தமிழ்நாடு காங்.சின் ஒரே ஒரு ட்வீட்.. கொதித்து போன கார்த்தி சிதம்பரம்.. கட்சி மீதே சரமாரி கேள்வி!
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ட்வீட் ஒன்றுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் கோஷ்டி மோதல்கள் சண்டைகள் ஏற்பட தொடங்கி உள்ளன. சட்டசபை தேர்தலின் போது வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பெரிய மோதல் ஏற்பட்டது.
அப்போது காங்கிரஸ் எம்பி ஜோதிமணி போன்றவர்கள் வெளிப்படையாக காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் மோதல்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து இருந்தனர். சட்டசபை தேர்தல் முடிந்த காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல் பெரிய அளவில் ஏற்படாமல் இருந்தது.

என்ன
இந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதில் நிறைய கருத்து வேறுபாடுகள்., மோதல்கள் கட்சிக்குள் ஏற்பட தொடங்கி உள்ளன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக எம்பி ஜோதிமணி தேர்வு செய்யப்பட உள்ளதாக ஒரு பக்கம் தகவல்கள் வருகிறது. ஆனால் கட்சிக்கு உள்ளேயே இதை சிலர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

பேட்டி
அதோடு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரமும் கட்சி தலைவராகும் விருப்பத்தில் இருக்கிறார். இது தொடர்பாக வெளிப்படையாக அவரே சில ஊடகங்களில் பேட்டியும் அளித்து இருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆக வேண்டும், அந்த நோக்கம் எனக்கு உள்ளது என்று கார்த்தி சிதம்பரம் சில ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

மோதல்
இந்த நிலையில்தான் தமிழ்நாடு காங்கிரஸ் ட்வீட்டர் பக்கம் செய்த ட்வீட் ஒன்றுக்கு கார்த்தி சிதம்பரம் கொதிப்புடன் பதில் சொல்லி இருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த சில நாட்களில் இவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இவரின் புகைப்படத்தை வெளியிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் ட்வீட் ஒன்றை வெளியிட்டு இருந்தது.

ட்வீட்
அந்த ட்வீட்டில், "வீடியோவை மடைமாற்றம் செய்ய "விநாயகரை" கையில் எடுத்துள்ளது பாஜக. - ஒருங்கிணைப்பாளர் திரு சசிகாந்த் செந்தில்" என்று காங்கிரஸ் கமிட்டி குறிப்பிட்டு இருந்தது. இதற்குத்தான் தற்போது கார்த்தி சிதம்பரம் கோபமாக பதில் அளித்துள்ளார். இதற்கு பதில் அளித்த கார்த்தி சிதம்பரம், ஒருங்கிணைப்பாளர் என்றால் எதற்கு? மொத்த கட்சிக்கும் ஒருங்கிணைப்பாளரா?

கோபம்
அவருக்காக கட்சியில் புதிய பொறுப்பு எதுவும் உருவாக்கப்பட்டு இருக்கிறதா? என்று கோபமாக கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். சசிகாந்த் செந்திலை வெறும் ஒருங்கிணைப்பாளர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கார்த்தி சிதம்பரம் இப்படி கேள்வி எழுப்பி உள்ளார். பொதுவில் கார்த்தி சிதம்பரம் தனது கட்சிக்கு எதிராகவே இப்படி கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications