தப்பிக்க முடியாது தவெக..ஆக்ஷனில் இறங்கும் அஸ்ரா கார்க்! கண்காணிப்பு வளையத்தில் வந்த கரூர்! பரபர
சென்னை: கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சார கூட்டம் பெரும் நெரிசலாக மாறி, 41 உயிர்களை பறித்தது. இந்த துயரமான சம்பவம் தமிழக அரசியலையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தற்போது, அந்த கூட்ட நெரிசல் வழக்கை தீவிரமாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வழக்கு தொடர்பான ஆவணங்களை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவிடம் கரூர் ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணையை துவக்க இருக்கிறது
செப்டம்பர் 27ஆம் தேதி நடிகர் விஜய் தலைமையிலான தவெக கட்சியின் பிரச்சார கூட்டம் கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்றது. பெரும் திரளான மக்கள் கூட்டம் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட நெரிசலில் சுமார் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்ததோடு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து விசாரணை மேற்கொண்டார்.

கரூர் கூட்ட நெரிசல்
தொடக்கத்தில் கரூர் டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் மாற்றப்பட்டு, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன் பொறுப்பேற்றார். தற்போது, வழக்கை மேலும் ஆழமாக விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் நாமக்கல் எஸ்பிக்கள் சியாமளா தேவி, விமலா உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன் நேற்று வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவிடம் ஒப்படைத்தார்.
சிறப்பு புலனாய்வு குழு
இந்த சிறப்பு குழு இன்று (அக்டோபர் 5) கரூருக்கு சென்று சம்பவ இடத்தை ஆய்வு செய்யவுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், நிகழ்ச்சியில் இருந்த சாட்சிகள் உள்ளிட்டோரிடம் நேரில் விசாரணை நடத்தும் திட்டமும் உள்ளது. கூட்ட நெரிசலுக்கான காரணம் என்ன, எந்த அமைப்பின் தவறுகள் காரணமாக இத்தகைய துயரம் ஏற்பட்டது, இதில் அரசியல் உள்நோக்கம் ஏதும் உள்ளதா என்பன உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் குழு விசாரணை மேற்கொள்ளும். பின்னர் அதன் அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது.
கட்சி தலைவர்கள் கைது
இந்நிலையில், இந்த வழக்கில் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மத்திய மாநகர செயலாளர் மாசி பவுன்ராஜ் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் கைது நடவடிக்கையில் இருந்து தற்காப்பதற்காக முன் ஜாமீன் மனுவும் தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ்நாடு அரசியல்
இதுமட்டுமின்றி, இந்த சம்பவம் தேசிய அரசியல் வட்டாரத்திலும் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல். முருகன், தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) கட்சிகளின் எம்.பி.க்கள் எட்டு பேர், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் சந்தித்து நிலைமையைப் பற்றி அறிந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications