குற்றாலத்தால் குதூகலமான சசிகலா.. அடுத்த ஆக்சனுக்கு தயாராகும் சின்னம்மா? இந்த தடவை ஸ்கெட்ச் யாருக்கு?
சென்னை: தென்காசி சுற்றுப் பயணம் கொடுத்த வரவேற்பால் உற்சாகத்தில் இருக்கும் சசிகலா அடுத்தகட்ட 'அம்மாவின் வழி மக்கள் பயணம்' திட்டத்தை கையிலெடுத்திருக்கிறார். இந்த முறையும் தென் மாவட்டத்திலேயே அதாவது தென்காசிக்கு மிக அருகில் இருக்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். வரும் 13ஆம் தேதி முதல் நெல்லையின் பல்வேறு பகுதிகளில் தொண்டர்களை அவர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த அதிமுகவில் தற்போது மீண்டும் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆலோசிக்க கட்சி நிர்வாகிகளை தொகுதி வாரியாக அழைத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.

அப்படி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மீண்டும் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை கட்சிக்குள் கொண்டு வர வேண்டுமென குரல்கள் எழுந்ததாகவும், ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அப்படி யாரும் பேசவில்லை, தவறான செய்திகள் வெளியிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமை எச்சரித்தது.
இதற்கிடையே நான் தான் அதிமுக பொதுச் செயலாளர், கட்சி மீண்டும் ஒன்றிணைய வேண்டுமென கூறி வரும் சசிகலா, தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், திமுக தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை பேணிக் காத்திடவும், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவன் நல்லூர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிகளில் "அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை" மேற்கொள்கிறார் என அறிவிக்கப்பட்டது. சொன்னது போல் சிறப்பாகவே அமைந்தது அந்த பயணம்.
தேர்தல் பிரச்சாரத்தை போல ஒவ்வொரு பகுதிகளிலும் பந்தல் அமைத்து அதிக அளவில் நிர்வாகிகளை அழைத்து வர உத்தரவிடப்பட்டது. இது மட்டுமல்லாமல் சசிகலா, டிடிவி தினகரன், திவாகரனின் ஆதரவாளர்களை ஒன்றிணைத்து கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என திட்டமிட்டனர். இந்த திட்டம் ஓரளவு கை கொடுத்துள்ளதாகவே கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள். அதே நேரத்தில் அந்த பயணத்தில் அதிமுக நிர்வாகிகள் யாரையும் அவர் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ விமர்சித்துப் பேசவில்லை.
கட்சி ஒன்று சேர வேண்டும் என்று மட்டுமே பேசி வருகிறார். அதே நேரத்தில் கடந்த முறை திருவள்ளூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதை விட தற்போது சசிகலாவுக்கு அதிக ஆதரவு இருப்பதாகவும், நிச்சயம் 2026 இல் அனைவரையும் ஒருங்கிணைத்து தேர்தலை சந்திப்போம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இந்த நிலையில் தென்காசி சுற்றுப் பயணம் கொடுத்த வரவேற்பால் உற்சாகத்தில் இருக்கும் சசிகலா அடுத்தகட்ட 'அம்மாவின் வழி மக்கள் பயணம்' திட்டத்தை கையிலெடுத்திருக்கிறார்.
இந்த முறையும் தென் மாவட்டத்திலேயே அதாவது தென்காசிக்கு மிக அருகில் இருக்கும் திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். வரும் 13ஆம் தேதி முதல் நெல்லையின் பல்வேறு பகுதிகளில் தொண்டர்களை அவர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாம் கட்ட சுற்று பயணமானது ஆகஸ்ட் மாதம் 122ஆம் தேதி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் துவங்குகிறது. இதனையடுத்து திருநெல்வேலி மாவட்டத்துக்கு வரும் சசிகலா, அங்குள்ள சட்டமன்ற தொகுதிகளில் தொண்டர்களை சந்திக்கிறார். ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கி ஆறு நாட்கள் அங்கு பயணம் மேற்கொள்கிறார். அதாவது ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, அம்பாசமுத்திரம், ராதாபுரம் சட்டமன்ற தொகுதிகளின் பல்வேறு இடங்களில் தொண்டர்களை சசிகலா சந்தித்து பேசுகிறார். வழக்கம் போல அதிமுக ஒன்றாக இணைய வேண்டும் என்பது தான் இந்த பயணத்தின் போது சசிகலா எடுத்து வைக்கும் முக்கிய சாராம்சமாக இருக்கும் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதற்கான ஏற்பாடுகளை சசிகலாவின் ஆதரவாளர்கள் மட்டுமல்லாது, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளும். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் இணைந்து செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications