாவது தடுக்கலாம் என்று ஓ பன்னீர்செல்வம் தீவிரமாக முயன்று வருகிறார். இதற்காக அவர் மூன்று முயற்சிகளை மேற்கொண்டார்.
1. பொதுக்குழு நிர்வாகிகளை தன் பக்கம் இழக்க பார்த்தார் - தோல்வி
2. எடப்பாடியுடன் சமாதானம் பேசி, அவருக்கு கடிதம் எழுதி பொதுக்குழுவை தள்ளி வைக்க முயன்றார் - தோல்வி
3. பொதுக்குழுவினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்று போலீசுக்கு புகார் அளித்து கூட்டத்தை நிறுத்த பார்த்தார் - அதுவும் தோல்வி

போலீஸ்
இதில் 3வது பாயிண்ட்தான் முக்கியம். ஏனென்றால் அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு அனுமதி தரக் கூடாது என ஓபிஎஸ் ஆவடி ஆணையரகத்திற்கு மனு கொடுத்தார். அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை கோரிய ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை நிராகரித்து போலீஸ் உத்தரவிட்டுள்ளது. தனிநபரின் உள் அரங்கத்தில் கூட்டம் நடப்பதால் அனுமதி மறுக்க முடியாது என போலீஸ் பதில் அளித்துள்ளது. இதனால் அரசு தரப்பில் இருந்து தனக்கு சப்போர்ட் வரும் என்று எதிர்பார்த்த ஓபிஎஸ்ஸுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.

திமுக
முன்னதாக ஆளும் திமுக தரப்பை அணுகி, பொதுக்குழுவை ஒத்திவைக்க ஓபிஎஸ் தரப்பு முயன்று வருவதாக தகவல்கள் வருகின்றன. அதாவது பொதுக்குழு கூடினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும். பொதுக்குழுவில் மோதல் வந்தால் சட்ட ரீதியாக பெரிய பிரச்சனை வரும் என்று போலீசுக்கு புகார் அளித்து, அதன் மூலம் திமுக அரசு உதவியுடன் பொதுக்குழுவை பாதியில் நிறுத்த ஓபிஎஸ் தரப்பில் சிலர் முயன்று வருகிறார்கள் என்று கூறப்பட்டது. அதன் படியே போலீசுக்கு ஓபிஎஸ் தரப்பில் இருந்து கடிதமும் அனுப்பப்பட்டது.

மீட்டிங்
சமீபத்தில்தான் முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் மகன் எம்பி ஓ பி ரவீந்திரநாத்தும் சந்தித்து பேசினார். அதன்பின் நேற்று முதல்நாள் இரவோடு இரவாக ஓ பன்னீர்செல்வத்தை ஓபிஆர் சந்தித்து ஆலோசனைகளை செய்தார். பின்னர் சில அரசு தரப்பு புள்ளிகளையும் அவர் சந்தித்ததாக கூறப்பட்டது. அதோடு செய்தியாளர் சந்திப்பில், அரசு தரப்பும் அதிமுக பொதுக்குழு குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று ஓபி ரவீந்திரநாத் சூசகமாக குறிப்பிட்டு இருந்தார். அதாவது திமுக இதில் தலையிட வேண்டும் என்று சூசமாக ஓபிஆர் குறிப்பிட்டார்.

போலீஸ் மறுப்பு
ஆனால் போலீஸ் தரப்போ ஓ பன்னீர்செல்வதற்கு ஆதரவாக முடிவு எடுக்க மறுத்துவிட்டது. கூட்டத்தை தடை செய்ய சான்ஸே இல்லை என்று போலீஸ் கூறிவிட்டது. கிட்டத்தட்ட ஆளும் தரப்பு ஓபிஎஸ்ஸுக்கு கொடுத்த ரெட் சிக்னலாக இது பார்க்கப்படுகிறது. இது பற்றி திமுக தரப்பில் விசாரித்ததில், ஓபிஎஸ் தரப்பிற்கு ஆளும் தரப்பு எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. இதில் தலையிட விரும்பவில்லை. இது அதிமுக மேட்டர். இதில் தலையிட நாங்கள் என்ன பாஜகவா? . அவர்கள் விவகாரத்தில் தலையிட மாட்டோம். விதிப்படியே செயல்படுவோம் என்கிறார்கள் ஆளும் தரப்பினர்.












Click it and Unblock the Notifications