தவெகவை முடக்க முயற்சி.. 16 நாள் காரியம் முடிந்தவுடன் உண்மையை சொல்வோம் - ஆதவ் அர்ஜூனா
சென்னை: ‛‛கரூர் சம்பவத்தால் பேச முடியாத அளவுக்கு விஜய் உள்பட அனைவரும் வேதனையில் உள்ளோம். 16 நாள் காரியம் முடிந்தவுடன் மக்களை சந்திப்பதற்கான பயண திட்டத்தை உருவாக்கி வருகிறோம். 16 நாள் முடிவடைந்தவுடன் மற்ற விஷயங்கள் பற்றி பேசுகிறோம். எங்கள் கட்சியின் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை சமானியனாக எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறோம்'' என்று தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.
கடந்த மாதம் 27 ம் தேதி தவெக தலைவர் விஜய் கரூர் வேலுச்சாமி புரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். இந்த விவகாரத்தில் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. .இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பிரிவின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஆதவ் அர்ஜூனா கூறியதாவது:
பொதுவாக நம் வீட்டிலோ, குடும்பத்திலோ மிகப்பெரிய இழப்பு ஏற்படும்போது 16 நாள் மிகப்பெரிய துக்க நாளாக நாம் வலியுடன் இருப்போம். இன்று எங்களின் தலைவரும் (விஜய்) சரி, தமிழக வெற்றி கழகமும் சரி, எங்களின் தோழர்களும் சரி எங்களின் குடும்பத்தில் இறந்த உறவுகளுக்காக துக்கத்தில் இருக்கிறோம்.
16 நாள் காரியம் முடியும் வரை பேச முடியாத மிகுந்த வலியுடன் இருந்து வருகிறோம். எங்களின் நியாயங்களை சொல்வதற்கும், எங்கள் மீதான அவதூறுகளுக்கு பதில் சொல்லவதற்காக எங்களின் 41 உறவுகளை இழந்த குடும்பத்துடன் வலி மிகுந்த நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறோம்.
இந்த 16 நாள் காரியம் முடியும் வரை எங்களின் தலைவரின் முடிவும் சரி, எங்களின் முடிவும் சரி எந்தவிதமான அரசியல், அவதூறு, தவறான செய்திகள் பரப்பும்போதும் பதில் கொடுக்காமல் இருக்கிறோம். 16 நாள் காரியம் முடிந்தவுடன் உண்மை என்னவோ அதனை கண்டிப்பாக சொல்வோம்.
எங்கள் தலைவர் மீதும், கட்சியின் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி எங்களின் நிர்வாகிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் உள்ளது. இந்த இழப்பையும்,வலியையும் மக்களுடன் அமைதியாக இருந்து சமாளிக்கிறோம். இந்த கட்சியை முடக்க வேண்டும் என்று நினைக்கும்போது எங்களின் தலைவர் (விஜய்) சமானிய மனிதரின் நம்பிக்கையாக நீதித்துறையை நாடி உண்மையை கொண்டு வர உள்ளார். அதற்கான போராட்டத்தை தொடங்கி உள்ளார்.
16 நாள் காரியம் முடிந்தவுடன் மக்களை சந்திப்பதற்கான பயண திட்டத்தை உருவாக்கி வருகிறோம். 16 நாள் முடிவடைந்தவுடன் மற்ற விஷயங்கள் பற்றி பேசுகிறோம். எங்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். டெல்லியில் 3 நாட்களாக என் வீட்டு முன்பு பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
உச்சநீதிமன்ற தீர்ப்பை சமானியன் மனிதராக எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறோம். உண்மை வெளியே வரும். கட்சியின் மாவட்ட செயலாளர்களை கைது செய்துள்ளார்கள். சட்டத்துக்கு அப்பாற்பட்டு எங்களின் மாவட்ட செயலாளர்களை கைது செய்து வருகின்றனர். அவர்களை வெளியே கொண்டு வருவதற்கான பணி உள்ளது. அந்த பணிகளை நாங்கள் தொடங்கி உள்ளோம். 16 நாள் காரியம் முடிவடைந்தவுடன் எல்லா உண்மைகளையும் நாங்கள் சொல்வோம்’’ என்றார்.












Click it and Unblock the Notifications