விஜய் கனவு அவ்ளோதானா.. காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் எடுத்த முக்கிய முடிவு.. பரபர தகவல்
சென்னை: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வரும் தேர்தலில் திமுக கூட்டணியோடுதான் பயணம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெறவும் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார்.

காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் மிகுந்த கவனம் பெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடாங்கர், தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில், தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கூட்டணி குறித்தும், கூட்டணியில் அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை கேட்டுப் பெறுவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணியோடுதான் வரும் தேர்தலில் பயணிக்க முடிவு எடுக்கப்பட்டதாகவும், கூடுதல் தொகுதிகளை திமுக கூட்டணியில் கேட்டுப் பெற நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
பீகாரை போன்று நடக்காமல் இருக்க
இந்தக் கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடாங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
"தமிழகத்தில் சுமார் 22 ஆயிரம் கிராமங்களில் கிராமக் கமிட்டிகளை அமைத்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் வலுவாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி வருகிறோம்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் பீகாரைப் போன்று நடைபெற்று விடாமல் பார்த்துக் கொள்ள வாக்குச்சாவடி முகவர்களை அறிவுறுத்தி உள்ளோம்.
கட்சியை வலுப்படுத்த முழு கவனம்
தமிழ்நாட்டில் காங்கிரஸ் நடத்தி வரும் வாக்குத் திருட்டுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் 76 லட்சத்து 6 ஆயிரத்து 681 கையெழுத்துக்களை பெற்றுள்ளோம். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறோம். வாக்குச்சாவடி முகவர்கள், கிராமக் கமிட்டிகளை வலுப்படுத்தி வருகிறோம். உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறோம்.
இந்தப் பணிகளை 234 தொகுதிகளிலும் மேற்கொண்டாலும், 125 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியின் மூலம் கூட்டணி கட்சிகளும் பயன் அடைவார்கள். கூட்டணி, கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டுப் பெறுவது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது ஆகியவை குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்," என்றார்.
தவெகவை விமர்சிக்காத காங்கிரஸ்
கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜயுடன் ராகுல் காந்தி பேசி ஆறுதல் கூறியதாக தகவல் வெளியானது. இதற்கிடையில், சட்டமன்ற தேர்தலில் தவெக - காங்கிரஸ் கூட்டணி அமையுமா என்ற பேச்சும் எழுந்து வருகிறது. ஏனெனில், விஜய் இதுவரை தனது பேச்சில் எந்த இடத்திலும் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கவில்லை. ராகுல் காந்தியுடன் விஜய்க்கு நல்ல நட்பும் ஆரம்பம் முதலே உள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர்களும் தவெகவை பெரிதாக விமர்சிப்பது இல்லை. 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும், ஆட்சியில் பங்கு கேட்போம் என்றும் காங்கிரஸ் கட்சியினர் பேசி வருகிறார்கள். காங்கிரஸ் இப்படி பேசி வருவதற்கு பின்னால் தவெக இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறும் கருத்தாக இருந்தது.
திமுக கூட்டணியே தொடரும்
இந்த நிலையில்தான், காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் திமுக கூட்டணியோடுதான் பயணிப்போம் என அழுத்தமாக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ள சூழலில், திமுக கூட்டணியை உடைக்கும் தவெகவின் பிளான் தோல்வியில்தான் முடியும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications