திமுகவை இனி கண்டுக்காதீங்க.. தவெக போனதுமே டோனை மாற்றிய IUML தலைவர் காதர் மொகிதீன்! கடும் அட்டாக்
சென்னை: திமுக கூட்டணியில் போட்டியிட்ட 2 தொகுதிகளில் வென்று தவெகவுடன் கைகோர்த்து அமைச்சரவையில் பங்கேற்றுள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை திமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இந்நிலையில் தான் வாடகை வாய்கள் என்று கூறி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரை கண்டுக்கொள்ள வேண்டாம் என்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பிறகு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி முதல்வர் விஜய்யின் தவெக அரசுக்கான ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது. மேலும் அமைச்சரவையிலும் பங்கேற்றது.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஷாஜகான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். அமைச்சரவையில் பங்கேற்ற பிறகு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அறிவித்தது. கட்சியின் பொதுக்குழு முடிவை தொடர்ந்து இந்த அறிவிப்பை கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் கடந்த 20ம் தேதி அறிவித்தார்.
இதையடுத்து திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள், ஆதரவாளர்கள் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விமர்சனத்துக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் கடும் பதிலடியை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ (திமுக கூட்டணியில் மதிமுக வெளியேறியது) ஆதரவு தெரிவித்துள்ளார். இதனை வரவேற்கிறோம். இது ஒரு நேர்மறையான அரசியல் வளர்ச்சி.
தவெக அரசுக்கு ஏற்கனவே கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்து வருகிறது. இதற்கான வழிக்காட்டுதல்களை காங்கிரஸ் வழங்கியது. தற்போது வைகோவும் தவெக அரசுக்கு தனது ஆதரவை நீட்டியுள்ளது. தமிழகத்தில் திமுக, பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகளை தவிர, மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தவெக அரசுக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளது. குறிப்பாக முன்பு திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்த பல கட்சிகள் இப்போது தவெக-விற்கான ஆதரவிற்கு மாறியுள்ளது.
தவெக அரசு சமூக நீதியுடனும், ஊழலற்ற முறையிலும், இணக்கமாகவும் செயல்பட்டு வருகிறது. இது சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இந்த அரசு தொடர்ந்து நல்லாட்சியை வழங்குவதோடு, தமிழகத்தில் தனது அடித்தளத்தை வலுவாக நிலைநிறுத்திக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.
அரசியல் ரீதியாக ஏற்பட்ட மாற்றங்களால் அடைந்த விரக்தியில் அவர்கள் (திமுக மற்றும் கூட்டணியில் உள்ளவர்கள்) பொறுப்பற்ற மற்றும் ஆதாரமற்ற கருத்துகளை கூறி வருகின்றனர். தவெக-வை ஆதரிக்கும் கட்சிகள் இத்தகைய விமர்சனங்களுக்குப் பதிலளித்து நேரத்தை வீணடிக்காது. தமிழகம் தற்போது "வாடகைத் தாய்மார்கள்" பற்றி பேசுவதிலிருந்து விலகி "வாடகை வாய்களை" காணும் நிலைக்கு வந்துவிட்டது. இத்தகைய விமர்சனங்களை ஆதரவாளர்கள் புறக்கணிக்க வேண்டும்.
விசிக தலைவர் தொல். திருமாவளவன் இத்தகைய விமர்சகர்களுக்குப் பதிலளிக்க வேண்டாம். உள்நோக்கம் கொண்டவர்களே இது போன்ற கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும், சமூக நீதியை நிலைநாட்டவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கவும் அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications