கரூர் கல்லறைகளில் புல்லே முளைச்சுருச்சு! விஜய் இன்னும் வரலையே! 41 ஆத்மாக்களுக்கு நீதி கிடைக்குமா?
சென்னை: கரூரில் நடிகரும் தமிழக தலைவருமான விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியல், நீதித்துறை, மக்களின் மனநிலையிலும் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மூன்று வாரங்கள் கடந்துவிட்டன. ஆனால், விஜய் இன்னும் அங்கு செல்லவில்லை என்பது கடும் விமர்சனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இவ்வழக்கில் சிபிஐ விசாரணையை தொடங்கி இருக்கும் நிலையில், ஏற்கனவே சிபிஐ வசம் உள்ள வழக்குகளே தீர்க்கப்படாத நிலையில், இந்த வழக்கும் என்னாகுமோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க, நடிகரும் தவெக தலைவருமான விஜய் திட்டமிட்டிருந்த கரூர் பயணம் தள்ளிப்போயுள்ளது.

அக்டோபர் 17ஆம் தேதி விஜய் கரூருக்கு வருவதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதலில், இந்த சம்பவத்துக்கான விசாரணையை தமிழ்நாடு காவல்துறை தொடங்கியது.
கரூர் விபத்து
ஆனால் சிலர் அதில் நம்பிக்கை இல்லையெனக் கூறி, மத்திய புலனாய்வு அமைப்பான (CBI) சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வை அணுகினர். அந்த மனுவை நீதிமன்றம் தொடக்க நிலையிலேயே "விசாரணை இன்னும் ஆரம்பித்திருக்கும்போது எவ்வாறு நம்பிக்கை இழந்தீர்கள்?" என்று கேள்வி எழுப்பி தள்ளுபடி செய்தது. இதே நேரத்தில், கூட்டங்களில் நெரிசல் ஏற்படாமல் தடுக்கும் வழிமுறைகள் உருவாக்க வேண்டும் எனும் தனி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுவை விசாரிக்கும் போது, நீதிபதி செந்தில்குமார், விஜய்யின் நடவடிக்கைகள் குறித்து சில கருத்துகளை வெளிப்படுத்தினார்.
சிபிஐ விசாரணை
பின்னர், மதுரை காவல் துணை ஆணையர் அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவிட்டார். இதற்கிடையில், உச்ச நீதிமன்றத்தில் விஜயின் கட்சித் தரப்பும், உயிரிழந்தோரின் குடும்பங்களின் தரப்பும் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்தனர். அதனை விசாரித்த நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா ஆகியோர், "மதுரை எல்லைக்குள் வரும் வழக்கை சென்னை அமர்வு ஏன் எடுத்தது?" உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பினர். பின்னர், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடைபெற உத்தரவிடப்பட்டது. அதேசமயம், தமிழ்நாடு அரசு அமைத்த ஒருநபர் ஆணையமும், உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவும் ரத்து செய்யப்பட்டன.
உச்ச நீதிமன்றம்
புதிய நிபந்தனையாக, சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் குழுவில் உள்ள காவல் அதிகாரிகள் "தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் தமிழர்கள் இருக்கக்கூடாது" என்ற புதுமையான உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பித்தது. இந்நிலையில், நடிகர் விஜய் சம்பவத்துக்குப் பிறகு எந்தவிதமான பொது கருத்தும் வெளியிடாமல் மவுனம் காத்துள்ளார். இதனால் சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் பரவி வருகின்றன. அதற்கிடையில், அரசு அலுவலர்கள் ஊடகங்களின் வழியாக சம்பவ விவரங்களை விளக்கியது, "பாரபட்சம் காட்டுவதாக" உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
சிபிஐ விசாரணை
மற்றொரு புறம், சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்த பாதிக்கப்பட்டோர் தரப்பினரின் நம்பகத்தன்மை மீதும் கேள்விகள் எழுந்துள்ளன. வழக்குத் தொடுத்ததாகக் கூறப்படும் ஒருவரே "எனக்கு வழக்கு பற்றித் தெரியாது, கையெழுத்து பெற்றுச் சென்றனர்" என்று வெளியில் தெரிவித்துள்ளார். இதனால் வழக்கின் அடிப்படை ஆவணங்களின் நம்பகத்தன்மை குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
விஜய் மீது விமர்சனம்
நீதிமன்றம் "சிபிஐ விசாரணை தான் சுதந்திரமானது" என்று கூறினாலும், பல முன்னாள் வழக்குகளில் சிபிஐ செயல்பாடுகள் குறித்து உச்சநீதிமன்றமே "மத்திய அரசின் கூண்டுக்கிளி" என்று விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. இதனால், கரூர்ப் பலி வழக்கில் உண்மையான நியாயம் வெளி வருமா அல்லது அரசியலுக்காக இப்படி செய்யப்படுகிறதா? என்கிற கேள்விக்கு இன்னும் விடையில்லாமல் உள்ளது.
தமிழ்நாடு அரசியல்
கரூரில் உயிரிழந்த 41 பேரின் ஆன்மாக்கள், தங்களின் மரணம் குறித்த இந்த அரசியல் விளையாட்டுகளை மேலிருந்து பார்த்துக் கொண்டிருப்பதாக மக்களிடையே உணர்வு உருவாகியுள்ளது. இந்த வழக்கின் முடிவு எதுவாக இருந்தாலும், அது தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயமாகும் என்பது மட்டும் உறுதி. ஏற்கனவே ஆயிரக்கணக்கான முக்கிய வழக்குகள் சிபிஐ வசம் தேங்கிக் கிடக்கும் நிலையில் பத்தோடு பதினொன்றாக கரூர் வழக்கும் போய்விடுமோ என்ற கேள்வி பாதிக்கப்பட்ட மக்களிடையே எழுந்திருக்கிறது. இதனை எல்லாம் தவிடு பொடியாக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பு..












Click it and Unblock the Notifications