திட்டமிட்டபடி பொதுக் குழு.. ஓபிஎஸ்ஸும் வருவார்.. தீர்மானங்களை ஏற்பார்.. எடப்பாடி தரப்பு திட்டவட்டம்
சென்னை: திட்டமிட்டபடி சென்னை வானகரத்தில் திருமண மண்டபத்தில் வரும் 23 ஆம் தேதி பொதுக் குழு கூட்டம் கூடும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே பி முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் பொதுக் குழுவை தள்ளி வைக்க வேண்டும் என இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில் பொதுக் குழு நடைபெறவுள்ள மண்டபத்தில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என்ற தகவலை தாங்கள் தெரிவித்தீர்கள். கூட்டம் அழைக்கப்பட்டதன் பொருள் ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

பொதுக் குழு கூட்டம்
தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் அமைதி காப்பது அவசியம். எனவே கழகத்தின் நலன் கருதி வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்கலாம். அடுத்த கூட்டத்திற்கான இடம் , நாள் மற்றும் நேரத்தை கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய நாம் இருவரும் கலந்தாலோசித்து பின்னர் முடிவு செய்யலாம் என அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

பொதுக் குழு நடைபெறுமா
இதனால் பொதுக் குழு நடைபெறுமா, நடைபெறாதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பை சேர்ந்த கே பி முனுசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் வரும் 23 ஆம் தேதி பொதுக் குழு கூட்டம், செயற்குழு கூட்டம் நடைபெறும் என பொதுக் குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எடப்பாடி தரப்பு திட்டவட்டம்
எனவே வரும் 23 ஆம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும். ஓபிஎஸ் கடிதம் குறித்து எங்களுக்கு ஒன்றும் தெரியாது. சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம். அடுத்து நடைபெறும் கூட்டத்தில் அவர்களை அழைக்கலாம் என சொன்னதே ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்தான். பொதுக் குழு கூட்டம் குறித்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்றார்.

திருத்தங்கள்
அவர் அந்த கூட்டத்தில் பங்கேற்று சில திருத்தங்களை செய்தார். எனவே பொதுக் குழு கூட்டத்தில் ஓபிஎஸ் நிச்சயம் கலந்து கொள்வார். பொதுக் குழுவில் எடுக்கப்படும் முடிவுகளை ஏற்றுக் கொள்வார். பொதுக் குழு கூட்டம், செயற்குழு கூட்டம் கோலாகலமாக திருவிழா போல் நடைபெறும். இதில் சந்தேகமே இல்லை. பொதுக் குழுவுக்கு நாங்கள் யாருமே டிஜிபி அலுவலகத்தில் பாதுகாப்பு கோரவில்லை என கே பி முனுசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications